“ஆமாம்மா அதைப் பார்த்துட்டு இங்க அம்மா ஒரே அழுகை”
“யாரு பார்த்தாலும் கஷ்டம்தான்ப்பா படுவாங்க. நம்ம குடும்பத்தைப் பத்தி அத்தனை மோசமா டெலிகாஸ்ட் பண்ணி இருக்காங்க. நீங்க பார்க்கலையா”
“இல்லமா நான் பார்க்கலை. அதைப் பார்த்துட்டு உங்க வீட்டுல ஒண்ணும் பிரச்சனை இல்லையே. உங்க மாமியார் ஏதானும் சொன்னாங்களா”
“ச்சே ச்சே இல்லைப்பா. உங்களைப் பத்தி அவங்களுக்குத் தெரியாதா. அத்தைக்கு அதைப் பார்த்துட்டு ஒரே வருத்தம். நல்ல மனுஷங்களைப் பத்தி இப்படி பேச வச்சுட்டாளே இந்தப் பொண்ணு அப்படின்னு புலம்பிட்டு இருக்காங்க, அவங்கதான் என்னை உடனே பேச சொன்னாங்க. இருங்க அத்தை பேசறாங்க”
“என்ன சம்மந்தி இது. இந்த மாதிரி நடந்ததுன்னு உடனே எங்கக்கிட்ட சொல்லி இருக்க வேண்டாமா?”
“எனக்கே இப்படி ஒண்ணு நடந்ததுன்னு தெரியாது. இந்த ஸ்ரீதர் பையன் ஒண்ணுமே சொல்லலை, மதிதான் ரொம்ப அழறா”
“பின்ன வருத்தமாத்தானே இருக்கும், நீங்க மதிக்கிட்ட ஃபோனைக் கொடுங்க. நான் பேசறேன். நம்ம மேல எந்தத் தப்பும் இல்லை”
“அண்ணி, இந்த அநியாயத்தைப் பார்த்தீங்களா. எப்படி நம்ம மானத்தை வாங்கி இருக்காங்கன்னு”
“என்ன மதி இது. இது ஒண்ணும் அப்படியே இடிஞ்சு போற அளவுக்கு பெரிய விஷயம் இல்லை”
“என்ன சொல்றீங்க அண்ணி. நம்ம மானமே போச்சே. இந்தப் ப்ரோக்ராமை எத்தனைப் பேர் பார்த்திருப்பாங்க. இனி இந்தத் தெருவுல நடக்க முடியுமா. சொந்தக்காரங்க மூஞ்சில எப்படி முழிக்கறது. டிவி வரைக்கும் அந்தப் பொண்ணு போய் பேசி இருக்குன்னா அதுதானே உண்மைன்னு நம்புவாங்க”
“என்ன பேசறீங்க மதி. நீங்க கிட்டத்தட்ட இருவத்தி அஞ்சு வருஷமா அந்தத் தெருவுல இருக்கீங்க. இவ்ளோ நாளா உங்களைப் பத்தி புரிஞ்சிருக்க மாட்டாங்களா. அப்படி புரியாமப் பேசறாங்கன்னா, அந்த மாதிரிப் பேசறவங்களைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நீங்க கவலைப் படறதை மொதல்ல நிறுத்துங்க”
“நீங்க எங்களை புரிஞ்சுட்டு பேசறது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்குது அண்ணி”
“நீங்க வருத்தமே படாதீங்க. உங்க கூட நாங்க எல்லாம் இருக்கோம். அந்த ப்ரோக்ராம் பார்த்தவுடனே நம்ம கமல் உடனே உங்க வீட்டுக்கு கிளம்பிட்டான். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான். பசங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இதோ நானும், கண்மணியும் கிளம்பி உடனே வர்றோம்”
“அச்சோ எதுக்கு அண்ணி ராத்திரி நேரத்துல அலைஞ்சுகிட்டு. பசங்க வேறப் பாவம். அதுங்களுக்கும் அலைச்சல்”
“இல்லை மதி, வருத்தமா இருக்கும்போதுதான் கூட நாலு பேரு இருக்கணும். பசங்களை என் பொண்ணு கல்யாணி வீட்டுல விட்டுட்டு நானும், கண்மணியும் மட்டும்தான் வரப்போறோம். அதுங்களை வச்சுட்டு ஒண்ணும் பேச முடியாது”
“சரிங்க அண்ணி, நீங்க வாங்க”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களின் மாப்பிள்ளை கமல் உள்ளே நுழைந்தான்.
“வாங்க மாப்பிள்ளை. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா”, சம்ப்ரதாயமாக வரவேற்றபடியே கமலை உள்ளே அழைத்து உட்கார வைத்தார் ஸ்ரீதரின் அப்பா.
“எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா. அம்மாவும், கண்மணியும் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வரேன்னு சொல்லி இருக்காங்க”
“உங்களுக்குத்தான் அலைச்சலா போச்சு மாப்பிள்ளை”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. ஸ்ரீதர் என்னப்பா இது ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருக்க மாட்டியா”
“இல்லை மாமா. நான் இந்த அளவுக்குப் பண்ணுவாங்கன்னு நினைக்கலை. நான் அவங்க கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லலை அப்படின்ன உடனே அதைப் போடாம விட்டுடுவாங்கன்னு நினைச்சேன். அதனால உங்களை எல்லாம் வேற எதுக்கு கஷ்டப்படுத்திட்டுன்னுதான் சொல்லாம விட்டுட்டேன். கடைசில அவங்க என் கோவத்தைக் கிளர்றா மாதிரி பேசினதை எல்லாம் விட்டுட்டு நான் பேசின பதிலை மட்டும் போட்டு சதி பண்ணிட்டாங்க”
“மாப்பிள்ளை, நான் இன்னும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலை. இப்போ பாக்க முடியுமாடா ஸ்ரீதர்”
“அப்லோட் பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கறேன்ப்பா. இருங்க பார்க்கறேன்”, என்ற ஸ்ரீதர் மடிக்கணியை ஆன் செய்து செக் செய்ய குறிப்பட்ட வீடியோ அங்கே பதிவேற்றப்பட்டிருந்தது. அதை ஸ்ரீதரின் தந்தை பார்த்து முடிப்பதற்கும், அவரின் மகள் கண்மணியும், அவரின் மாமியாரும் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.
கண்மணியும், அவளின் மாமியாரும் ஸ்ரீதரின் அம்மாவை சமாதானப்படுத்த, அவரும் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
“என்னடா ஸ்ரீதர் இது அநியாயமா இருக்கு. அப்படியே விஷயத்தைத் திருப்பி போட்டுட்டாங்களே. கல்யாணத்தை நிறுத்தும்போது அந்தக் குடும்பமே அழுது பொறண்டு நம்மக் கிட்ட விஷயத்தை வெளிய சொல்லாதீங்கன்னு சொன்னதென்ன. இப்போ என்னவோ தப்பு அத்தனையும் நம்மளது மாதிரி பேசறது என்ன. இதை சும்மா விடக்கூடாதுடா ஸ்ரீதர். மாப்பிள்ளை நாம உடனடியாக் கிளம்பி அவங்க வீட்டுக்குப் போய் கேட்டுட்டு வந்துடலாம் என்ன சொல்றீங்க”, வீடியோவைப் பார்த்த ஸ்ரீதரின் தந்தை கோவத்துடன் கேட்க அவரின் மாப்பிள்ளை கமலோ யோசனையில் இருந்தான்.
தொடரும்
{kunena_discuss:857}