"சம்திங்.... சம்திங் ..." என அவன் மூளையில் ஃப்ளாஷ் அடிக்க, பிறகு அவர்களை கவனிப்போம், என்று நினைத்து கொண்டு, "டேய் ஆனந்த், நீ எங்கே இங்கே.. ஓ வசந்த்துக்கு வாழ்த்து சொல்ல வந்தாயா" என கேடக,
ஓன்னும் சொல்லாமல் புன்னகைத்த ஆனந்த், தன் சார்பில் ஒரு பொக்கேயை வசந்துக்கு கொடுத்துவிட்டு அவனை வாழ்த்தினான்.
"அதுவும் தான் அஜய்.. உன்னோட கல்யாணம் திடீர்ன்னு நடந்ததால எங்களால வரமுடியலை.. சாரிப்பா… அத்தோட இன்னொரு சந்தோஷமான விஷயமும் இருக்கு" ஏற்கனவே அவனை அறிந்திருந்த பத்மா சொல்ல,
காப்பியுடன் வந்த சாரதா, மஹதியிடம் கொடுக்க, அவள் அனைவருக்கும் கொடுத்து உபசரித்தாள்.. பைரவி வெளியே வராமல், டையினிங் ரூம் பக்கமாக ஒதுங்கி அவர்களை பார்த்தபடி நின்றிருந்தாள்.
"மிஸ்டர். ராமமூர்த்தி, நான் நேடியாகவே விஷயத்துக்கு வரேன்.. உங்க பையன் வசந்த் இப்போ ஐ.ஏ.எஸ். தேர்ச்சி அடைஞ்சாச்சு... இன்னும் கொஞ்சம் நாள்ல டிரைனிங்கும் முடிச்சிடுவான்.. நல்ல பையன்.. ஹார்டு ஒர்கிங் பெர்சனாலிட்டி.. இப்படிபட்ட பசங்களை விட முடியுமா சொல்லுங்கோ.. பொறுப்பான பையன்.. இந்த இரண்டு மாசமா நான் பார்த்து உங்க பையனை அட்மயர் பண்ணாத நாளே இல்லை.. சரி விஷயத்தை சொல்லறேன்"..
"இவ என் பொண்ணு கவிதா.. கவிதாவும், வசந்த்தும் இரண்டு வருஷமா காதலிக்கிறாளாம்.. நாங்க என் பொண்ணுக்கு வரன் பார்க்க தொடங்கியிருக்கோம்.. நல்ல நல்ல வரன் எல்லாம் வந்துண்டுதான் இருக்கு.. இவ என்னவோ தட்டி கழிச்சிண்டே இருந்தா.. நாலு நாள் முன்னாடி கூட இவளுக்கு ஒரு டாக்டர் வரன் வந்தது.. டோண்ட் மிஸ்டேக் மீ.. உங்க பொண்ணு மஹதிக்கு பார்த்த அதே டாக்டர் விஜய் தான்.. அவாத்துல ஒத்த கால்ல நிக்கறா.. இவ கிட்ட நாங்க கெட்டியமா கேட்டவுடனே, இன்னிக்கு காலையிலதான் சொல்லறா, இந்த மாதிரி நான் வசந்தை காதலிக்கிறேன்.. அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு"..
"அதான் நாங்க உடனேயே தட்டை தூக்கிண்டு வந்துட்டோம்.. சுபஸ்ய சீக்கிரம் என்பாளே.. கலெக்டர் மாப்பிள்ளைன்னா எங்களுக்கு கசக்குமா என்ன??"
குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அங்கே நிசப்தமாக இருந்தது.. எல்லோருக்குமே ஆச்சர்யம் தான்.. வசந்த் காதலிக்கிறானா?..
முதலில் ராமமூர்த்திதான் தன்னை சுதாரித்து கொண்டார்..
