தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 04 - சசிரேகா
மறுநாள் காலையில் சுறுசுறுப்பாக எழுந்து ரெடியாகி வந்தான் ஆனந்த்
”வாடா ரொம்ப பரப்பரப்பா இருக்க என்ன விசயம்“
”மாமா வேற ஊர்ல இல்லை, ஆபீசை நான்தானே பார்த்துக்கனும்க்கா, ஆள் இல்லைன்னா ஆபீஸ் நடக்காதே”
”உன் மாமா இதுபோல நிறைய முறை ஊருக்கு போயிருக்காரு, அப்பலாம் ஆபீஸ் நடக்கலையா என்ன”
”இருக்கலாம் ஆனா இப்ப நான் வந்துட்டேன்லக்கா சரி சரி டிபன் வை நான் சாப்பிட்டு கிளம்பறேன்”
என சொல்ல அவளும் அவனுக்காக டிபன் எடுத்து வைக்க அவன் அதை அரக்க பரக்க சாப்பிட ஆனந்தியோ நொந்துக் கொண்டாள்.
”சரிக்கா பத்திரமா வீட்லயே இரு நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு தனது காரில் பறந்தான் ஆபீஸை நோக்கி ஆனந்தியும் ஆனந்திற்கு இந்தளவுக்கு பொறுப்பு வந்துவிட்டதை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
வேண்டுமென்றே ஆனந்த் ரோஜா வீடு இருக்கும் தெரு பக்கமே சென்றான். அந்நேரம் பார்த்து ரோஜா வீட்டிற்கு பக்கத்து பங்களாவில் வேலை செய்யும் வேலைக்காரி வேண்டுமென்றே குப்பையை அவளின் வீட்டின் முன் அதுவும் அவள் வரைந்திருந்த கலர் கோலத்தின் மீது கொட்ட அவளுக்கு வந்ததே கோபம் ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அந்த குப்பையை அள்ளி சற்று தூரத்தில் இருந்த குப்பை தொட்டியில் கொட்டிவிட்டு வந்து தனது அழிந்த கோலத்தை சரியாக்கினாள். அவளின் தாத்தா வந்தார்
”தினமும் இவனுங்களுக்கு இதே வேலை, வீட்டை காலி செய்ய வைக்க என்னென்ன செய்றாங்க பாரு, இது வீடுன்னு நினைச்சாங்களா இல்லை குப்பை தொட்டின்னு நினைச்சாங்களா வரவர இவனுங்களோட அட்டூழியம் தாங்க முடியலை“