மறுநாள் காலையில் அஸ் usual ஜானகியின் சுப்ரபாதத்துடன் கண் விழித்த கௌரியை கலாய்க்க ரெடி ஆனான் ஹரி.
“கௌரி இன்னைக்கு நம்ம அம்மா அப்பா எங்க போகப் போறான்னு தெரியுமா.”
“தெரியலையேடா. எங்கப்பாப் போகப் போறேள். இன்னைக்கு ஆபீஸ் கட்டா. என்னை மாதிரி ஒரு சின்சியரானப் பொண்ணுக்கு எப்படித்தான் அப்பாவா இருக்கேளோ தெரியலை. பாருங்கோ நீங்க ஆபீஸ் கட் அடிச்சுட்டு உங்கப் பிரிய ஜானுவோட ஊர் சுத்தப் போறதை உங்க ஆபீஸ்க்கு மொட்ட கடிதாசா எழுதிப் போடறேன் ”
“ஏன் கௌரி விஷயமே தெரியாம, ஆனா எல்லாம் தெரிஞ்சா மாதிரியே பேசறதை எப்போ நிறுத்தப் போறே”, என்று ஹரி அவளைக் கேட்க, ஆஹா எப்பவும் போல சொதப்பிட்டோமா, எவ்வளவோ சமாச்சிட்டோம், இது என்ன ஜுஜுபி என்று கௌரி ஹரியைப் பார்த்து
“இல்லடா ஹரி, நான் உனக்காகத்தாண்டா அப்படி பேசினேன், பாரு நாம மூணு பேரும் வெளில போய்டறோம். அம்மா பொழுது போகாம இருக்கற சீரியல் எல்லாம் பார்த்துட்டு நாளைக்கு உனக்கு வரப் போற பொண்டாட்டியை கொடுமைப் படுத்தக் கூடாது பாரு. ஏற்கனவே உனக்கு பொண்டாட்டியா வர்றதே பெரிய கொடுமை இதுல இன்னொரு கொடுமைன்னா, பாவம் அந்தப் பொண்ணு என்ன செய்வா” என்று சொல்ல.
ஜானகி மனதிற்குள் ஒரே வரில அத்தனை பேர் இமேஜ்ஜையும் இவ டேமேஜ் பண்ணிடுவா போல இருக்கே, என்று நினைத்து அவளைக் குளிக்கக் கிளப்பினார்.
தன் பேரை ரிப்பேர் செய்த கௌரியை அப்படியே விட ஹரிக்கு மனமில்லை, அவன் கௌரியைப் பார்த்து, “கௌரி அம்மா, அப்பா இன்னைக்கு உன் வருங்கால மாமியார் ஆத்துக்குதான் போறா. அவா கைல, கால்ல விழுந்தானும், உன்னை அவாத்து மாட்டுப் பொண்ணா ஏத்துக்க சொல்லி கேக்கதான், இந்தப் படையெடுப்பு. கூடவே உன்னைத் திருப்பி அனுப்பாம இருக்க ஏகப்பட்ட offers அவாளுக்கு கொடுக்கலாம்ன்னு இருக்கா”, என்று சொல்ல
கௌரி தன் அன்னையிடம் திரும்பி, “என்னமா சொல்றான் இவன். கௌஷிக் ஆத்துலேர்ந்து ஏதானும் டிமான்ட் பண்ணினாளா என்ன. அப்படில்லாம் இருந்தா இந்த இடமே வேண்டாமா. இப்போவே இத்தனை கேக்கறவா கல்யாணத்துக்குப் பின் இன்னும் நிறையத்தான் கேப்பா. சோ நீங்க எங்களுக்குத் தோது படாதுன்னு சொல்லிடுங்கோ. உங்களைக் கஷ்ட்டப் படுத்திண்டு ஒரு கல்யாணம் நேக்கு வேண்டாம்,” என்று விஷயமே தெரியாமல் பொரிய ஆரம்பித்தாள்.
