அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது, அவன் ட்வெல்த்திலும், அவள் செவென்த்திலும் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்திருந்தனர்…
அப்போது ஒருநாள், அவள் அவனிடம், “சகி… நான் உங்க ப்ரெண்ட் தான?...” எனக் கேட்க, அவன் தூக்கிவாரிப்போட்டவனாய், நிமிர்ந்து அவளைப் பார்த்த போது,
“சொல்லுங்க… நான் உங்க ப்ரெண்ட் தானா?...”
“என்னடா கேள்வி இது?...”
“பின்ன எப்படி கேட்க சொல்லுறீங்க?... போன மாசம் கூட என் பர்த்டேக்கு கிஃப்ட் ப்ரெசண்ட் பண்ணீங்க… இப்போ வரை உங்க பர்த்டே சொல்லவே இல்லை எங்கிட்ட… உங்க வீடு எங்க இருக்குன்னு கூட எனக்கு இப்போவர தெரியாது… உங்க ஃபேமிலி பத்தி ஒன்னுமே தெரியாது… ஏன் சகி… எங்கிட்ட எதுவும் சேர் பண்ணிக்க உங்களுக்கு பிடிக்கலையா?...” என அவள் வலியுடன் கேட்க, அவன் துடித்துப்போனான்…
“கிருஷ்ணா…” என அவன் அழைக்க, அவள் முகம் திருப்பிக்கொண்டாள்…
நீண்ட நெடிய மூச்சுக்களை விட்டவன், ஒரு உறுதியுடன் அவளின் முன் சென்று மண்டியிட்டான்… அவள் அவனை பார்க்காமல் ஆலமரக்கிளையை அண்ணார்ந்து பார்த்தபடி இருக்க,
“உங்கிட்ட சொல்லணும்னு நான் நினைக்காத நாளே இல்லடா… ஆனா சொன்னா உனக்கு புரியுமா புரியாதா தெரியலை… ஒருவேளை புரிஞ்சு உனக்கு கஷ்டம் கொடுத்திட்டேன்னா என்ன செய்யுறது?.. அதனாலேயே தான் இதுநாள் வரை உங்கிட்ட எதுவும் நான் சொல்லலைடா…” என அவன் அமைதியாக சொல்ல,
“என்ன புரிஞ்சிக்க முடியாது… உங்க அம்மா பத்தி சொன்னா நான் வருத்தப்படுவேன்னு நினைச்சீங்களா எனக்கு அம்மா இல்லன்னு?... அப்படி எல்லாம் நான் நினைக்கமாட்டேன்… உங்க அம்மா என் அம்மா மாதிரி… போதுமா?...” என அவள் மீண்டும் முகம் திருப்பிக்கொள்ள, அவனோ அவளையே பார்த்தான்…
“நான் பொறந்தப்ப எனக்கு குடும்பம்னு ஒன்னு இருந்தா தான உங்கிட்ட சேர் பண்ண முடியும் கிருஷ்ணா?... நான் பொறக்குறதுக்கு முன்னாடியே என் அப்பா இறந்துட்டாராம்… நான் பிறந்ததும் என் அம்மா இறந்துட்டாங்களாம்… அப்போ என் அப்பாவோட அப்பா என்னை எடுத்துட்டு வந்து இப்போ நான் இருக்குற ஆசிரமத்துல என்னை விட்டுட்டு போயிட்டாராம்… என்னை அங்க இருக்குறவங்க தான் வளர்த்தாங்க… அங்க இருக்குறவங்க தான் இப்போ என் குடும்பம்… காவேரி மதர்… அவங்க தான் என்னை வளர்த்தாங்க… என்னை மட்டும் இல்ல.. அங்க இருக்குற எல்லாரையும் அவங்க தான் வளர்த்தாங்க… இன்னமும் வளர்க்குறாங்க… ஸ்கூல் முடிச்சிட்டு வந்து அங்க உள்ள குழந்தைங்களுக்கு நான் சொல்லி கொடுப்பேன்… அதனால தான் ஸ்கூலில் வச்சே படிச்சிட்டு ஆசிரமத்துக்குப் போவேன்… அங்க போனதும் அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க நேரம் அமைச்சிப்பேன்…”
