கோபம் எல்லாமே அந்த சந்திப்பு முதலே அவனுக்கு ரசிக்கும் படி தெரிந்தது!
ஆனால், அதே கோபம், பேச்சு, நடவடிக்கை தான் அம்மா, கீதா தொடங்கி மற்றவர்கள் அனைவருக்கும் கிருத்திகாவை கெட்டவளாக காட்டியதும்! ஒருவேளை அவனே அந்த ‘அதிரடி’ சந்திப்பு இல்லாமல் அவளை விஜய் வழியாகவோ, கீதா வழியாகவோ தெரிந்துக் கொள்ள நேர்ந்திருந்தால் அப்படி தான் யோசித்திருப்பானோ என்னவோ...
அவனை பொறுத்த வரையில் கிருத்திகா அழகிய பூ... உருவத்தில் மட்டும் அல்லாது, மனதிலும் மிக மிக அழகிய ரோஜா பூ... அந்த ரோஜாவை சுற்றி சில பல முட்கள் இருக்க தான் செய்கிறது! ஆனால் அதுவும் இந்த ரோஜாவிற்கு தனி கவர்ச்சியை தான் கொடுப்பதாக அவனுக்கு தோன்றியது!!!
“டேய் தியாகு!!!” விஜயின் சத்தமானக் குரலில் சிந்தனையில் இருந்து வெளியே வந்த தியாகராஜன், அதன் பிறகே அங்கே விஜய் மட்டுமல்லாமல், ரங்கராஜன், சிவகாமி, கீதாவும் இருப்பதை கவனித்தான்!
மெல்லிய பாயிஷ் சிரிப்புடன் எழுந்தவன், அவர்களிடம், “சாரி, உங்களை கவனிக்கலை,” என்றான்.
“அதெல்லாம் பரவாயில்லைடா! பிரின்சஸ் கிட்ட தனியா பேசினதுக்கு அப்புறமும் நீ அடி கிடி இல்லாம தெளிவா எழுந்து நிக்குறீயே, அதுவே பெரிய ரெகார்ட் தான்,” என்றான் விஜய் கேலியாக!
ரங்கராஜன், சிவகாமி முகத்தில் சிரிப்பு தோன்றினாலும், கவலையும் தெரியவும்,
“விஜய், சும்மா சும்மா இப்படி உன் சிஸ்டர் பத்தி சொல்றதை நிறுத்து! என் வருங்கால மனைவி பத்தி என் பெஸ்ட் ஃப்ரென்டான நீ இப்படி பேசினாலும் எனக்குப் பிடிக்காது! நீ கீர்த்தியோட அண்ணனா இருந்தாலும் அதே தான்,” என்றான் தியாகு!
அவன் எதிர்பார்த்ததுப் போலவே அடுத்த வினாடி பெரியவர்கள் இருவர் முகமும் மலர்ந்தது!