“கௌரி உன்னை அம்மா அவசரக் குடுக்கைன்னு சொல்றதுல தப்பே இல்லை. அவா ஒண்ணுமே கேக்கலை. நாங்கதான், என்ன நம்மளால முடியும்ங்கறதை அவாத்துல சொல்லப் போறோம். அதுக் கூட அவா கேக்கலை. பின்னாடி எதுவும் பிரச்சனை வரக் கூடாதுன்னுதான் இப்போவே தெளிவுப்படுதிக்கறோம். உடனே அவா எப்படி பின்னாடி பிரச்சனை பண்ணலாம்ன்னு ஆரம்பிக்காதே, ஒரு கல்யாணம்ன்னால் அதுல கலந்துக்கப் போறது நம்ம நாலுப் பேர், அவா நாலுப் பேர் இல்லை. சொந்தக்காரா ஏகப்பட்ட பேர் வருவா, யாரும் எதுவும் சொல்றா மாதிரி வச்சுக்கக் கூடாது. அதனாலதான் இன்னைக்கு அவாத்துக்குப் போறோம்” என்று ராமன் சார் நீண்ட விளக்கமளிக்க, ஆஹா நாம் விளையாட்டாக கௌரியை வம்பிழுக்க ஆரம்பித்தது விபரீதத்தில் முடிந்ததே, இனியும் இங்கு இருந்தால் முதுகில் அம்மா கையால் டின்தான் என்று நழுவினான் ஹரி.
“எல்லா விளக்கமும் கேட்டாச்சா. இனியானும் குளிக்கப் போற உத்தேசம் இருக்கா இல்லையா”, என்று ஜானகி கேட்க, “சாரிப்பா, கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்”, என்று மன்னிப்பு கேட்டுவிட்டு நாம் ஏன் விஷயமே தெரியாமல் உளறுகிறோம் என்று யோசித்தவாறே குளிக்கச் சென்றாள் கௌரி. (ப்ரீயா விடு கௌரி. நீ எல்லாம் திருந்திட்டா அப்பறம் இந்தக் கதைல நான் யாரை காமெடி பீஸ்ஸா வைக்கறது. ரீடர்ஸ்க்கு பொழுது போகணும் இல்லை)
“நீங்க எத்தனை மணிக்கு ஆத்துக்கு வருவேள். அவாத்துல ஒரு அஞ்சு மணிக்கு இருக்கா மாதிரி போலாமா”
“ம்ம் ஒண்ணும் ப்ரோப்லம் இல்லை ஜானு. நான் ஏற்கனவே ஆபீஸ்ல அரை நாள் லீவ் சொல்லிட்டேன். இரண்டு மணிக்குள்ள ஆத்துக்கு வந்துடறேன். நாம ஒரு மூணு மணிக்குக் கிளம்பிப் போகலாம். கடைக்குப் போயிட்டு அவாத்துக்குப் போக சரியா இருக்கும். சரி நானும் குளிச்சு ஆபீஸ்க்கு கிளம்பறேன். ” என்றபடியே கிளம்பச் சென்றார் ராமன்.
“வாங்கோ வாங்கோ, ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுல. ஆத்துல கௌரி, ஹரி எல்லாம் சௌக்கியமா”, ராமன் தம்பதிகளை உபசரித்தபடியே கேட்டார் பத்து.
“எல்லாரும் நன்னா இருக்கோம். நீங்க எப்படி இருக்கேள். ஸ்வேதா எங்க காணும்”
“நாங்களும் சௌக்கியந்தான். ஸ்வேதா காலேஜ் போய் இருக்கா.”, என்றபடியே வந்து அமர்ந்தார் லக்ஷ்மி மாமி.
“இந்தாங்கோ மாமி கொஞ்சம் பூ, பழம் வாங்கிண்டு வந்தோம். உள்ள கொண்டு வைங்கோ”
“எதுக்கு இத்தனை வாங்கிண்டு வந்துருக்கேள். சும்மா கொஞ்சம் போல போராதா”, எல்லா பழத்திலும் 1 dozen இருப்பதை பார்த்து ஷாக் ஆகி கேட்க்க, “பரவா இல்ல, வைங்கோ. குழந்தைக்கு ஜூஸ் போட்டு கொடுங்கோ. இந்த வெயில் காலத்துக்கு நல்லது”., ஜானகி அக்கறையுடன் சொல்ல, ஆஹா மாமி நமக்கே வேல வெச்சுட்டாளே என்று ஆதங்கப்பட்டாள் லக்ஷ்மி.
