'ஓ! ஒண்ணுமே இல்லைங்கிறதுனாலேதான் சோகமா உட்கார்ந்திருக்கியா. சரி விடு. ஒண்ணு ஒண்ணா திரும்ப கொண்டு வந்திடுவோம். என்றார் புன்னகைத்தபடியே. நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என் கூட வரியா?
ஏனோ அவர் எங்கே அழைத்து சென்றாலும் அவருடனே செல்ல தயாராய் இருந்தது அவன் மனம். பேசாமல் தலையசைத்தான்.
வசந்தும் மனோவின் அப்பாவும் டில்லியிருந்து கிளம்பிய அடுத்த சில மணி நேரங்களில் அங்கே சென்று இறங்கியிருந்தனர்.
அவர்கள் சென்று இறங்கிய இடம் காஷ்மீரின் தலைநகரம் ஸ்ரீநகர்.
எதற்கு இங்கே வந்திருக்கிறோம் என்று கூட கேட்க தோன்றாதவனாய், உற்சாகமாய் நடந்தவரின் பின்னாலேயே நடந்தான் வசந்த்.
ஸ்ரீநகரின் தெருக்களில் ஓடியது அந்த டாக்ஸி. அந்த இரவு நேரத்தில், படகு இல்லங்களில் இருந்த மின் விளக்குகளின் ஒளியால் மின்னிய தால் ஏரியின் அழகை வியந்து பார்த்த படியே வசந்த் அமர்ந்திருக்க, சில நிமிடங்கள் கழித்து அந்த வீட்டு வாசலில் சென்று நின்றது டாக்ஸி.
வாசலில் வந்து வரவேற்ற அந்த மனிதரை பார்த்ததும் மகிழ்ந்து போனான் வசந்த்.
எப்படிப்பா இருக்கே? என்றார் அவர். 'உன்னை பார்த்து அஞ்சாறு வருஷமாச்சு. நாங்க டில்லியை விட்டு கிளம்பினதுக்கப்புறம் உன்னை பார்க்கவேயில்லையே வசந்த்'. அவனை தன் தோளோடு அணைத்துக்கொண்டார் அவர்.
நேரம் மணி பன்னிரெண்டை நெருங்கி இருந்தாலும் சுடச்சுட அவர் கொடுத்த அந்த சப்பாத்தி தேவாமிரதமாய் இருந்தது அவனுக்கு.
என்ன இவ்வளவு தானா? இன்னும் ரெண்டு சாப்பிடு வசந்த்.
அப்புறம் சொல்லு வசந்த், என்ன பண்றே நீ? கல்யாணம் ஆயிடுச்சா வசந்த் உனக்கு?
அங்கே வந்திறங்கி அரைமணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை. அவர் வாயிலிருந்து வசந்த் என்ற வார்த்தை ஐம்பது முறையாவது ஒலித்து இருக்கும்.
ஏதோ பழைய நினைவுகளில் மனம் நீந்திக்கொண்டிருக்க அதே பழைய நினைவுகளில் அவர் மனமும் சஞ்சரித்துக்கொண்டிருந்த நிலையில், சட்டென கேட்டான் வசந்த்
அப்பா...............நீங்க பேசாம என் கூட பெங்களூர் வந்திடறீங்களா?
அவர் சற்று திகைத்து நிமிர, தான் வசந்தை அங்கே அழைத்து வந்த வேலை சரியாய் நடந்து கொண்டிருக்கிறது என்ற திருப்தியில் புன்னகைத்தார் மனோவின் அப்பா.
நானா? பெங்களூருக்கா? உன் வீட்டுக்கா? என்றவரை பார்த்து வசந்த் சொன்னான் 'என் வீட்டுகில்ல. நம்ம வீட்டுக்கு.
நான் அங்கே வந்து என்ன பண்ண போறேன்?
இங்கே தனியா இருந்து என்ன பண்றீங்களோ அங்கே வந்தும் அதையே பண்ணுங்க. என்றான் சிரித்தபடியே.
அதுக்கில்லைப்பா......
'எதுவும் பேசாதீங்க. நீங்க பெங்களூர் வரீங்க. முடிவு பண்ணியாச்சு அவ்வளவுதான்.' அவன் குரலில் உற்சாகம் நிரம்பி இருந்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களில் பேசி பேசியே அவரை சம்மதிக்க வைத்திருந்தனர் இருவரும். மனநிறைவுடனே சம்மதித்திருந்தார் அவர்.
அன்றிரவு, அணிந்திருந்த ஸ்வெட்டர்ரையும், கையுறையையும் மீறி ஊசிப்போட்ட ஸ்ரீநகரின் குளிர் காற்றை அனுபவித்தபடியே மொட்டைமாடியில் நின்றிருந்த வசந்தின் அருகில் வந்தார் மனோவின் அப்பா.
'என்னப்பா கொஞ்சம் சந்தோஷம் திரும்ப வந்திருக்கா?
