பற்றிக்கொண்டான் அவள் கையை. அவளையும் தன்னோடு இழுத்துக்கொண்டு விடு விடுவென நடந்தான் ரிஷி. அவன் பிடியில் அப்படி ஒரு இறுக்கம். எந்த நிலையிலும் அவளை விட்டுவிடக்கூடாது என்ற தவிப்புடன் கூடிய இறுக்கம்!!!!. நீ எனது உரிமையடி என்று பறை சாற்றும் இறுக்கம்.!!!!'. அதில் சின்னதாய் ஒரு நிறைவு அவள் மனதில். அவன் முகத்தை பார்த்தபடியே அவனுடன் நடந்தாள் அவள்.
அவர்கள் பின்னால் நடந்தனர் அம்மாவும், அப்பாவும். அவர்கள் இருவரும் அவர்கள் வந்த காரில் ஏறிக்கொள்ள தான் வந்திருந்த கார் அருகில் வந்து கதவை திறந்தான் ரிஷி. அவன் கையை விடுவிக்க பதில் பேசாமல் ஏறி அமர்ந்தாள் அவள். அவனது பிடியின் இறுக்கத்தில் அவளது கை சிவந்தே போயிருந்தது.
அவள் அருகில் அவன் ஏறி அமர புறப்பட்டது கார். அவன் கார் கதவை மூடிய வேகத்திலேயே அவன் கோபம் நன்றாக புரிந்தது அருந்ததிக்கு. அவர்கள் காரை தொடர்ந்தது அப்பா அம்மாவின் கார்.
என்ன நடந்தது என்று முழுமையாக தலைக்கேறவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு.. அவனுக்கு நடந்த விஷயங்களை அவள் கேள்விப்பட்டிருந்த போதும், நேரடியாக பார்ப்பது இதுவே முதல் முறை. புரிந்தது அவளுக்கு.!!!! அவமானம் என்றால் இப்படிதான் இருக்குமா? அவனது வலி அணு அணுவாய் புரிந்தது அவளுக்கு!!!!
வரையறுக்க முடியாத கோபத்தில் இருந்தான் அவன். அவன் பார்வை சாலையையே வெறித்துக்கொண்டிருந்து. இது போன்ற வார்த்தைகளை அவன் கேட்பது இது முதல் முறை இல்லை.
முன்பொரு முறை, இப்படிதான். இவன் இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்து முடித்திருந்த நேரம் அது. ஏதோ ஒரு நடிகையின் பிறந்தநாள் பார்ட்டி. அப்போது சஞ்சாவுமே உடனிருந்தான்.
வண்ண விளக்குகளும், கண்ணாடி கோப்பைகளின் உரசல்களும், ஆட்டமும் பாட்டமுமாக களை கட்டி இருந்தது அந்த விருந்து. இதிலெல்லாம் பங்குக்கொள்ளும் ஆர்வம் அதிகம் இருந்ததில்லை ரிஷிக்கு. இருப்பினும் அழைப்புக்கு மரியாதை கொடுத்து வந்திருந்தான் ரிஷி. கிட்டத்தட்ட அதே மனநிலையில் சஞ்சீவும்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நின்றிருக்க இவர்கள் அருகில் வந்து நின்றனர் இரண்டு மூன்று பேர். 'இவனுங்க கிட்டேயெல்லாம் பேச்சுக்கொடுக்காதே' சஞ்சா எச்சரித்து இருவரும் நகர முயன்ற நேரத்தில் அதில் ஒருவன் துவங்கினான் 'மிஸ்டர் ரிஷி உங்க அப்பா பேர் என்ன?'
அவனது நோக்கம் புரியாமல் இயல்பாக பதிலளித்தான் 'கல்யாண ராமன்.'
'எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க? இருக்காது. நான் லிஸ்ட் சொல்றேன் அதிலிருந்து சூஸ் பண்ணி கரெக்டா சொல்லுங்க பார்ப்போம். ஒன்று, இரண்டு மூன்று என்று அவன் ஒவ்வொரு நடிகரின் பெயராக சொல் துவங்க. அங்கே சிரிப்பலை.'
அடுத்த சில நிமிடங்களில் அடித்து துவைத்திருந்தான் அவனை. சஞ்சீவ் தடுத்திருக்காவிடில் அன்று அவனை கொன்றே போட்டிருப்பான் ரிஷி. அந்த நேரத்தில் இந்த சம்பவம் பத்திரிக்கைகளில் கூட பெரிதாக விமர்சிக்க பட்டது. ஆனால் ரிஷி அவனை அடித்ததற்கான காரணம் மட்டும் சரியாக சொல்லப்படவே இல்லை.
நினைக்க நினைக்க உள்ளம் கொதித்து கொதித்து பொங்கியது. 'என் தாயை பற்றி விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார்?' கார் சீட்டின் மீது குத்துவதும் ஜன்னலை குத்துவதுமாகவே இருந்தான் அவன்.
