“அச்சோ என் குட்டீஸ்க்கு எவ்வளவு கோவம் வருது... தாதா பாவம்டா சாரி... இதோ இப்போ பாரு” என்று புகைப்படக்காரரை அழைத்து அழகாக அவர்களை புகைப்படம் எடுக்க சொல்ல, அந்த அழகு குட்டீஸ் தங்களுக்கு தெரிந்த வகையில் போஸ் தந்தனர். தொடர்ந்து சிலமணி துளிகள் கொஞ்சிபின்பு தான் இருவரும் மலை இறங்கினர்.
நேரம் வெகுவாக கடந்துவிட, சுபமுஹுர்த்த பத்திரிக்கை வாசிக்கபட்டது.. உள்ளே அறையில் இருந்தாலும், காதில் அவ்வார்த்தைகள் விழ, மனம் சொல்ல முடியாத பூரிப்பை தந்தது மணமக்களுக்கு. சிறிது நேரத்திலேயே மோதிரம் மாற்றிக்கொள்ள அழைக்க, மணமக்கள் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர்.
கைகள் மோதிரம் மாற்றி புது உறவை துவங்க, கண்கள் பல ஆண்டு காதலை சிந்த, நெஞ்சமெனும் கூட்டினில் ஒருவரை ஒருவர் நினைத்து சிலிர்த்துக்கொண்டு கைகள் கோர்த்து பெண்கள் இருவரும் வெட்கம் சிந்தும் முகத்தோடும், ஆண்கள் இருவரும் பெண்களை கொள்ளை கொண்ட கள்வதனத்தோடும் புகைப்படத்திற்கு நின்றனர்.
சிறிது நேரம் மேடையிலேயே மணமக்கள் இருக்க, அவர்களின் கள்ள பார்வைகளும் உதட்டோர சிரிப்பும் சின்ன சைகைகளும் சுற்றி இருப்போரின் கேலி பேச்சுக்களும், வண்ணமயமான ஆடைகளும், சந்தோஷ வெள்ளமும் அந்த அழகான காமெராவின் மூலம் candid படங்களாக எடுக்கப்பட்டது. ஒன்றுக்கு 5 பேராக பிரிந்து புகைப்படம் எடுக்க, அனைவருமே அழகாக பதிந்தனர் புகைப்படத்தில்.
மாலை நேர செம்மை சூழ்ந்துகொள்ள, மணமக்கள் அடுத்த நாள் விழாவிற்கு தயாராக உடைகளை சரிபார்த்துக்கொண்டனர். நெருங்கியவர்கள் மட்டுமே நிச்சயத்திற்கு வந்திருக்க, பெரும் கூட்டம் என்று எதுவும் இல்லை. ஆனால் மணமக்களின் தோழர் தோழிகள் கூட்டம் அடுத்த நாளில் இருந்து படையெடுக்க ஆரம்பித்தது. “அனு காலுக்கு மெஹந்தி போட்டிருக்க, காயுற வரைக்கும் ஆடிட்டே இருக்காத..”
“அதை ஏன்மா எப்போ பாரு என்னை பார்த்தே சொல்லுரிங்க, இதோ நூடுல்ஸ் கூடதான் போட்டுருக்காள் அவளை எதுவுமே சொல்ல மாட்டிங்குரிங்க...”
“கரெக்ட் அவள் இடத்தை விட்டு அசையுராளா பாரு நீ தான் அடிகிட்டே இருக்க...”
“ஹ்ம்ம் ரொம்ப தான் ஒரே இடத்துல எப்படிம்மா ஒக்காருறது...”
“அடிப்பாவி இதுக்கே இப்படின்னா கல்யாணத் தன்னைக்கு தாலிகட்டுற வரைக்கும் இருப்பியா இல்லை எழுந்து நடந்திட்டே இருப்பியா?” என்றாள் அர்ச்சனா
“அதெப்படி அர்ச்சு மேடம், அஸ்வத்கிட்ட இருந்து தாலி வாங்காம நகர்ந்திடுவாளா... அவனையும் நகர விடமாட்டாள்..” என்று கையில் மெஹந்தி வைத்துக்கொண்டே கிண்டல் செய்தனர் அண்ணிமார்கள்.
