07. ஷைரந்தரி - சகி
மனம்.....
ஒரு பாவப்பட்ட பெட்டகம்...
மனிதனின் தேவை,ஏக்கம், ஆசை,இச்சை,கோபம்,பாசம்,வெறுப்பு,பொறாமை,காதல்,வீரம் அனைத்தையும் மூளையை விட அதிக அளவில் சேமித்து வைக்கிறது....
அறிவையை மூலாதாரமாக வைத்து வாழ்பவர் பலர்....மனம்???இதுவரையில் மனதை மூலாதரமாக வைத்து வாழ்ந்தவர் எவரேனும் உண்டா?மனம் இன்பத்தையும் தாங்கி கொள்கிறது...துன்பத்தையும் தாங்கி கொள்கிறது.மனம் உண்மையில் ஒரு பாவப்பட்ட பெட்டகம் தான்
"ஷைரு!"
"ஆ...சொல்லுங்க அத்தை!!"
"கோவிலுக்கு கிளம்பலை?"
"இல்லை அத்தை...அது!"
"அண்ணன் கூட இல்லாததுனால்,கோவிலுக்கு கூட வர பிடிக்கலையா??"
"............."
"சிவாக்கு மட்டும் உன் மனசு எப்படி தன் புரியுதோ?"-அவள் விழித்தாள்.
"கீழே வா!"-என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.
கீழே...
தன் தாத்தாவிடம் பேசியப்படி நின்றிருந்தான் சிவா.அவனைக் கண்டதும்,
"சிவா!"-என்று ஓடிச்சென்று அவனை அணைத்து கொண்டாள் ஷைரந்தரி.
"ஏ...அம்மூ!என்னாச்சு?"
"............."
"ஏ...அழுகிறீயா?அம்மூ...இங்கேப் பாரு!"-அவள் நிமிர்ந்தாள்.
"ம்...பாசமலரையே ஜெயிச்சிடுவீங்க போல?"-மஹாலட்சுமி.அவருக்கு ஒரு சிரிப்பை விடையாய் அளித்தான் சிவா.
"ஏ...குட்டிம்மா!என்னடா?இங்கே பாரு!"
"............"
"என்னாச்சு?"
"ஒண்ணுமில்லை."
"நீ போக சொன்னதுனால தானே போனேன்??இனி வா...உன்னையும் கூட்டிட்டு போறேன்."
"ஆமா..வேலை முடிந்துவிட்டதா?அதுக்குள்ள வந்துட்ட?"
"இல்லை...எல்லாத்தையும் ராம் தலையில இறக்கிட்டு வந்துட்டேன்."
"பாவம் ராம் அண்ணா!"
"எனக்கு என் தங்கச்சி தானே முக்கியம்."
"உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்."
"என்ன?"
"சஸ்பன்ஸ்..."
"அடேயப்பா...உங்க பாரதத்தை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புங்க!"-மஹாலட்சுமி.
"எங்கே அத்தை?"
"உனக்கு தெரியாதுல்ல?இன்னிக்கு கோவில்ல பஞ்சாக்ஷர வேள்வி நடக்க போகுது."
"என்ன வேள்வி?"
"பஞ்சாக்ஷர வேள்வி."
"................."
"சீக்கிரம் கிளம்புங்க!"
"சரிங்க அத்தை.."-அவரின் கூற்றுப்படியே இருவரும் கிளம்பினர்.சிவாவின் மனம் ஏனோ சலனப்பட்டு கொண்டே வந்தது.
"சிவா!"
"ம்..."
"என்ன யோசனை?"
"ஒண்ணுமில்லைடா!"
"அண்ணியை ஏன் பார்க்கலை?"
"விடும்மா...அவ தான் வேணாம்னு சொல்லாம சொல்லிட்டாளே!"
"எப்போ???"
"அவ யுதீஷ்ட்ரன் பதில் தான் முக்கியம்னு சொல்லும் போதே தெரியலை?"
"நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?"
"கேளு..."
"அண்ணி நிலைமையில நான் இருந்தா,நான் கூட உன் முடிவு தான் முக்கியம்னு சொல்லிருப்பேன்.அப்படி இருக்கும் போது...அவங்க யுதீஷ் முடிவு முக்கியம் சொன்னதுல என்ன தப்பு இருக்கு சிவா?"
".............."-அவனிடம் பதில் இல்லை.
"பசங்க நீங்க இஷ்டத்துக்கு முடிவு எடுத்துவிடலாம்.ஆனா,பொண்ணுங்களால அப்படி இருக்க முடியாதே!அவங்க,எல்லாரையும் பற்றி யோசிக்கணுமே!"
"................"
"சிவா!"
"பேசுறேன்டா!உன் விருப்பத்தை மீறி நான் போக மாட்டேன்."
"நிஜமா?"
"நிஜமா!"
கோவிலின் உள்ளே கார் நுழைந்தது.அதுவரையில் கண்டிராத அளவிற்கு இடி,மின்னல் முழங்கிற்று.
"அம்மா!என்னம்மா இப்படி இடி இடிக்குது?"-யுதீஷ்ட்ரன்.
"தெரியலைடா!"
"என்னங்க என்னாச்சுங்க?"
"தெரியலை சிவகாமி!"