“என்னத்த பரவாயில்லை… உங்க முகம், குரல் எதுவும் சரியில்லை… நீங்க வாங்க…” என அவனின் கைப்பிடித்து அழைத்துச் சென்றவள், அவர்களின் உறவான ஆலமரத்துக்கு அழைத்துச் சென்றாள்…
தனது பையை திறந்து அதிலிருந்த டிபன்பாக்ஸை எடுத்த போது,
“கிருஷ்ணா, என்ன இது?... நீ மதியம் சாப்பிடலையா?... உன்னை நேரத்துக்கு நான் சாப்பிட சொல்லியிருக்கேன் தான?...” என சற்றே ஆதங்கத்துடன் அவன் கேட்க
“சரி… சாப்பிடாம போனதுக்கு எனக்கு அப்புறமா பனிஷ்மெண்ட் கொடுத்துக்கோங்க…. இப்போ பேசாம சாப்பிடுங்க…” என சாப்பாடை அவனிடம் நீட்டிய போது அவன் வேண்டாம் எனவும்,
“சொன்னா கேட்கமாட்டீங்களா நீங்க?... இப்போ நீங்க சாப்பிடலை… நானும் சாப்பிடமாட்டேன்…” என அவள் கோபமாக சொன்னதும்,
“சரி… சரி… சாப்பிடுறேன்…” என அவன் கையை கழுவி விட்டு வந்து அமர்ந்த போது,
“இந்தாங்க… சாப்பிடுங்க…” என ஒரு விள்ளல் சாதத்தை எடுத்து அவள் அவன் வாயருகே கொண்டு வந்திருந்தாள்…
அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, “என்ன சகி பார்க்குறீங்க… சாப்பிடுங்க… உங்க அம்மா மாதிரி எல்லாம் எனக்கு ஊட்டிவிட தெரியாது… உங்க அம்மான்னு இல்ல… பொதுவா அம்மா எப்படி ஊட்டிவிடுவாங்கன்னு எனக்கு தெரியாது… பட் எனக்கு தெரிஞ்ச வரை ஊட்டி விடுறேன்… சாப்பிடுங்க…” என சொல்ல, அவனுக்கு கண் கலங்கிவிட்டது…
“சாப்பிடுங்க சகி… ப்ளீஸ்… எனக்காக…” என சொல்லியதும் அவன் வாய் திறக்க, அவள் அவனுக்கு அந்த ரசம் சாதத்தை ஊட்டிவிட்டாள்…
சாப்பிட்டு முடித்ததும், கலங்கிய கண்களை அவளிடமிருந்து மறைக்க முயன்று அவன் தோற்றுப்போக,
“என்ன சகி… உடம்புக்கு ரொம்ப முடியலையா?... சரி ஆகிடும்… நான் இருக்கேன் உங்க கூட…” என அவனின் கைப்பிடித்து அழைத்துச் சென்றவள்,
“நான் உங்க வீடு வரை வந்து விடட்டா சகி?... போகலாமா?...” என அவள் கேட்டதும்,
“இல்லடா… நான் போயிக்குறேன்… நீ பார்த்து போயிட்டு வா…”
“ஹ்ம்ம்… சரி… நாளைக்கும் லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க… ஸ்கூலுக்கு வர வேண்டாம்…”
“ஹ்ம்ம்… எனக்கு லீவ் தாண்டா… இன்னும் எனக்கு ஸ்கூல் ஆரம்பிக்கலை… அடுத்த வாரம் தான் லெவன்த் க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணுறாங்க…” எனவும்,
“ஓ… சரி… அப்போ ரொம்ப நல்லதா போச்சு… நீங்க ரெஸ்ட் எடுங்க நல்லா… அடுத்த வாரம் க்ளாஸ் ஸ்டார்ட் ஆனதுமே வாங்க…” என சொல்ல, அவனும் சரி என்றபடி சென்றுவிட்டு, மறுநாள் காலையிலேயே அவளுக்காக காத்திருக்கவும், அவளுக்கு தன்னைப் பார்க்கவா இப்படி காய்ச்சலோடு வந்திருக்கிறான் என ஒரு பக்கம் சந்தோஷமும், மறுபக்கம் வருத்தமாகவும் இருந்தது… அதோடு போய் அவனிடம் அவள் சண்டை போட, அவன் சிரித்துக்கொண்டே அவளின் திட்டை ஏற்றுக்கொண்டான்…
“ஆமா உங்களுக்கு ஏன் க்ளாஸ் அடுத்த வாரம் ஸ்டார்ட் ஆகுது?...”
“நாங்க குரூப் எடுத்துருக்குறோம்டா… அதுக்கு க்ளாஸ் செப்பரேட் பண்ணுறதுக்கு கொஞ்ச டைம் ஆகும்… அதே மாதிரி ரிசல்ட்டும் கொஞ்ச நாள் முன்னாடி தான வந்துச்சு… அதான் டிலே ஆயிடுச்சு…”
“ஓ… சரி… ஹ்ம்ம்… அதென்ன குரூப்?...”
“நீ பெரியவளா ஆனதும் என்னவா ஆகணும்னு ஆசப்படுற?...”
“ஹ்ம்ம்… தெரியலையே….”
“என்னடா இப்படி சொல்லுற?...”
“நிஜமாவே தெரியலை சகி… என்ன ஆகணும்னு… ஆனா, உங்களுக்கு உடம்பு முடியாம நேத்து ஆச்சுல்ல, அதைப் பார்த்ததுல இருந்து உங்களைப் பாத்துக்கணும்னு தோணுச்சு… இனிமே உங்களுக்கு அப்படி ஆகக்கூடாதுன்னு நினைச்சேன்… அதனால பேசாம டாக்டர் ஆகிடலாம்னு நினைக்குறேன்… நீங்க என்ன சொல்லுறீங்க சகி?...” என அவள் வெகு இலகுவாக சொன்னதும்,
அவனுக்கு அவள் சொல்வதின் அர்த்தமும், அவளின் கள்ளங்கபடமில்லா பேச்சும் புரிந்தது…
“உன் மனசை நீயே கேட்டுப்பாருடா… நீ என்னவா ஆகணும்னு… கண்டிப்பா அது உனக்கு சொல்லும்… இன்னாருக்காக இப்படி ஆகணும்னு நினைக்காத… உனக்குள்ள கேட்டுப்பாரு… உனக்கு எதுல விருப்பம், எதுல இஷ்டம்னு… கண்டிப்பா உனக்கு உன் மனசு பதில் சொல்லும்…” என தெளிவாக அவன் சொன்னதும், அவள் அவனை இமைக்காமல் பார்த்தாள்…
பின்னர், “சரி… நான் யோசிக்கிறேன்… நீங்க என்னவா ஆகப்போறீங்க?...”
“நான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டா ஆகணும் கிருஷ்ணா… அதுக்காகத்தான் இப்போ மேக்ஸ் பையாலஜி குரூப் எடுத்துருக்குறேன்…”
“ஹார்ட் டாக்டரா?... சூப்பர் சகி… அப்போ எனக்கு உடம்புக்கு சரி இல்லைன்னா நீங்க பார்த்துப்பீங்கல்ல?...” என அவள் சந்தோஷத்துடன் கேட்டதும், அவன் சற்றே அவளிடமிருந்து பார்வையை விலக்க,
“அடடா… சரி… சரி… எனக்கு உடம்பு சரி இல்லாம போகாது… இப்போ ஓகேயா?...” என அவள் இறங்கி வர,
அவன் “ஹ்ம்ம்… சரி…” என்றான்…