அவசர அவசரமாக அறைக்குள்ளிருந்த வாட்டர் ஜக்கை எடுத்துக் கொண்டு ஓடிய மனோ வேக வேகமாக மீன்களை எடுத்து அதற்குள் போட….இவள் ஓடுவதைப் பார்த்து அங்கு வந்திருந்த மித்ரனும் இப்போது அவளோடு சேர்ந்து அதைச் செய்தான்….
இதற்குள் சத்தம் கேட்டு ஓடி வந்த இன்பாவும் அங்கு வந்து சேர…..மூன்று பேருமாக அத்தனை மீன்களையும் காப்பாற்றி சேர்த்தனர்….
“சாரி மனோ….பாட்டி எப்பவும் மாடி ஏறமாட்டாங்க…..இங்க வரை வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை…… சாரி….. ” பரிதாபமாய் கெஞ்சிய இன்பாவை பார்த்து
“இதுக்கு நீங்க என்ன அண்ணி செய்வீங்க…..” என சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தாலும்…….
அதற்கு முன்பு வரை அவள் அனுபவித்த அத்தனை ஏகாந்தமும் மறந்து போயிருந்தது மனோ மனது…. துடித்த மீன்களே மனக் கண்களில்…. எப்படிப் பட்ட பாட்டி இது?
‘ இதுட்ட மாட்டிகிட்டு இருக்ற இந்த இன்பா அண்ணி நிலமை ரொம்ப மோசம்….. இதுக்கு என்னதான் முடிவு?’ என்று தீர்வு தேடியது அவள் சிந்தனை. மித்ரனின் அம்மா நிலையும் மோசம்தான்…..ஆனால் அவர்தான் இந்த பாட்டியை இங்கு தங்க அனுமதித்திருப்பதாய் இன்பா அண்ணி சொன்ன ஞாபகம்.
ஆக கஷ்டப்பட்டே தீருவேன்ற கேட்டகரில இருக்கிற மாமியாரும் இந்த பாட்டியும் ஏதோ ஒருவகையில் தங்களோட முடிவுகள்ல பிடிவாதமா இருக்க…. இடையில மாட்டிக்கிட்டு இருக்றது இந்த இன்பா அண்ணி….
இப்படியாய் இவள் எண்ணங்கள் போய் வந்து கொண்டிருக்க….
இவளைப் போலவே சற்று நேரம் அமைதியாய் எதோ சிந்தனைக்குள் இருந்த மித்ரன் இப்போது “மனு இந்த பயோசி…. சி இ ஓ போஸ்ட்…..இதெல்லாம் உனக்கு வேண்டாம்” என்றான் ஏதோ தீர்மானம் போல்.
ஆக்சுவலி அந்நேரம் பாட்டியில் ஆரம்பிச்சு பயோசில உள்ள ப்ரச்சனை வரை யோசித்திருந்த அவன்….இயல்பாக தன் நினைவுகளை தன்னவளிடம் பகிரும் வண்ணம் ஆரம்பித்ததுதான் அந்த பேச்சு….
சாப்பாட்டு மேஜையில் வைத்தே இதமாக இந்த சி இ ஓ டாக்கை மித்ரன் மறுத்துவிடுவான் எனதான் மனோ எதிர்பார்த்திருந்தது……ஆனால் அதற்கு மாறாக அவன் அங்கு மௌனம் காக்கும்போதும் அவன் மனம் புரியத்தான் செய்தது இவளுக்கு.
அவன் அம்மா பாட்டி முன்னால் இவளை மறுக்க கூட அவனுக்கு இஷ்டம் இல்லை என்பது புரியும் போது சந்தோஷமாக இருக்கிறதுதானே….
ஆனால் அப்படி இருந்தும் இப்போது அவன் நேரடியாக ஏதோ முடிவு அறிவிப்பது போல் “மனு இந்த பயோசி…. சி இ ஓ போஸ்ட்…..இதெல்லாம் உனக்கு வேண்டாம்” என ஆரம்பிக்கும் போது ஏன் என புரியாமலே அவளுக்கு சுர் என்றது….