கொஞ்சமில்லை நிறையவே.......... தேங்க்ஸ் அங்கிள். என்று புன்னகைத்தவனை தன் தோளோடு அணைத்துக்கொண்டார் மனோவின் அப்பா.
வசந்துக்கு மறுபடியும் ஒரு அப்பா கிடைத்த மனநிறைவு.
அவர் வசந்த் அப்பாவின் இன்னொரு நண்பர். அவரது மகன் பிரவீன்
வசந்த், பிரவீண், மனோ என மூவருமே ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். வசந்தும், பிரவீனும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தார்கள். வசந்த் இவரையும் அப்பா என்றே அழைப்பான். அவன் அப்பா ஊரில் இல்லாத எத்தனையோ நாட்கள் தான் பெற்ற பிள்ளையாய் வசந்தை கவனித்துக்கொண்டவர் இவர்.
எத்தனையோ இரவுகள் வசந்த், மனோ, பிரவீன் என மூவரும் பிரவீன் வீட்டிலேயே படித்து, சாப்பிட்டு, அவன் வீட்டிலேயே உறங்கியிருக்கிறார்கள். அவர் மூன்று பிள்ளைகளுக்கும் நடுவில் எந்த பேதமும் பார்த்ததில்லை.
சில வருடங்களுக்கு பிறகு, பிரவீன் இந்திய ராணுவத்தில் சேர்ந்திருந்தான். அதன் பிறகு அவர்கள் ஸ்ரீநகருக்கு குடிபெயர்ந்திருந்தனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் தேசத்துக்காகவே தன்னை தியாகம் செய்துவிட்டான் பிரவீன். வசந்த் அவன் தந்தையை இழந்ததும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் தான்.
அப்போதெல்லாம் மனோவின் அப்பாவுக்கு எதுவுமே தோன்றவில்லை. இப்போது சில நாட்களுக்கு முன் இவரை சந்தித்தார் மனோவின் அப்பா. தனக்கென்று யாருமே இல்லாமல் அந்த மனிதர் மொத்தமாய் தளர்ந்து போய், ஏதோ பெயருக்கு வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தபோது மனோ அப்பாவின் மனதிற்குள் ஒரு மின்னல்.
அப்பாவின் நினைவுகளில் வருந்திக்கொண்டிருக்கும் வசந்தையும் ப்ரவீனையே நினைத்துக்கொண்டிருக்கும் இவரையும் ஒன்று சேர்த்து விட்டால் எப்படி இருக்கும்?
இதனால் இரண்டு மனங்களிலும் இருக்கும் வெற்றிடம் சற்று நிரம்பி விடாதா என்ன? பிள்ளைகளைதான் தத்து எடுத்துக்கொள்ள வேண்டுமா? கொஞ்சம் வித்தியாசமாய் வசந்த் ஒரு அப்பாவை தத்து எடுத்துக்கொள்ளட்டுமே!
இன்று காலை தனது அப்பாவுடனும் மனோவின் அப்பாவுடன் பெங்களூர் வந்து இறங்கி விட்டிருந்தான் வசந்த்.
அது சரி என்றாள் ஸ்வேதா. 'ஏன் போன் கிடைக்கலை.?
அதுவா?. அவனோடது 'ப்ரீ பெயிட் மொபைல். ஸ்ரீநகர்லே, ப்ரீ பெயிட் மொபைல் வொர்க் ஆகாது.'
வசந்துடன் பேசிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. மெல்லக்கேட்டாள் 'எங்கப்பாவை மன்னிச்சிட்டியா வசந்த். எப்படி அவரை கூட்டிட்டு வந்தே?
நடந்தது இதுதான்.
பெங்களூருக்கு வந்தது முதலே சாந்தினியின் மனம் அர்ச்சனாவின் அப்பாவையே சுற்றிக்கொண்டிருந்தது.
எல்லாரும் ஹோட்டலுக்கு கிளம்பி சென்றதும் அப்பாவின் அறையை நோக்கி நடந்தாள் சாந்தினி.
தனது பொருட்களை எடுத்துக்கொண்டு எங்கேயோ கிளம்பிக்கொண்டிருந்தார் அப்பா. அவர் முகம் துவண்டு போயிருந்தது.
'எங்கே கிளம்பறீங்க? என்று உள்ளே வந்தாள் சாந்தினி. ஏனோ அவரை பார்க்கும் போது தன் அப்பாவை பார்ப்பது போலே இருந்தது அவளுக்கு.
யாரும்மா நீ?
நானும் ஒரு அப்பாக்கு பொண்ணு.' என்றாள் சாந்தினி. எங்கே கிளம்பிட்டிருகீங்க?
எங்கேயாவது போயிடறேன் நான். என் பொண்ணு சந்தோஷமா இருந்தா எனக்கு போதும். இங்கே என்னாலே இருக்க முடியலை. நான் போயிட்டா அவ சந்தோஷமா இருப்பா.