“ஐயா, ரெண்டு நாள்லாம் வேணாங்கய்யா. இப்போவே நீங்க சொல்றதுக்கு நாங்க ஒத்துக்கறோம். ஆனா தேவிக்கிட்ட என்ன சொல்றது. அதோட அஞ்சலையோட தங்கச்சி, அவங்க அம்மா எல்லாம் பக்கத்துலதான் இருக்காங்க. இந்த ஊரை விட்டுப்போறோம்ன்னா ஆயிரெத்தெட்டு கேள்வி கேப்பாங்க. அதோட தேவியோட பள்ளிக்கூடத்துல என்ன சொல்றது”
“ஹ்ம்ம் நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான் மணி. ஒண்ணுப் பண்ணு. இன்னைக்கு சாயங்காலமா தேவியை என்னை வந்து பாக்க சொல்லு. அதுக்கிட்ட நான் பேசறா மாதிரி பேசி நீங்க ஊரை விட்டுப்போக ஏற்பாடு பண்ணறேன்”, என்று சொல்ல, வேறு வழி இல்லாததால் அதற்கு ஒத்துக்கொண்டார்கள் மணியும், வெற்றியும். அதன்பிறகு நல்லதம்பியிடம் கெஞ்சி கூத்தாடி அவர்கள் இந்த ஊரில் இருக்கும்வரை குடிப்பதற்கு ஏற்பாடு செய்துகொண்டு தங்கள் வீடு நோக்கி சென்றார்கள்.
You might also like - Katrinile varum geetham... A family oriented romantic story
அன்று மாலை வீடு வந்த தேவி எப்பொழுதும் போல் குடித்துவிட்டு உருண்டு கொண்டிருக்கும் தந்தையையும், தமையனையும் பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். மணி அந்த போதையிலும் நல்லதம்பி கூறியதை மறக்காமல் தேவியிடம் கூறி அவளை உடனே சென்று நல்லதம்பியை பார்க்க சொன்னான். தேவியும் நல்லதம்பியை பார்க்க சென்றாள்.
“ஐயா, உங்களை வந்து பார்க்க சொன்னதா அப்பா சொன்னாங்க, என்ன விஷயங்கய்யா?”
“வாம்மா தேவி. நீ சொன்னாப்போக்கூட நான் நம்பல. ஆனா போன வாரம் முழுக்க அவனுங்களை கவனிச்சுப் பார்த்ததுல ரெண்டு பேரும் நிறுத்த முடியாத அளவுக்கு குடிகாரனா ஆகிட்டாங்கன்னு புரிஞ்சுது. நான் எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்கற நிலைல இல்லை. இதுக்குன்னு ஒரு நாளு அவனுங்களுக்கு தண்ணி கிடைக்காத மாதிரி பண்ணினேன். ஆனா ஒரு அரை நாள் கூடத்தாக்குப்பிடிக்க முடியலை,கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சு பைத்தியம் பிடிச்சா மாதிரி ஆயிட்டானுங்க ”, என்று வருத்தத்துடன் பேசினான் நல்லதம்பி.
“ஆமாங்கய்யா இப்போலாம் நாள் முழுக்க தண்ணிலதான் இருக்காங்க. இதோ இப்போ நான் வரும்போதுகூட அதே நிலைமைதான்”
“தேவி இவனுங்க இப்போ கொஞ்ச மாசமாத்தான் இப்படி ஆகிட்டாங்க. இப்படியே விட்டா அப்பறம் திருத்த முடியாத நிலைமைக்குப் போய்டுவாங்க. நான் எனக்குத் தெரிஞ்ச டாக்டர்க்கிட்டப் பேசினேன். அவர் உடனே கூட்டிட்டு வந்தா அவங்களை குணப்படுத்திடலாம்ன்னு சொன்னாரு. நீ என்ன சொல்ற”
“என்கிட்ட நீங்க கேக்கவே வேண்டாம். உடனடியா அந்த டாக்டரை பாக்க ஏற்பாடு பண்ணுங்கய்யா. அப்பாவும், அண்ணனும் நல்லபடியா ஆனாப் போதும்”
“ஆனா அந்த டாக்டர் இருக்கறது பக்கத்து ஊருல. அங்க இருந்து நீ படிக்கற இடத்துக்கு போக வர முடியாது. நீ இல்லாம மணியையும், வெற்றியையும் பாக்க உங்க வீட்டுல யாராச்சும் இருக்காங்களா?”