“நான் கஷ்டப்பட்டப்போ எனக்கு துணையா இருந்த அந்த ஆசிரமத்துக்கு என்னால முடிஞ்ச உதவி செய்யணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம்… அங்க இருக்குறவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி செய்யணும்ன்ற வெறி, தங்க இடம் கொடுத்தா, உடுத்த துணி கொடுக்க முடியலை… உடுத்த துணி கொடுத்தா சாப்பிட சாப்பாடுக்கு பஞ்சம்,… இப்படி கொஞ்சம் கொஞ்சம் எல்லாம் கிடைச்சா நோய்னு ஒன்னு வந்து அந்த அறைகுறை வாழ்க்கைக்கும் உலை வைச்சிடுது… அதை போக்கணும்… நான் இருக்குற வரை போக்கியே தீருவேன்… நான் இருந்த ஆசிரமத்திலேயே இரண்டு குழந்தைங்க இதயத்துல பிரச்சினை வந்து என் கண் முன்னாடியே இறந்து போனாங்க… அந்த நிலை இனி நான் வளர்ந்துட்டிருக்குற அந்த ஆசிரமத்துல வரக்கூடாது… என்னால முடிஞ்ச உதவி செய்யணும்னு நான் நினைக்குறது தப்பு இல்லை… ஆனா அது எந்த வழியிலன்னு நான் யோசிச்சப்போ தான், எனக்கு டாக்டர் ஆகணும்ன்ற எண்ணம் வந்தது… நல்லா படிச்சு நல்ல மார்க் எடுத்தா கண்டிப்பா என்னால ஒரு டாக்டரா ஆக முடியும்னு நம்பினேன்… இன்னமும் நம்புறேன்… என்னைப் படைச்சதுக்கான காரணமே நான் நாலு உயிரை காப்பாத்த தான்னா அந்த மருத்துவ படிப்பை நான் படிச்சே தீருவேன்… என் லட்சியமே அதுதான்…”
“உன்னைப் பார்த்த பின்னாடி தான் தெரிஞ்சது…. நீயும் அன்புக்கு ஏங்குறன்னு…. நான் அனுபவிக்குற அதே வலியை நீயும் அனுபவிக்கக்கூடாதுன்னு நினைச்சேன்… என்னையும் அறியாம உன்னோட பழக ஆரம்பிச்சேன்… உன்னோட இருக்குற நிமிஷங்களை அதிகரிச்சேன்… உன்னோட குட்டி குட்டி செய்கை, பேச்சு, பார்வை எல்லாமே எனக்கு நான் தனியா இருக்குறேன்ற எண்ணத்தை என்னை விட்டு தூரமா ஒதுக்கின மாதிரி இருந்துச்சு… எனக்கு உன்னைப் பார்க்கும்போது, உங்கூட பேசும்போது, உன்னோட இருக்கும்போதெல்லாம், ரொம்ப சந்தோஷமா, நிறைவா இருக்கும், அதுமட்டும் இல்லாம மனசுல இனம் புரியாத ஒரு வித… ஹ்ம்ம்… எப்படி சொல்லன்னு எனக்குத் தெரியலை… ஆனா என் லைஃப்ல நீ இல்லாததை மட்டும் என்னால நினைச்சுப் பார்க்க முடியலை கிருஷ்ணா…”
“உங்கிட்ட நான் ஷேர் பண்ணிக்க விரும்பலைன்னு நீ சொன்ன இல்லையா, அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்… கேட்டீயே எனக்கு சகின்னு யாரு பேரு வச்சான்னு…. என் தாத்தா தான் வச்சாராம்… நான் பொறந்த அன்னைக்கே என்னை இந்த ஆசிரமத்துல கொண்டு விட்டுட்டு என் பேரை மட்டும் எனக்கு துணையா விட்டுட்டு போயிட்டாராம்…”
“உனக்கு அம்மா இல்ல, அப்பா இருந்தும் இல்லாத மாதிரி… பாட்டி துணை மட்டுமே உனக்கு ஆதரவா… எனக்கு அம்மா அப்பா இரண்டு பேரும் இல்லை… பாட்டி இடத்துல காவேரி மதர் மட்டும் எனக்கு கொஞ்சம் ஆதரவா இருக்குறாங்க… எனக்குன்னு யாருமே இல்லன்னு நான் நினைச்சப்போ, அந்த ஆசிரமத்துல இருக்குறவங்க தான் என் சொந்தம்… பந்தம்… உறவு… எல்லாமேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்… உன்னை சந்திக்குறதுக்கு முன்னாடி வரை…”
“ஆனா உன்னை கடவுள் என் வாழ்க்கையில கொண்டு வந்தப்போ நீயும் என் சொந்தம் தான்னு என் மனசு சொல்லுச்சு… அது ஏன் எதுக்குன்னு எனக்கு சொல்லத் தெரியலை கிருஷ்ணா… இப்போ நான் சொன்னது கூட உனக்கு புரிஞ்சதா புரியலையான்னு எனக்கு தெரியலைடா நிஜமா…” என தன் மனதின் பாரங்களை, தன் வாழ்வின் பக்கங்களை, தனது நிலையை, தான் அடைய விரும்பும் லட்சியத்தை, என அடுக்கடுக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லியவன், தன் வாழ்வில் அவளது வரவு எத்தகையது என்பதையும் எடுத்து சொல்லிவிட்டு அவன் நிமிர்ந்த போது, அவளின் கண்ணீர்த்துளி அவனது முகத்தினில் விழுந்தது…