“என்ன சாப்பிடறேள், காபியா இல்ல ஜூஸ் மாதிரி ஜில்லுன்னு குடிக்கறேளா?”, உபசரிப்பில் இறங்கினாள் லக்ஷ்மி
“சித்த நேரம் போகட்டும். ஆத்தை ரொம்ப நீட்டா வச்சிருக்கேள்”, ஹாலின் அலங்காரங்களைப் புகழ்ந்தபடியே அமர்ந்தார் ஜானகி.
“அச்சோ இதுல என் பங்கு எதுவுமே இல்லை. எல்லாமே ஸ்வேதா வேலைதான். கைவேலை எல்லாமே அவ பண்ணினதுதான். வீடு decoration முழுக்கப் பண்றது அவதான். எங்க எந்த எக்ஸிபிஷன் போட்டாலும் முதல் ஆளாப்போய் வாங்கிண்டு வந்துடுவா. இப்படியே ஏகப்பட்டது சேர்ந்து போச்சு. இதுல வேற தீம்ன்னு சொல்லிண்டு இந்த மாசம் இருக்கறதை எல்லாம் எடுத்துட்டு அடுத்த மாசம் புதுசா வைப்பா. இது வரை பெருசா செலவு வைக்காததால நாங்களும் ஒண்ணும் சொல்றதில்லை”, லச்சு மாமி அலுத்தபடியே ஸ்வேதா புகழ்ப் பாட ஜானகிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
ஐயோ கௌரி உன் நாத்தனார்க்கிட்ட ஏகப்பட்ட வித்தை இருக்கும் போல இருக்கே. நீ நம்மாத்து சுவத்துல செய்யற ஒரே அலங்காரம் சாந்தை இட்டுண்டு அங்க அங்க ஈஷி வைக்கறதுதான். கேட்டா அம்மா இது மாடர்ன் ஆர்ட்மா, செலவே இல்லாம உனக்கு wall painting பண்றேன் பாரு அப்படிம்பே. அதையே இங்கயும் செஞ்சா ரெண்டா நாள் கூட இல்லை, முதல் நாளே அனுப்பிடுவாளே, என்று மனதிற்குள் கவலைப் பட ஆரம்பித்தார். (மாமி கொஞ்சம் ஜாகிரதையாவே கௌரியை திட்டுங்கோ, அவளுக்கு இங்க சங்கம் எல்லாம் வச்சிருக்கா. அப்புறம் எங்க சங்கத்து ஆளை எப்படி திட்டலாம்ன்னு வீட்டுக்கு வீச்சறிவாள் அனுப்பப் போறா பார்த்து)
உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் சிரித்தபடியே, “கொழந்தை ரொம்ப திறமைசாலிப் போல இருக்கு. எல்லாம் பார்த்து பார்த்துப் பண்றா. கௌரிக்கு இது எதுவும் தெரியாது”, என்று சொல்ல
“அச்சோ மாமி அதுக்காக நான் சந்தோஷப்படறேன். ஸ்வேதா பண்ற செலவே தாங்கலை, இதுல கௌரியும் சேர்ந்துப் பண்ண ஆரம்பிச்சா கௌஷிக் பாவம்”, என்று ஒரே வரியில் ஜானு மாமியின் பயத்தைப் போக்கினாள் லச்சு மாமி.
“அதுவும் சரிதான். அப்புறம் இன்னைக்கு நாங்க வந்ததே முக்கியமா கல்யாணத்துக்கு என்னலாம் பண்ணனும்ன்னு உங்கக்கிட்ட பேசிட்டுப் போகத்தான். நீங்க உங்க தரப்பை சொல்லிட்டேள்ன்னா எங்களுக்கும் பிளான் பண்ண கொஞ்சம் சுலபமா இருக்கும். சம்ப்ரதாயம் எல்லாம் ஒண்ணாதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். இல்லை உங்காத்து வழக்கம்ன்னு ஏதானும் இருந்தாலும் சொல்லுங்கோ அதையும் பண்ணிடலாம். எங்காத்துல கௌரி கல்யாணம்தான் முதல் கல்யாணம். அதனால யாரும் எந்தக் குறையும் சொல்லாம நடக்கணுமேன்னு கவலையா இருக்கு. ”, தன் மனக் கவலையை லக்ஷ்மியிடம் கூறினாள் ஜானகி.