“என் நண்பன் ACPயா இருக்கான். அவன்தான் அந்த ஆளைப் பிடிச்சாச்சுன்னு சொன்னான். ஆனால் இப்போ சீட்டுக் கம்பெனி முதலாளிங்கற பேருல இருக்கறவன் வெறும் பினாமிதான். மெயின் ஆள் ஏதோ கட்சி ஆள் போல. ஏகப்பட்ட பொலிடிகல் சப்போர்ட் அவனுக்கு. சோ இப்போதைக்கு அவனைக் கைது பண்றதுங்கறது நடக்காது. ஆனால் போலிசும் எல்லா விதத்திலும் அவன்கிட்ட இருந்து பணத்தை வாங்க முயற்சி பண்ணிண்டு இருக்கா. அதுவும் உங்களோட நண்பர் தற்கொலைக்கு முயற்சி பண்ணினது, அப்பறம், ஆபரேஷன் பண்ண முடியாமப் போய் ஒருத்தர் இறந்தது. இதெல்லாம் பார்த்ததுக்கு அப்பறம் இன்னும் தீவிரமா பணத்தைத் திருப்பி வாங்க முயற்சி பண்றா. இந்த ரெண்டு விஷயத்துக்கு அப்பறம் கொஞ்சம் பொலிடிகல் பிரஷரும் கம்மி ஆயிருக்கு. இந்தக் காரணங்களால உடனே பணம் கிடைக்காட்டாலும் கண்டிப்பா கிடைச்சுடும். அதனால வருத்தப் படாதீங்கோ.”
“பாருங்கோ இதை அவா எங்ககிட்டக்க சொன்னா என்ன. தினம் தினம் எத்தனை பேர் வந்து அங்க கண்ணீர் விட்டு கெஞ்சிட்டுப் போறா தெரியுமா. எனக்கானும் ஏதோ ஒரு விதத்துல இல்லை அப்படினானும் ஒரு பதில் கிடைச்சுது. நிறைய பேருக்கு அதுக்கூட கிடையாது. மக்களை சீட்டுக் கம்பெனிக்காரன் ஒரு விதமா ஏமாத்தினான்னா இவா வேற மாதிரி ஏமாத்தறா.”, என்று பொருமித் தீர்த்தார் ராமன்.
“ஹ்ம்ம் போலீஸ்க்காரா, அவாளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு பார்க்கறா ராமன். இப்போ நான் உங்களுக்கு சொன்னதை எத்தனை பேர் முழுசா நம்புவா சொல்லுங்கோ. இல்லை அப்படியே நம்பினாலும், அடுத்து போராட்டம், உண்ணாவிரதம்ன்னு ஆரம்பிப்பா. அது போலீஸ்க்கு அடுத்த தலைவலி. இதெல்லாத்தையும் அவன் கிடைக்கவே இல்லைன்னு சொன்னா தவிர்க்கலாமே. அதைத்தான் அவா பார்க்கறா.”
“கண்டிப்பா, பணத்தைப் போட்டவா கேக்கத்தானே செய்வா. அதுல என்னத் தப்பிருக்கு. இதுவே இந்தக் கம்பெனில ஒரு போலீஸ்காரன் போட்டிருந்தா அப்போத் தெரிஞ்சிருக்கும் நாங்க படற கஷ்டம்.”
“நீங்க கஷ்டப்படறது அவாளுக்கும் தெரியாம இல்லை ராமன். போலீஸ்லயும் நல்லவா நிறையப் பேர் இருக்கா. அதனாலதான், அரசியல் தலையீடு இருந்தாலும் எப்படியானும் அவன்கிட்டக்க இருந்து பணத்தை வாங்கித் திருப்பித் தரணும்ன்னு முனைப்போட கேஸ் நடத்திண்டு இருக்கா. என்ன வெளில சொல்லலை அவ்வளவுதான். நீங்களும் தயவுசெஞ்சு இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்கோ. அப்பறம் என் நண்பனுக்குத்தான் கஷ்டமாப் போய்டும்.”
