“வர வர அவளுக்கு ரொம்ப கொழுப்பாயிட்டு… வரட்டும் இன்னைக்கு பேசிக்கிறேன்…” என எண்ணெயில் போட்ட கடுகென பொரிந்து கொண்டிருந்தார் பிரசுதி…
“ஏய்… இப்போ எதுக்குடி என் பொண்ணை திட்டுற?... கூட கொஞ்ச நேரம் படிச்சிட்டு வருவாளா இருக்கும்… இல்ல ஃப்ரெண்ட் யாரையாவது பார்த்திருப்பா… பேசிட்டு வீட்டுக்கு வருவா… இதுக்கு ஏண்டி நீ வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குற?...”
“காலையில அவளுக்கு பின்னாடி ஜாக்கிங்க் போயிட்டு வந்தவன் தான இஷான்… அவன் வீட்டுக்கு வந்து எவ்வளவு நேரமாச்சு… இன்னும் உங்க அருமை பொண்ணு வீட்டுக்கு வந்தபாடில்லை… இருக்கட்டும் இன்னைக்கு அவளுக்கு நான் கச்சேரி வைக்கலைன்னா பாருங்க…” என வசைபாடிக்கொண்டிருந்த பிரசுதி, எதேச்சையாக வாசலைப் பார்க்க, அங்கே சோமநாதன் வந்து கொண்டிருந்தார்…
“வாங்கண்ணா… வாங்க…” என அவரை வரவேற்க சென்றார் பிரசுதி வேகமாய்…
மனைவியின் வரவேற்பை பார்த்துவிட்டு, தட்சேஷ்வரும் திரும்பி பார்த்துவிட்டு, “வாடா… சோமு…” என சொல்லிக்கொண்டே அவரும் நண்பனின் அருகே செல்ல,
அங்கே கைத்தாங்கலாக தைஜூ சதியை அழைத்துக்கொண்டு வருவது தெரிந்து இருவரும் மகளின் அருகில் ஓடினர்…
“சதி… என்னம்மா… என்னாச்சு?...” என்ற பதட்டக்குரல் தன்னை சுற்றிக் கேட்க, அவள் தாயையும் தகப்பனையையும் பார்த்து,
“ஒன்னுமில்லம்மா… கொஞ்சம் தலை வலிச்சிட்டு ஒரு மாதிரி வந்துட்டு…” என்றவள்,
“வேற ஒன்னுமில்லப்பா…” என்றாள் தகப்பனைப் பார்த்து மெதுவான குரலில்…
“சதி…” என மகளைப் பார்த்து வருத்தம் கொண்ட நண்பனிடமும், தங்கையிடமும், தைஜூ சதியை வீட்டிற்கு அழைத்து வந்த விவரத்தை சோமநாதன் கூற,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
நேற்று கைப்பிடித்து அழைத்து சென்றபோது கூட மகளின் குரலில் இந்த அளவு சோர்வு இல்லாதது உணர்ந்து மகளின் கையை மெல்ல பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார் அவர்…
“இஷான்…” என பிரசுதி குரல் கொடுக்க,
“என்னம்மா…” என வந்தவன், ஹாலில் சோர்ந்து போன சதியைப் பார்த்துவிட்டு, வேகமாக கீழே வந்தான் அவன்…
“சதி… என்னாச்சுடா?... ஏண்டா ஒருமாதிரி இருக்குற?...” என தங்கையின் முகம் பற்றி கேட்டவனிடத்தில் தைஜூ, விஷயத்தை சொல்ல,
வேறு எதுவும் கேட்காமல் தங்கையின் கைப்பிடித்துக்கொண்டு அவளை அழைத்துச் செல்ல முயன்ற போது அவள் தடுமாறி கீழே விழ, சட்டென்று பிடித்துக்கொண்டான் இஷான்…
“என்னடா சதி… பார்த்தும்மா…” என பதறியவன், “இரு இரு… நீ நடக்க வேண்டாம்…” என்றபடி தங்கையை தூக்கிக்கொண்டு அவளது அறை சென்று அவளைப் படுக்க வைத்துவிட்டு வெளியே வர, தைஜூ வந்தாள்…
அவளை நின்று நிதானமாக பார்த்தவன், “கீழே சொன்ன அதே கதையை எங்கிட்டயும் சொல்லாத தைஜூ… சதியை நான் இப்படி ஒருநாள் கூட பார்த்தில்லை… உண்மையை சொல்லு… என்ன நடந்துச்சு?...” என அவன் அழுத்தி கேட்க, அவனிடத்தில் எப்படி சொல்ல என அவள் தயங்கி நின்ற போது,
“வாம்மா… தைஜூ…” என்ற குரலில் இஷானிடமிருந்து விலகி பிரம்மரிஷியிடம் சென்றாள் அவள்..
“சதி எங்கம்மா?...”
“தாத்தா அவ உள்ள ரெஸ்ட் எடுக்குறா?...”
“ஏன் என்னாச்சு?...” என அவர் கேட்டதும்,
நடந்ததை சொல்லி முடித்திருந்தார் திடீரென அங்கு வந்த தட்சேஷ்வர்…
இது அவருக்கு தெரியாத ஒன்றில்லை என அவர் மனம் அறிந்த போதிலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
“நான் சதியை பார்த்துட்டு வரேன்… யாரும் தொந்தரவு பண்ணாதீங்க…” என்றபடி சதியின் அறைக்குள் செல்ல, தைஜூ சட்டென அங்கிருந்து நகர்ந்தாள்…
அவளைத் தொடர்ந்து, அப்பாவும் மகனும் கூட சென்றுவிட,
அறைக்குள், கண் மூடி படுத்திருந்த சதியின் விழி ஓரம் வழிந்திருந்த நீரை மென்மையாக அவர் துடைக்க,
ஸ்பரிசம் பட்டு கண் விழித்தவள், “தாத்…..தா….” என கண் விழிக்க,
“ஒன்னும் இல்லம்மா… பயப்படாத… சரியாகிடும்… தாத்தா இருக்குறேன்ல…” என கூற, தைரியம் பெற்றவளாய் சரி என்று தலை ஆட்டினாள் அவள்…
பரிதவிப்புடன் இருந்தவளின் தலை மீது அவர் கைவைத்து வருட, சட்டென அவளது விழிகள் கொஞ்சம் கொஞ்சமாய் துயில் கொண்டது…
அவள் உறங்கிவிட்டாள் என்றறிந்ததும், அவளின் கைபேசியை தேடினார் அவர்…
அவளை அழைத்துவந்த போது, போனை பத்திரமாக இஷான் அவளது கட்டிலின் அருகே வைத்துவிட்டு சென்றான்…
அது அவர் கண்ணில் தட்டுப்பட, அதை எடுத்து செய்யவேண்டியவற்றை அவர் செய்துமுடித்துவிட்டு வெளியே வந்த போது, அவரையும் அறியாமல் அவர் உடல் அதிர்ந்தது…
“உயிரோட என்னை நானே அக்னிக்கு சமர்ப்பணம் செஞ்சிடுவேன்….” என்ற வார்த்தைகளே திரும்ப திரும்ப அவர் காதுகளுக்குள் ஒலிக்க, கண் மூடி அதனை ஜீரணித்துக்கொண்டார் அவர்…