“தேஜு ஏன் ரொம்ப silenta இருக்காள்?”
“அவளுக்கு இப்போ ஒரு போன் வரும் அண்ணி... மேடம் அதுக்குதான் waiting... அதுவரைக்கும் நம்மகிட்ட பேசமாட்டாள்” என்று கிண்டல் செய்தாள் அனு.
எந்த நேரத்தில் சொன்னாளோ தெரியவில்லை, அலறியது அனுவின் கைபேசி...
“ஒரு பெண்ணாக உன்மேல் நானும் பேராசை கொண்டேன்..
உன்னை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்...
எதற்காக உன்னை எதிர்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்.
இனி வேண்டாமே... நியானே..
இவன் பின்னாலே போவேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டே எழுத்து...”
இவள் அலறும் கைபேசியை செய்வதிரியாது பார்க்க அனைவரும் சிரித்து பாட்டிற்கு chorus பாடினர். அவள் வெட்கப்பட்டு கைபேசியை எடுக்க, அவளிடம் தராமல் கையில் வைத்து போக்கு காட்டினாள் அர்ச்சனா. ஒருவழியாக கையெல்லாம் மெஹந்தி இருக்க, வெளியே கேட்கும்படி போட்டு பேச, மனதில் வேண்டிக்கொண்டே பேசினாள் அவன் எதுவும் பேசிவிட கூடாதே...
“ஹலோ அனுக்குட்டி...” எடுத்ததுமே அவன் கூறியதை கேட்டு அனைவருக்கும் சிரிப்பு தான் ஆனால் சத்தமே இல்லாமல் சிரமப்பட்டு சிரித்து அனுவை பேச சொன்னனர்.
அவள் என்ன பேசுவது என்று புரியாமல் “ம்ம்ம்ம்...”
“நான் உன்னை பார்க்கணும்டா வெளிய வரியா” என்று கேட்கவும் வெட்கம் பிடுங்கி தின்றது அவசரமாக “எதுக்கு?” என்று கேட்டுவிட்டு அதுக்கும் அவன் ஏதாவது கூற போகிறான் என்று பயந்து “இல்லை இல்லை இரு வரேன்” என்று பதில் தந்தான்.
இவ்வளவு நேரம் பேசியதை வைத்தே அஸ்வத்திற்கு புரிந்துவிட்டது... “என் செல்ல அக்காகளே பாவம் என் அனு அவளை ஏன் இப்படி ஓட்டுறிங்க? போன் loud speakerla தானே இருக்கு... போங்க போய் உங்க கணவன்மார்களை கவனிங்க...”
இப்போது அசடு வழிந்த அண்ணிகள் அனைவரையும் பார்த்து சிரித்துவிட்டு வெளியே சென்றாள். வெளியே அஸ்வத் காத்திருக்க அனு கை கால்களில் மெஹந்தியோடு வந்தாள். சேலை கட்டி இருக்கும் அவளை சிறிது பருகினான். அவன் கண்கள் செல்லும் திசையெல்லாம் கூச, அப்போது தான் உணர்ந்தாள் காலில் போட்ட மெஹந்தி பட்டுவிடாமல் இருக்க, சேலையை எடுத்து சொருகி இருந்தது.. அதற்குமேலே அங்கு நிற்க மனம் வராமல் தலையை குனிந்தவாறே “நான் போகணும், என்ன விஷயம்...”
