கடந்த சில நாட்களாக விஷ்ணுவிடம் பழகும் போதும், தன்னுடன் பேசி சிரிக்கும் போதும், தனக்க நேரம் செலவிடும் போதும் அனுவிற்கு அவ்வப்போது தோன்றும் எண்ணம் “ஒரு வேளை விஷ்ணு என்னைக் காதலிக்கிறானோ” என்பதுதான். (அது தான் உண்மை அனு மேடம்). முன்பெல்லாம் அந்த எண்ணம் எழும்போது எல்லாம் “அப்படியெல்லாம் இருக்காது” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள், இப்போது சில நாட்களாக “விஷ்ணு தன்னை காதலிப்பதாக நினைப்பது சரி என்றால் நாம்தான் அவன் காதலை புரிந்து கொள்ளவில்லையோ” என்று தோன்றுகிறது.
(இந்த இடத்தில் நான் ஒன்றைக் கூறியே ஆக வேண்டும். காதலும், கை குழந்தையும் ஒன்றுதான். எப்படி ஒரு குழந்தையை இதைச் செய் அதைச் செய் என்று கூற முடியாதோ அதே போல் தான் காதலும். இன்னார் இன்னாரைத்தான் காதல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி காதலைத் திணிக்க முடியாது. மற்றவர்களை ஏன் குறை கூற வேண்டும், நாமே நம்மை அதட்டி ஒருவர் மேல் காதலை வரச் செய்ய முடியாது. குழந்தைக்கு வெள்ளை கருப்பு, பணக்காரன், ஏழைத் தெரியாது யார் அன்புகாட்டினாலும் அவருடன் ஒன்றிவிடும். காதலும் அது போலத்தான். லவ் ஸ் பிலைண்டு, ஃபெரெண்ட்ஸ்)
அப்படிதான் ஆனது அனுவின் நிலைமையும். கிளிப்பிள்ளையைப் போல் தன் மனதிற்கு அவள் எத்தனையோ முறை திபக்கைதான் காதல் செய்ய வேண்டும் என்று கூறிருப்பாள். அவள் மனமும் சரி சரி என்று தலையாட்டி விட்டு விஷ்ணுவைப் பார்த்த அடுத்த நொடி திபக் என்றால் யார் என்று கேட்டது. பாவம் பேதை என்றுதான் சொல்ல வேண்டும்.
அவள் மனம் இருந்த குழப்பத்திற்கு அன்று கோவிலுக்கு சென்றால் நன்றாக இருக்கும் எனத் தோன்ற தன் தாயிடம் அனுமதி கேட்டாள். தனியாகச் செல்ல வேண்டாம் என்று கூறி பார்வதி மறுத்துவிட்டார். அப்போது அங்கு விஷ்ணு வரவே அவனுடன் செல்வதாக அடம்பிடித்து பார்வதியை சம்மதிக்க வைத்தாள் அனு.
இருவரும் காரில் பெஸண்ட் நகர் அஸ்ட லட்சுமி கோவிலுக்கு போவதென்று முடிவானது. எமனிடம் போட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி விஷ்ணு கடவுளை வணங்கக் கூடாது, அதனால் கோயிலுக்கு செல்வதற்கு மனம் இல்லை என்றாலும் அனுவிற்காக ஒத்துக் கொண்டான்.
இருவரும் கோயிலை அடைந்தவுடன், விஷ்ணு “ அனு நீங்கப் போய் கும்பிட்டு விட்டு வாங்க நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்று கோவிலுக்கு வரப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொன்னான்.
“என்ன விஷ்ணு கோவில் வரைக்கும் வந்துட்டு உள்ள வரமாட்டியா. சாமி கோபப்பட்டு கண்ணக் குத்தும்” என்று சிறு பிள்ளை போல் விளையாட்டாய் கூறினாள்.
சாமி என்ன என் கண்ணை குத்துவது, இப்போ அந்த எமன் மட்டும் என் கையில் கிடைத்தால் நா அவர் கண்ணை குத்துவேன் என்று தன் மனதில் நினைக்க, எமலோகத்தில் ஆனந்தமாய் ஆப்பிள் ஜுஸ் குடித்துக் கொண்டிருந்த எமனுக்குப் பொறை ஏரியது. தலையை தட்டிக் கொண்டே சித்ர குப்தரை பார்க்க அவரோ எமனின் அவஸ்தைக்குக் காரணம் என்ன என்பதை அரிந்து அமைதியாய் சிரித்தார்.
எமனை திட்டிக் கொண்டிருந்த விஷ்ணுவின் எண்ணத்தைக் கலைத்தாள் அனு. “என்ன விஷ்ணு, வா உள்ள போலாம்” என்று கூறி அவன் பதிலுக்காக காத்திறாமல் அவன் கையை பிடித்துக் கொண்டு கோயிலின் உள்ளே சென்றாள்.
என் தேவதை கை பிடித்துப் போகவேண்டும் என்றால் நரகத்திற்கு வேண்டுமானாலும் போவேன் இந்தக் கோயிலுக்கு போக மாட்டேனா என்ற எண்ணத்தில் அமைதியாக அவள் பின்னால் நடந்தான் விஷ்ணு.
தெய்வத்தின் முன் நின்று கண் மூடி, தன் மனக் குழப்பத்திற்கு எல்லாம் ஒரு விடை கொடு என்று வேண்டிக் கொண்டிருந்தாள் அனு. தங்கச் சிலை ஒன்று கண் மூடி கை கூப்பி எதிரில் இருக்கும் மற்றொரு தங்க சிலையை வணங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. அப்படியே இந்த நொடி உறைந்துவிட்டால் கூட நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.
கண் மூடி வேண்டியவளுக்கோ, யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்வு வரக் கண் திறந்து விஷ்ணுவைப் பார்த்தாள். அவனோ அவளை வெச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன” என்பது போல் கண்களையும் புருவத்தையும் உயர்த்தி அனு கேட்க, ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்தான் விஷ்ணு. “ஒன்றும் இல்லை என்றால் கண்களை மூடி கடவுளை வணங்கு” என்பது போல் கண்களினாலே செய்கை காட்டினாள் அனு(தாண்டவம் படம் அனுஷ்கா மாதிரி. ஹை என்ன ஒரு பொருத்தம் பாருங்க அது அனுஷ்கா இது நம்ம அனு).
அந்த இடத்தில் அழகாய் சிரித்தது அவளது உதடுகள் மட்டும் அல்ல அவள் கண்களும் தான். அப்படியே அந்தக் கண்களில் தொலைந்து போய்விடக் கூடாதா என்று கூட அவனுக்குத் தோன்றியது.
அவள் உருவத்தை, அழகாய் சிரித்த அந்தக் கண்களை, என்ன அவளை முழுவதுமாக தன் கண் என்னும் மாய கேமிராவால் படம் எடுத்தவன் அதை தன் மனதில் பிரிண்ட் போடுவதற்காக, வெளிச்சம் புகாமல் இருக்க அவள் கூறியதை போல் கண்களை மூடினான்.
அவன் கண்களை மூடச் சொன்னவள், தன் கண்களை மூடாமல் அவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். “யாருடா நீ. எதுக்கு என் லைப் ல வந்த, என்ன வேணும் உனக்கு, உன்னைப் பார்த்தா எதுக்குட என் மனம் அலை பாயிது” என்று அவனைப் பார்த்தவாறே தன் மனதில் கேள்விகளை எழுப்பினாள். ஆனால் அந்தக் கேள்விக்கு அவளிடம் விடை இல்லை.