“இல்லைய்யா, எங்க ஆயாவுக்கு வயசு ஆகிடுச்சு. சித்திக்கு பசங்களை பார்க்கணும். அதால என்னை விட்டா வேற யாரும் இல்லை. அவங்க எத்தனை நாள் ட்ரீட்மென்ட் எடுத்துக்கணும் ஐயா”
“நாள் கணக்கு இல்லை தேவி, டாக்டர் சொல்றத வச்சுப் பார்த்தா ஒரு ரெண்டு, மூணு மாசம் ஆவும் போல”, நல்லதம்பி கூற, தேவி யோசிக்க ஆரம்பித்தாள்.
“அப்போ பரவா இல்லை. இப்போ எனக்கு அரைப்பரிட்சை முடிஞ்சு போச்சு. நான் எங்க டீச்சர்கிட்ட சொல்லி ஒரு மூணு மாசம் லீவு வாங்கிக்கறேன்”
“தேவி நீ பதினோராம் வகுப்புப் படிக்கற. அதால அப்படி எல்லாம் லீவ் தர மாட்டாங்க. நான் ஒண்ணு பண்றேன். அந்த டாக்டர்கிட்ட உனக்கு டைபாய்டு காய்ச்சல்ன்னு சொல்லி ஒரு லெட்டர் வாங்கித் தரேன். அதை உங்க ஸ்கூல்ல கொடுத்துட்டா பிரச்சனை இல்லாம லீவு கிடைச்சுடும், என்ன சொல்ற”
“நீங்க சொல்றா மாதிரியே பண்ணிடலாங்கய்யா. ஆனா பாட்டிகிட்டத்தான் என்ன சொல்றதுன்னு தெரியலை”
“உங்க பாட்டிக்கிட்ட உண்மைய சொல்லிடு. உங்க அப்பன் திருந்தினா அவங்களுக்கும் சந்தோஷந்தானே. ஆனா ஊரை மட்டும் சென்னைன்னு சொல்லி வை”
“சரிங்கய்யா நீங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு என்கிட்ட சொல்லுங்க. அதுக்கப்பறம் நான் அவங்ககிட்ட சொல்லிடறேன்”
“தேவி ரொம்ப முக்கியமான விஷயம். நான் உங்களுக்கு உதவி செய்யறேன்னு எக்காரணத்த கொண்டும் மீனாக்குத் தெரியக்கூடாது. அவளுக்குத் தெரிஞ்சதுன்னா அதோட உங்க குடும்பத்துக்கு முழுக்குப் போட்டுடுவேன்”
“இல்லீங்கய்யா கண்டிப்பா மீனாம்மாவுக்கு தெரியாமப் பார்த்துக்கறேன்”, தேவி வாக்களிக்க, நல்லதம்பி தன் சூழ்ச்சி பலித்ததில் மிக மகிழ்ச்சி அடைந்தான்.
தேவியின் சம்மதம் கிடைத்தபின் உடனடியாக தீயாய் வேலையில் இறங்கினான் நல்லதம்பி. நல்லவர்களுக்குத்தான் எந்த வேலையை முடிப்பதிலும் சுணங்கள் ஏற்படும் போல, இங்கு நல்லதம்பிக்கு அவனின் வேலைகள் அனைத்தும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாக நடந்து முடிந்தது.
நல்லதம்பியின் நல்லநேரம், தேவியின் கெட்ட நேரமாக அந்த வாரத்தில் தேவிக்கு காய்ச்சல் வர, அதை டைபாய்டாக மாற்றி கடிதம் வாங்கி மணியை பள்ளியில் கொடுக்க வைத்தான். மணியும் அந்தக் கடிதத்தை பள்ளியில் கொடுத்துவிட்டு அவர்கள் ஊரில் இருக்கும் மருத்துவமனையில் காட்டியும் குனமாகததால், சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு கூட்டிப்போவதாகக் கூறினான். அவனை நம்பாத தேவியின் கணித ஆசிரியை தேவியைப் பார்க்க வர, தேவி காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அனத்திக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்த ஆசிரியைக்கும், மணி கூறியதை நம்ப வேண்டியதாகப் போய்விட்டது. அந்த வாரத்திலேயே அவர்கள் பக்கத்து ஊரில் இருக்கும் நல்லதம்பியின் தோப்பிற்கு வந்து சேர்ந்தார்கள். இப்படியாக தேவியின் குடும்பம் நல்லதம்பியின் பிடிக்குள் மொத்தமாக வந்தது. விடியல் வரும் என்று நம்பி வந்த தேவியின் வாழ்வில் இருள் சூழ ஆரம்பித்தது.
தொடரும்
{kunena_discuss:857}