“ம்ம்ம்ம்... ஹ்ம்ம்ம் ஒன்னும் இல்லையே...” அவனது பெருமூச்சிலேயே கன்னம் கொஞ்சம் சிவக்க அப்போ நான் போறேன் என்று ஓடிசென்றுவிட்டாள். உள்ளே சென்று பார்க்கையில் தான் தெரிந்தது அவள் சென்ற அடுத்த 2 நிமிடத்திலேயே தேஜுவும் நிருவை பார்க்க சென்றுவிட்டாள் என்று அதன்பின் இருவரையும் மிரட்டி அமரவைத்தனர். இன்னும் 2 நாட்கள் தான் அதன்பின் யார் தடுக்க போறாங்க பொறுமையாக இருங்க என்று மணமகன்களுக்கு அறிவுரை தந்து நிறுத்தினர்...(இல்லைனா இவங்க ரவுடி தனம் தாங்க முடியலைப்பா)
மனங்கள் இணைவது தான் திருமணமாம், அப்படி மனங்களை சேர்ப்பதில் பெரும் பங்கு இசைக்கும் உண்டு... அப்படி இன்னிசையான தருணத்தை மெல்லிசையால் துவங்க சங்கீத நிகழ்ச்சிக்கு தயார் ஆனனர் திருமண மலர்கள்... குடும்பத்தின் புது வரவான குட்டிசெல்லாம் அங்கும் இங்கும் அன்னையின் சொல்பேச்சு கேட்காமல் ஆடிக்கொண்டிருக்க, அவர்களுக்கு பார்த்து பார்த்து வாங்கிய உடையை தூரம் இருந்து கண்காணித்தவாரே நின்றனர் அம்மாக்கள். சங்கீத் விழா என்றதும் உடைகள் அனைத்தும் மாறிப்போனது. பட்டுப்பாவாடை குட்டி வேஷ்ட்டி என்றில்லாமல், எல்லாம் ராணி ராஜாக்கள் போல, அழகாய் குட்டி ஷர்வாணி, சோலி என்று அணிந்து அழகு காட்டினர். மண்டபத்தின் அமைப்பையே மாற்றி இருந்தனர் அலங்காரம் செய்வோர். நாற்காலிகளை நடைபாதையின் இரு புறமும் வைத்து அடுக்கிவிட்டு, மேடையில் மணமக்கள் அமரும் படி இரு சோபா போடப்பட்டிருந்தது. செவிற்றில் எல்லாம் வண்ண வண்ண துணிகளால் அலங்கரித்து பூக்களாலேயே மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
“அம்மா... அத்த எங்க?”
“உன் அத்த மேடைக்கு கூப்பிடுற வரைக்கும் வெளிய வரமாட்டளாம்...”
“ஏன்மா? சோகமா இருக்காளா??? நான் வேணா போய் பேசவா... என்னோட டிரெஸ்ஸ அனு அத்தகிட்ட காட்டணுமே”
“சரி இரு கேப்போம்... அனு உன்னை பார்க்க ஒரு பெரிய மனுஷன் வந்திருக்கான். பேரு விபுன் வர சொல்லவா?”
அவளது அறிவிப்பில் சிரிப்புவர, “அடடா அவருக்கு இல்லாத அனுமதியா? உள்ள அனுப்புங்க அண்ணி...”
உள்ளே சென்ற அந்த குட்டி விபுனின் கையை பிடித்து கொண்டே அவனது செல்ல தங்கையும் வந்தாள்... “அத்த...” என்று அவன் ஓடிவர, அவன் அணிந்திருந்த குட்டி ஷர்வாணி அவனுக்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது அவனது உயரத்துக்கு ஏற்றார் போல சாண்டல் நிற ஷர்வாணி அவனை ஒரு குட்டி ராஜகுமாரன் போல காட்டியது... அவனுடன் சேர்ந்து வந்த குட்டி தேவதையோ அழகாய் மிளிர்ந்தாள் அவளுக்கே தாயார் பண்ணினது போல் பிங்க் நிற குட்டி சோலி அணிந்து ஆபாசமே இல்லாத அந்த குட்டி வயிற்றை கொஞ்சம் காட்டி அவள் வருவதை கண்டு மணமகள்களே அதிசயத்துதான் போனனர். ஓடிவந்த இரு குட்டிகளும் ஒரு இடைவெளி விட்டே நின்றுவிட்டனர்... என்ன என்பது போல் இருவரும் பார்க்க, “அனு அத்த நீ ரொம்ப அழகா இருக்க.... தேஜு அத்த நீயும் ரொம்ப அழகா இருக்க...” என்று இரு குட்டிகளும் மாறி மாறி கூறினர். அலங்காரத்தை கண்டு கட்டுபவன் மட்டும் தான் மயங்கி பாராட்ட வேண்டுமா... இவர்கள் பாராட்டிலேயே மனம் குளிர்ந்து போனது இருவருக்கும்... ஆசையாய் பஞ்சு கன்னத்தில் முத்தம் தந்தனர்.