அது ஏனோ அவளை சீண்டிப்பார்க்க சின்னதாக ஒரு ஆசை வேதாவுக்கு.
'ஹேய் சோம்பேறி..... பூவெல்லாம் அப்புறமா தொடுத்துக்கலாம் போய் என் ஆளுக்கு காபி போட்டுண்டு வா.' முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்னாள் வேதா.
கோகுலும் இதை எதிர்பார்த்திருக்கவில்லைதான். அவன் திடுக்கிட்டு வேதாவின் பக்கம் திரும்ப.....
'என்னடி அப்படி பார்க்கறே? கோகுல் எப்பவுமே என் ஆளு தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்ன்னு இந்த ஊருக்கே தெரியும். என்ன கோகுல்? என்றபடியே விளையாட்டாக அவன் தோளில் கைப்போட்டுக்கொண்டாள் வேதா.
அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் கோதை. என்ன ஒடுகிறது அவளுக்குள்ளே? புரியவில்லை கோகுலுக்கு. சூழ்நிலை உணர்ந்து கோகுல் அவளை விட்டு விலகி ஏதோ சொல்ல வாயெடுத்த நொடியில்...
You might also like - Vasantha bairavi... A neat family story...
'ஹேய்... வேதா...' பின்னாலிருந்து கோப பூச்சுடன் கேட்டது அவளது அப்பாவின் குரல்.
திடுக்கிட்டு மூவரும் அவர் பக்கம் திரும்ப அவர் முக பாவம் அவர் மனதை நன்றாக காட்டிக்கொடுத்தது. இப்படி ஒரு காட்சியை அவரால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை என்பதை பிரதிபலித்தது அவரது கோப பார்வை. சில மணி நேரங்கள் முன்னால் அவரிடம் குடிக்கொண்டிருந்த மகிழ்ச்சி காணமல் போனது போலே இருந்தது.
அடுத்த வினாடி வேதா அறைக்குள் சென்று விட, சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் கோதை.
'நீங்க உட்காருங்கோ மாப்பிள்ளை' கோகுலிடம் சொன்னார் அவர். அவரும் அவனருகே அமர்ந்துக்கொண்டார்..
'இவன் எதற்கு இப்போது இங்கே வந்தான்? என்ற கேள்வி அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்க, அதை நன்றாக உணர முடிந்தது கோகுலால். அங்கே மௌனம் பரவிக்கிடக்க, அப்படி ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இதுவரை கோகுல் இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேலாக அவன் மனதை குடைந்துக்கொண்டிருந்த கேள்வி.......
'உள்ளே கோதை என்ன செய்துக்கொண்டிருகிறாள்? ரொம்பவும் காயப்பட்டு போயிருக்கிறாளோ?
யோசித்து யோசித்து அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்தான் கோகுல்.
'நேக்கு டைம் ஆச்சு கிளம்பட்டுமா?
'ம்... சரி மாப்பிள்ளை...' எழுந்தார் ஸ்ரீதரன்.
'நீங்க இருங்கோ. நான் உள்ளே கோதைக்கிட்டே சொல்லிட்டு கிளம்பறேன்' அவர் என்ன நினைத்துக்கொள்வார் என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் சமையலறைக்குள் நுழைந்தான் கோகுல். கையிலிருந்த புது கைப்பேசியை மேடையின் மீது வைத்துவிட்டு அவளை ஏறிட்டான் அவன்.
திடுக்கென உள்ளே நுழைந்தவனை திரும்பி பார்த்தவள், சட்டென பார்வையை திருப்பிக்கொண்டாள் கோதை. ஒரு வேளை அழுதுக்கொண்டிருக்கிறாளோ???
'ஒரே ஒரு நிமிஷம். இதோ காபி போட்டுட்டேன்....' சொல்லியபடியே அவசரத்தில் அவளே அறியாமல் பொங்கும் பால் பாத்திரத்தை வெறும் கைகளாலேயே இறக்கி கீழே வைத்து விட்டிருந்தாள் கோதை.
ஒரு நொடி அவள் கையை உதறிக்கொள்ள 'ஸ்ஸ்ஸ்ஸ்... பார்த்துடா... என்ன பண்ணிண்டிருக்கே நீ?' அவள் கைகளை விருட்டென அவள் கைகளை பிடித்துக்கொண்டவன், அவற்றை குழாய் நீரின் அடியில் காட்டினான்
'இல்லை.... ஒண்ணுமில்லை....விடுங்கோ. ' கையை விலக்கிகொண்டாள் அவள். மறுபடியும் காபி போடுவதில் கவனம் செலுத்துவதாக ஒரு பாவம் அவளிடத்தில்
'கோதைப்பொண்ணு...' அவன் அழைக்க, திரும்பவில்லை கோதை.
'உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாளோ? எந்த பெண்ணும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கொதித்துப்போவது இயல்புதானே.??? யோசித்தபடியே 'கோதைப்பொண்ணு என்னை பாரு ....' குரலில் நிரம்பிக்கிடந்த தவிப்புடன் அழைத்தான் அவன்
.........................
'ப்ளீஸ் டா....' நிமிரவில்லை அவள். .
'ரொம்ப கோபமாடா?'
'ம்ஹூம்...' முகம் காட்டவில்லை அவனுக்கு. ஜீனி டப்பாவை எடுக்கும் சாக்கு.
'உங்க அக்கா சும்மா விளையாட்டுக்கு ....'
ம்.....
'கோதைப்பொண்ணு.....' அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாதவனாக அவளை திருப்பி அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டான் அவன். எந்த உணர்வையும் வெளிக்காட்டாத ஒரு பாவம் அவள் முகத்தில். அவனிடமிருந்து விலக முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் அவள். ஒரு முறை அவள் பார்வை சமையலறையின் வாசலுக்கு சென்று வர,
'ப்ளீஸ் டா... என்னை நன்னா திட்டணும் தோணினா கூட திட்டி தீர்த்திடு. இப்படியெல்லாம் தவிக்க விடாதே. என் மேலே கோபமா வருதா?
மெது மெதுவாக புன்னகை படர்ந்தது. 'கோபமா? எதுக்கு? அதெல்லாம் இல்லையே.' என்றாள் குறும்பு சிரிப்புடன்
'அடிப்பாவி....' என்றான் கோகுல் அப்புறம் ஏண்டி என்னை இப்படி கெஞ்ச வெச்சே?'
'நீங்க மட்டும் தான் என்னை சீண்டி பார்க்கணுமா? நான் சீண்டி பார்க்கப்படாதா?' என்றாள் அவனை குறுகுறுவென பார்த்தபடியே
அதற்குள் 'கோதை... ' கூடத்திலிருந்து அப்பாவின் அழைப்பு வர அவளை விட்டு அவசரமாக விலகினான் கோகுல்.
'தோ.... வரேன்பா...' அப்பாவுக்கு பதில் சொல்லிவிட்டு காபியை அவன் கையில் திணித்தாள் 'நேக்கு கோபம் எல்லாம் இல்லை. கவலை படாம காபியை சாப்பிட்டு கிளம்புங்கோ.' அவள் நகர எத்தனிக்க அவள் கையை பிடித்துக்கொண்டான்
'நிஜமா கோபம் இல்லையாடா ?'
'ம்ஹூம் அதான் கொஞ்ச நாழி முன்னாடி, எல்லார் முன்னாலேயும் சொன்னேளே ''நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும்ன்னு' கண்கள் முழுக்க நேசம் நிறைந்திருக்க அவனை பார்த்தாள் கோதை 'அது உண்மைன்னு நேக்கு தெரியும். நேக்கு கோகுல் மேலே ரொம்ப நம்பிக்கை ' இமை குடை விழ அவள் உதடுகளில் அழகான வெட்க புன்னகை.
'இதை விட வேறென்ன வேண்டுமாம்? அவள் சொன்ன விதத்தில் உலகத்தையே ஜெயித்து விட்டதை போன்ற மகிழ்ச்சி பொங்கி எழ அவளை அப்படியே அள்ளிக்கொள்ள மனம் தவிக்க..
'கோதை... ' மறுபடியும் அப்பாவின் குரல். இந்த முறை அதில் கொஞ்சம் சூடு விரவி இருந்தது. தன்னை பற்றிய அவரது எண்ண ஓட்டங்கள் என்னவாக இருக்குமென கோகுலால் யூகிக்க முடிந்தது. இரண்டு பெண்களின் தந்தையாக அவரது தவிப்பில் எந்த தவறும் இல்லை என்றும் தோன்றியது அவனுக்கு.
அவள் நகரப்போக, 'கோதைப்பொண்ணு.... உனக்காக ஒரு மொபைல் வாங்கினேன்டா. அதை குடுக்கதான் வந்தேன். சிம் கார்டும் இருக்கு. சார்ஜ் போட்டுக்கோ. அப்புறம் பேசறேன். நான் வரேண்டா....' சொல்லிவிட்டு, காபியை முடித்துவிட்டு சமையலைறயை விட்டு வெளியே வந்து, அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு விரைந்தான் கோகுல். ஏதேதோ குழப்பங்களுடனே அவன் சென்ற திசையை பார்த்தபடியே நின்றிருந்தார் ஸ்ரீதரன்..
கீதம் தொடரும்.....
{kunena_discuss:890}