“ச்சே ச்சே. இல்லை இல்லை. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். தினம் தினம் என்ன நடக்கறதுன்னே தெரியாம நாங்க ஒரு ஒருத்தரும் கலக்கத்தோட வலம் வரோம். அந்த ஆத்தாமைலதான் பேசினேன். மத்தபடி ஒண்ணும் இல்லை.”
இவர்கள் பேசி முடிக்க லக்ஷ்மி, ஜானகியைப் பார்த்து, “ஏன் நீங்க கௌரிக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கறேள்”, என்று கேட்டார்.
“இல்லை மாமி. நாங்க இப்படி கடனை உடனை வாங்கி கல்யாணம் பண்ணப் போறோம்ன்னு தெரிஞ்சா மொதல்ல அவ கல்யாணத்தை நிறுத்தத்தான் சொல்வா.”
“ஏன் அப்படி நிச்சயமா சொல்றேள். உங்களை மாதிரியே அவளும் பணத்திற்கு ஏற்பாடு பண்ணலாம்ன்னு நினைக்கலாம் இல்லையா. இல்லை இதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஏதானும் நடந்து அவ அப்படி சொல்லி இருக்காளா?”
இவர்களிடம் முன்னால் நடந்ததை எப்படி சொல்வது என்று யோசித்த ஜானகி வேறு வழியில்லாமல், “இல்லை மாமி நாங்க உங்காத்துக்கு மொத மொதல்ல பேச வந்தோம் இல்லையா, அப்போ அவ ஏதோ பண விஷயம் பேச வரோம் அப்படின்னு நினைச்சுண்டு இந்தக் கல்யாணம் வேண்டாம் நிறுத்திடுங்கோ அப்படின்னு சொல்லிட்டா. இப்போ நிஜமாவே பணப் பிரச்சனைதான். அதான் அவ அப்படி சொல்வான்னு நிச்சயமா சொல்றோம்.”
“நீங்க சொல்றது நடந்து ஒரு நாலு மாசம் இருக்குமா. இந்த நாலு மாசத்துல கண்டிப்பா எங்க எல்லாரைப்பத்தியும் புரிஞ்சிண்டு இருப்பா. எனக்குத் தெரிஞ்சு கௌரி எந்த அளவு விளையாட்டுத் தனமா இருக்காளோ அதை மாதிரி ரெண்டு மடங்கு பொறுப்பாவும் இருக்கா. எங்களைப் பத்தி தெரியாதப்போ அவ எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசி இருக்கலாம். ஆனால் கண்டிப்பா இபோ அப்படி பேச மாட்டா. உங்க பொண்ணை நீங்க நம்பறதை விட என் மாட்டுப் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ரெண்டாவது இன்னும் எத்தனை நாள் அவளண்ட இதை மூடி மறைக்க முடியும். இப்போதான் வேலை ஜாஸ்தி. ஆபீஸ் போகும்போதும் வரும்போதும் போன்லயே இருக்கா, இல்லாட்டா அவ பஸ்ல பண்ற வேலை, ஒரு பேப்பர் விடாம எல்லாப் பேப்பரும் படிக்கறதுதானே. நாளைக்கே வேலை இல்லைன்னு போற வழில படிச்சான்னு வச்சுக்கோங்கோ. நம்ம அம்மா, அப்பா நம்ம கிட்டக்க சொல்லாம மறைசுட்டாளேன்னு அந்தக் குழந்தை வருத்தப்படாதா. அதனால நான் இங்க கிளம்பி வரதுக்கு முன்னாடி கௌரிக்கு போன் பண்ணி அவளை உடனே கிளம்பி ஆத்துக்கு வர சொல்லி இருக்கேன். அவ கிட்டக்க ஓரளவு விஷயமும் சொல்லி இருக்கேன்.”, என்று அனைவர் தலையிலும் அடுத்த குண்டை இறக்கினார் லக்ஷ்மி. இதில் கோபால்தான் பாவம், ஒரு நாளைக்குள்ள எத்தனை அதிர்ச்சிடா சாமி, கண்டிப்பா ஹேமாக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தான்.
தொடரும்
{kunena_discuss:780}