ஹாலில் அவர்களது பேச்சுக் குரல் கேட்டது .. ஒரு புன்னகையுடன் தயாராகிக் கொண்டிருந்தாள் சாஹித்யா. அடர்ந்த பச்சை நிறத்தில் செந்நிற கற்கள் பதித்து அழகான வேலைப்பாட்டுடன் இருந்த அந்த சுடிதாரை அணிந்து, தன் நீண்ட கூந்தலை ஒரு சின்ன கிளிப்பில் அடக்கி விட்டு, மிதமான ஒப்பனையுடன் சமையலறையில் வந்து நின்றாள் ....
" என்னம்மா இப்படி பார்க்கறிங்க ? "
" அழகுடா நீ "
" ஹ்ம்ம்ம்ம் காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு "
" அடியே நிஜம்மாவே நீ அழகுடீ "
" சரிம்மா இருக்கட்டும் .. என் அழகை ரசிச்சுகிட்டே இப்படி நின்னா, வந்தவங்களை யாரு கவனிப்பாங்கலாம் ? "
" அச்சோ……………….. "
" சரி சரி .. திரு திருன்னு முழிக்காதிங்கம்மா ...இதுக்குலாம் எங்கப்பாதான் மயங்குவார் ..நான் ஸ்ட்ராங் கேர்ல் ..என்னை எல்லாம் மயக்க ஒருத்தர் பிறந்துதான் வரணும் " என்று சிலாகித்துக் கொண்டாள்..
" அடடே போதும் செல்லம் ... காபியை அவங்களுக்கு கொண்டு கொடு நான் இதோ வந்திடுறேன் " என்று மகளை அனுப்பி வைத்தார் சுமித்திரா ..
வரவேற்பறையில் அமர்ந்திருந்த இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு ஆசிர்வாதம் வாங்கினாள் சாஹித்யா ..
" நல்ல இரும்மா " என்றனர் இருவரும் .. அவளின் பார்வை அந்த மூன்றாவது கப் மீது படிய
" ஆமா எங்க உங்க மகன் ? " என்று கேட்டு வைத்தாள் .
" அது ..... " என்று அவர்கள் பதில் கூறும்முன்னே , வாசற்படியை இரண்டிரண்டாக தாவி குதித்து ஸ்டைலாய் வருகை தந்தான் அவன் .. சாஹித்யாவின் சூடான பார்வை அவனை சீண்டிப் பார்த்தது ..
" ஹாய் " என்று அனைவரிடமும் சொன்னவன் அவளது அனுமதி இல்லாமலே காபியை எடுத்து பருகிவிட்டு
" த்து .... ப்ப்ப்ப்பாஆ ...என்ன காபி அப்பா இது ? இதையா நீங்க ரெண்டு பேரும் குடிச்சிங்க ? மனுஷன் குடிப்பானா இதை ? " என்று முகம் சுளித்தான் .. வந்த கோபத்திற்கு காபியை அவன் முகத்தில் ஊற்றி விடுவாளோ என்று பயந்து நின்றனர் சுமியும் அர்ஜுனும் ..
அவளோ அசால்ட்டாய் , " கரெக்டுதான் .. நீங்க ரெண்டு பேரும் காபியை இவன்கிட்டே கொடுங்க .. மனுஷந்தானே குடிக்க முடியாது .. குரங்கு ஜென்மம் குடிக்கலாம் " என்றாள் ..
" ஹே என்னடீ திமிரா ? "
" ஆமா நீ சமைச்சு போட்ட பாரு .. அதை சாப்பிட்ட திமிரில் பேசுறேன்டா " என்றாள் ..
" ஹ்ம்ம் இவ பெரிய மகாராணி இவளுக்கு நான் சமைச்சு போடணுமா ? "
" டேய், ஏன்டா இப்படி பேசுற ? இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் " என்று அவனது தந்தை ரவிராஜ் பேசிமுடிக்கும்முன்னே
" யாரும் எதுவும் சொல்ல வேணாம் .. " என்று சொல்லி கோபமாய் திரும்பி நடந்த சாஹித்யா இதழோரம் தோன்ற துடித்த புன்னகையை கஷ்டப்பட்டு மறைத்து வைத்தாள் .. அவளது புன்னகையை பார்க்காமலே அவளின் மனநிலையை அறிந்திருந்தான் அவன் ..அதே உற்சாகத்தில் அவனும்
" சரிதான் போடி " என்று அவளை விட்டு திரும்பி நடப்பதுபோல பாவனை செய்து , அவனுக்கு முதுகாட்டி நின்றுகொண்டிருந்தவளின் அருகில் வந்தான் .. அவன் புன்னகை பெரிதாக ஒரு கையால் அவள் தோளில் கை போட்டுக் கொண்டு, மறு கையால் அவள் கூந்தல் கிளிப்பை எடுத்து விட்டு அவள் கூந்தலை நன்றாய் களைத்து விட்டு சிரித்து,
" ஹாப்பி பெர்த்டே மை டியர் சத்யா பிசாசு குட்டி " என்றான் ..
அவனது வாழ்த்தில் முகம் மலர்ந்தவள், அவன் கண்களில் பிரதிபலித்த குறும்பை உள்வாங்கி அதே குறும்புடன் அவன் கண்களை பொத்தினாள்...
" ஹே என்னடீ பண்ண போற? விடு டீ "
" அதெல்லாம் முடியாது போடா .. எப்பவோ வரவேண்டியவன் இவ்ளோ லேட்டா வந்து நிற்குற ?அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டுவிடுவேனா ?" என்று பேசிக் கொண்டே நீச்சல்குளத்திற்கு அருகில் வந்தாள் ..சத்தத்தை வைத்து ஓரளவு தாங்கள் நிற்கும் இடத்தை கணித்தவன், பின்னால் நகருமுன்னே அவள் அவனை தள்ளி விட, அவளது கையை பிடித்து அவன் இழுக்க, கண் சிமிட்டும் நேரத்தில் இருவருமே தண்ணிரில் குதித்து இருந்தனர். சிரித்துக் கொண்டே அவனருகில் வந்தவள்
" ஹாப்பி பெர்த்டே டூ டா மை டியர் அருள்,
மை டியர் குரங்கு ,
மை டியர் லூசு ,
மை டியர் கழுதை,
அண்ட்
மிஸ்டர் மற்றும் மிசர்ஸ் ரவிராஜ் அவர்களின் அன்பு மகன் அருள்மொழிவர்மா " என்று அவனது மொத்த பெயரையும் பட்டியலிட்டு சிரித்தாள் சாஹித்யா!!
சத்யா, அருள் யாரு அப்படின்னு யோசிச்சுகிட்டே இருங்க... நான் அவங்க இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு அப்படியே எஸ்கேப் ஆகுறேன் .
அடுத்த எபிசோட்ல சந்திக்கலாம் .. தவம் தொடரட்டும்
தொடரும்
{kunena_discuss:838}