"மிஸ்டர் ராமனாதன்.. நீங்க என்ன சொல்லறேள்.. என் பையன் வசந்த் காதலிக்கிறானா?... உங்க பொண்ணை காதலிக்கிறானா?" கேள்வியாக வசந்தை நோக்க,
"டேய் வசந்த் என்னடா இது.. இவர் என்னவோ சொல்லறாரே?.. சொல்லேண்டா.. என்ன விஷயம்..?" சாரதா பதற்றபட,
"மாமி ரிலாக்ஸ்.. எங்காத்துக்காரர் இல்லாததை எதுவும் சொல்லலை.. உண்மையை தான் நான் சொல்லறோம்.. எதுக்கு இப்படி அலறறீங்கோ.. ஊர்ல உலகத்துல இல்லாததை அவா செய்யலை.. இப்ப என்ன நடந்து போச்சு.. காதலிக்கிறது தப்பா.. இரண்டு பேரும் ஒரே இனம்.. அப்பறம் என்ன.. மேலே ஆக வேண்டியதை பார்ப்போமே.. பையன் டிரையினிங் போறதுகுள்ள சிம்பிளா நிச்சயதார்த்தம் பண்ணி. கல்யாணத்தை வேணா அடுத்த பதினைந்து நாள்ல முடிச்சிடலாம்.. கொஞ்ச நாள் அவர் டிரையினிங் முடிஞ்சு கலெக்டரா இருக்கட்டும்..
அப்புறம் வேணா, இரண்டு வருஷம் கழிச்சு, எங்க பொண்ணுக்கு நாங்க ஏதாவது தனியா பிசினஸ் வைச்சு கொடுக்கிறோம்.. எங்காத்துக்கு பக்கத்துலேயே அவளுக்கு தனியா வீடு கட்டி வைச்சிருக்கோம்.. அங்கே தனியா குடித்தனம் வைச்சிடுவோம்.. என்ன சொல்லறீங்கோ.. இந்த கலெக்டர் உத்யோகம் எல்லாம் பேருக்கு தான்.. பொலிட்டிகல் பிரஷர் ஜாஸ்தி இருக்கும்.. நம்மளவாளுக்கு அதெல்லாம் சரி படாது.. பேசாமா என் பொண்ணு தானே ஒரு ஃபைனான்ஷியல் கம்பனி ஆரம்பிக்கனும்னு சொல்லிண்டு இருக்கா.. இரண்டு பேருமா ஜாயிண்டா செய்யலாமே?"
"நீங்க என்ன சொல்ல வரேள்.. மொத்ததுலே வீட்டோட மாப்பிள்ளையா உங்காத்துக்கு பக்கத்துல என் பையன் இருக்கனும்.. அதானே" என ராமமூர்த்தி கேட்க,
தன் குடும்பத்தினரின் பேச்சால் ஒரு கணம் ஆனந்த் அவமானத்தில் முகம் கருக்க, சுதாரித்தவன்
"அம்மா, என்ன இது.. நாம எதுக்கு வந்தோம்.. என்ன இப்படி பேசறீங்க" ஆனந்த் நடுவில் புக,
"ப்ளீஸ் .. ஒரு நிமிஷம்.. என்னை பேச விடறீங்களா?" என வசந்த் சத்தமாக சொல்ல,
அனைவரும் சட்டென வாயை மூடிக் கொண்டு வசந்தை பார்க்க,
"என்னை எல்லாரும் மன்னிக்கனும்.. நானும் கவிதாவும் காதலிச்சது நிஜம் தான்.. அதாவது காதலிப்பதாக நினைச்சது நிஜம்ன்னு சொல்ல வரேன்.. என்னை பொருத்த வரை நான் முதல்ல அவளை நிஜமாதான் காதலிச்சேன்.. ஆனா கவிதா, ... நான் இப்படி சொல்லறதுக்கு நீங்க மன்னிக்கனும்.. கவிதா என்னை காதலிக்கவேயில்லை.. அவளுக்கு வேண்டியது அவள் சொல்லறதை கேட்கற ஒரு அடிமை.. அவளுக்கு என்னை பார்த்தால் என்ன தோணித்தோ, தெரியலை.. இத்தனை நாளா நானும் அவள் மாறுவாள், உலகத்தை புரிஞ்சுப்பான்னு நினைச்சேன்.. எப்பவும் என்னை அவமான படுத்திண்டு, என்னவோ நான் எதுக்குமே லாயக்கியில்லாதவன்னு என்னை நினைச்சா"..