இத்தனைக்கும் அதட்டலாகவோ கட்டளைத்தொனியிலோ அவன் சொல்லவில்லை….. ஆனாலும் இது தான் இறுதி முடிவு என்பது போல் இருக்கின்றனதானே வார்த்தைகள்….
ஏற்கனவே இரண்டு பேரின் பிடிவாத முடிவுகளில் மாட்டித் தவிக்கு இன்பா பற்றி யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது இவன் மீது எரிச்சலின் துவக்கம்….
ஏனெனில் என்னதான் அவன் மீது காதல் ஒரு பக்கம் கசிந்து உருகினாலும்…..முக்கிய விஷயத்தில் தன் முடிவை இவள் மீது அவன் திணித்துவிட்டானே என இருந்த அந்த உறுத்தல்…..அந்த காயம்…… அது அவனது ஒவ்வொரு முடிவையும் மறுக்கச் சொல்லிக் கொண்டிருக்க…..இப்போதும் அதைப் போய் நேரடியாக தொட்டது அவனது இந்த வார்த்தைகள்…..
“ஏன்?” என்ற இவளது வார்த்தையில் நிச்சயம் உஷ்ணம் ஏறி இருந்தது.
அவள் வார்த்தையின் உஷ்ணம் கண்டுதான் தன் வார்த்தை அவளுக்குள் என்ன செய்கிறது என்பதையே உணர்ந்த மித்ரன்….“உன்னைக் கண்ட்ரோல் பண்றதால்லாம் எதுவுமில்ல மனு….இது சேஃப் கிடையாது….” என விளக்க முற்பட்டான்……
ஏன் என விளக்கம் கேட்டவளுக்கோ..…. அவனது பதிலில் அவளே எதிர்பார்க்கா வண்ணம் இப்பொழுது கோபம் எக்கசக்காமாய் எகிறி ஏறியது…..‘என் வீட்டைவிட்டு விலகி இருப்போம்….எப்பவும் என்னை சேர்த்துகிடாதவங்க அவங்க…..இது தேவையில்லாத ப்ரச்சனை…..இப்படி எதாவது அவன் காரணம் சொல்லி இருந்தால் கூட ஒருவேளை அவளுக்கு ஒத்துக் கொள்ள முடிந்திருக்குமோ…???
ஆனால் அவன் எந்த சேஃப்டி ரீசனை சொல்லி அப்படி ஒரு கல்யாண நாடகம் ஆடினானோ அதே சேஃப்டி ரீசனை இப்போதும் காரணமாய் சொல்லவும் எரிச்சல் ஏழாம் நிலை கண்டது…
“சும்மா சும்மா உன் சேஃப்டி சேஃப்டினு என்ன அடச்சு வைக்காதீங்க மித்ரன்…. எதுக்கெடுத்தாலும் பயந்து பயந்து ஒளிஞ்சுக்கனும்னா….வாழ்க்கையில என்னதான் மிச்சமிருக்கு?...அதான் அந்த ஆடிட்டரதான் அரெஸ்ட் செய்தாச்சே…இன்னும் யாருக்கு பயந்து நான் எங்க போய் ஒளியனும்?” கடுகடுத்தாள்.
அவள் இவன் சொன்ன விஷயத்தைப் பார்க்கும் விதம் இப்போதுதான் விளங்க… மித்ரன் ஒரு திகைத்த பார்வை பார்த்தாலும்…. அடுத்தும் அவளுக்கு விஷயத்தை விளக்கத்தான் முனைந்தான் அவன்.
“அதுக்கில்ல மனு …. இது வேற….பயோசில எதோ ப்ராப்ளம்…..” அவன் ஆரம்பிக்க…..
இப்பொழுது எவரெஸ்ட் ஏறி இருந்தது மனோவின் கோபம்…. என்ன விஷயம்னே தெரியாத ப்ரச்சனைக்கு இவ பயந்து போய் ஒளிஞ்சிட்டு இருக்கனும்னு சொல்ல வர்றானா….?