அவன் நிலை அறிந்தவளாக அங்கே கார் சீட்டில் கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினாள் அருந்ததி. 'ப்ளீஸ் பா... என்றாள் இதமாக 'கண்ட்ரோல் யுவர் செல்ஃப்' தண்ணீரை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான். முகத்தின் மீது அப்படியே ஊற்றிகொண்டான். அடங்க மறுத்தது மனம்.
சில நிமிடங்களில் சஞ்சாவின் கெஸ்ட் ஹௌசை அடைந்திருந்தனர். வந்து கால் மணி நேரம் கடந்த பிறகும் அமரக்கூட இல்லை அவன். இங்குமங்கும் நடையிட்டுக்கொண்டே இருந்தான் ரிஷி.
'டேய்... போதும்டா வந்து உட்காரு' என்றார் அம்மா.
'பத்தி எரியுது மா உள்ளே....என்ன தைரியம் இருக்கணும் அந்த பொறுக்கிக்கு, உன்னை போய்....'
'ரிஷி..... இப்படி வந்து உட்காரு நான் சொல்றேன்'
அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான். 'இப்போ என்ன ஆச்சு?' அவன் கேசத்தை வருடியபடி அமைதியாக கேட்டார் அம்மா.
'என்னமா இப்படி கேட்கிறே. அவன் உன்னை... இவன் மட்டும் இல்லை மா கண்டவனும் உன்னை பத்தி பேசறதும், வர்ணிக்கறதும் விமர்சனம் பண்றதும் யார்மா இவங்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. நீ சினிமாலே நடிச்சிட்டே அப்படிங்கறதுக்காக என்ன வேணும்னாலும் பேசலாமா? நான் இவங்க வீட்டு பொண்ணுங்களை பேசினா சும்மா இருப்பானுங்களா? வெட்டுவேன். உன்னை பத்தி பேசறவனை எல்லாம் வெட்டுவேன்.'
'இதிலே அந்த வீட்டிலே சாப்பாடு வேறே. இனிமே யாரவது சம்மந்தி, அம்மா அண்ணன்ன்னு ஏதாவது சொந்தம் கொண்டாடிட்டு அந்த வீட்டு பக்கம் போங்க. அப்புறம் இருக்கு...' என்றபடியே அவன் அவளை நோக்கி திரும்ப, மெல்ல கண்களை தாழ்த்திக்கொண்டாள் அவள். கண்கள் விரல்களை ஆராய்ந்துக்கொண்டிருக்க தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள் 'இனிமே நீயே போக சொன்னாலும் நான் போக மாட்டேன் '
'சரிடா .....சரி. தப்பா பேசிட்டான். அதனாலே நமக்கு என்ன ஆச்சு? அதுக்கு பதில் சொல்லு ' அம்மா கேட்க வியப்புடன் நிமிர்ந்தான் ரிஷி.
'சொல்லப்போனா நீ செஞ்சது தான் தப்பு. அவனை அடிச்சு காயப்படுத்தி இருக்கே. அவனுக்கு ரத்தம் வந்திருக்கு. வலிச்சிருக்கும்....'
'அ.....ம்....மா...'
'ஆமாம் டா.' என்றார் அம்மா. 'அவன் பேசினதுனாலே நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் எப்படின்னு எனக்கு தெரியும், அப்பாவுக்கு தெரியும், உனக்கு தெரியும் இது போதாதா? நாம அனுமதிக்காம நம்ம மனசை யாரும் காயப்படுத்த முடியாதுடா.' அவர் பேசப்பேச வியந்து போய் அமர்ந்திருந்தாள் அருந்ததி. இந்த நிலையிலும் எப்படி இப்படி பேச முடிகிறது அவரால்?
வைதேகி பேசுவதையே பார்த்தபடி புன்னகையுடன் அமர்ந்திருந்தார் ராமன். அவருக்கு தெரியுமே!!!. தனது மனைவி இப்படித்தான் என்று அவருக்கு தெரியுமே!!!
'நீ எதுக்குடா தேவை இல்லாம இதையெல்லாம் தலையிலே போட்டுக்கறே.? என்றார் அம்மா.
'ஏன்னா நீ என்னோட அம்மாமா.... நீ என்னோட அம்மா.... என்னாலே தாங்கிக்க முடியலைமா' தமிழகத்தின் மிகப் பெரிய ஹீரோக்களில் ஒருவன் குழந்தையாய் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டான். அவர் கரம் அவனது தலையை இதமாக வருடிக்கொடுத்தது.
'எனக்கு நீ சொன்ன இந்த மனசை காயப்படுத்தற டயலாக், அதை சொன்னவங்க யாரையும் தெரியாது. உன்னை மட்டும் தான் தெரியும்.' தன்னை அணைத்திருந்த அவர் கையை எடுத்து முத்தமிட்டான் ரிஷி. 'உன்னை யார் என்ன சொன்னாலும் இப்படிதான் அடிப்பேன்.' கண்களை இறுக மூடிக்கொண்டான் அவன்.
மழைச்சாரல் தொடரும்......
{kunena_discuss:886}