கணவன் தான் வந்துவிட்டானோ என்ற சிந்தனையுடன் அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் முன் வந்து நின்றான் சுதீப்…
“எதுவும் பேசவேண்டாம்… எங்கூட வாங்க அண்ணி வீட்டுக்கு…”
அவன் வற்புறுத்தி அழைக்க, அவள் அசையவில்லை…
“அண்ணி ப்ளீஸ்… இந்த நடுராத்திரியில இனியும் இங்க இருக்க வேண்டாம்… வாங்க அண்ணி… அண்ணங்கிட்ட நான் பேசுறேன்… நீங்க வாங்க…”
“………………”
“அண்ணனுக்கு கிறுக்கு பிடிச்சிட்டு… என்ன செய்யுறோம்னு தெரியாம செஞ்சிட்டிருக்கான்….” என அவன் கவலையோடு பேசிக்கொண்டிருக்கையில்,
“தெரிஞ்சு தான் செய்யுறார்….” என்றாள் சரயூ அமைதியாக….
“அண்ணி…………… நான்………….” என பேச முயன்றவனை தடுத்தவள்,
“ஊருக்குப் போறதுக்கு கொஞ்சம் பணம் மட்டும் தருவீங்களா?... கையில சுத்தமா காசு இல்லை…”
கரகரப்பான குரலில் கண்ணீருடன் அவள் பேசி முடிக்க, சுதீப்பிற்கு சட்டென ஒரு மாதிரி ஆகிப்போனது…
சட்டையில் இருந்த பணத்தை எடுத்து அப்படியே என்ன ஏது என்று பார்க்காமல் எண்ணாமல் அவளிடம் அவன் கொடுக்க, அதை வாங்க நீட்டிய அவளது கரம் நடுங்கியது…
ஊருக்கு போவதற்கு தேவையான பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு மிச்சத்தை அவனிடமே கொடுக்க, அவன் வேண்டாமென்றான்…
அவன் மறுத்துக்கொண்டே இருக்க, அவள் விடாப்பிடியாய் அவன் கைகளில் மீதி பணத்தை திணித்துவிட்டு கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளிடம்,
“வீட்டுக்கு தான் வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க… உங்க மனசு எனக்கு புரியுது… உங்களைப் பத்திரமா ஊருக்கு வண்டியாச்சும் ஏத்தி விடுறேன்… அதையும் மறுத்துடாதீங்க ப்ளீஸ்…”
அவனது கெஞ்சலுக்கு செவி சாய்த்தவள், அவனுடன் நடந்தாள்…
அவளை பத்திரமாக வண்டி ஏற்றிவிட்டுவிட்டு, “அர்னவிற்கு போன் செய்து சொல்லவா அண்ணி… உங்களை பஸ் ஸ்டாண்ட் வந்து கூப்பிட சொல்லி?...” எனக் கேட்டான்…
“நாளைக்கு காலையிலேயே மொத்தமா எல்லாரோட நிம்மதியையும் கெடுத்துக்குறேன்… இந்த ராத்திரி பொழுதாச்சும் நிம்மதியா இருக்கட்டும் என் வீட்டுல…”
அவளின் பதிலில் அடுத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன், பஸ் கிளம்பி தன் கண் பார்வையிலிருந்து மறைந்ததும் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்….
விடிகாலை பொழுது தூங்கிக்கொண்டிருந்த அர்னவினை வீட்டின் அழைப்பு மணியோசை கலைத்தது…
தூக்கம் கலைந்து எழுந்தவன் மணி பார்க்க, அது 5 என காட்டியது…
“அதுக்குள்ள அம்மாவும் அப்பாவும் வந்துட்டாங்களா என்ன?... கல்யாண வீட்டுக்கு நேத்து ராத்திரி தான கிளம்பி போனாங்க… மூகூர்த்தம் கூட முடிஞ்சிருக்காதே…” என யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு, நிச்சயமாய் அது தன் தாயும் இல்லை தகப்பனும் இல்லை என உரைக்க,
“பின்ன வேறு யாரு?... இந்த நேரத்துல?...” என எண்ணிக்கொண்டே விரைந்து சென்று கதவைத்திறந்தவன் அதிர்ந்து போனான் ஒரு கணம்…
வாசலில், முகம் எங்கும் அப்பிய கவலையும், கண்ணீர்க்கோடுகளும், கலங்கிய விழிகளுமாய் நின்றிருந்த தமக்கையைப் பார்த்ததும் சர்வமும் அடங்கிப் போனது அவனுக்கு…
“சிஸ்…………..” என்றவனின் குரல் அதிர்ந்து ஒலிக்க, அவள் அவனை நிமிர்ந்து பாராமல், அவனைக் கடந்து செல்ல, அவளின் பின்னே ஓடினான் அவன்…
அவளின் முன்னே சென்று வழியை மறித்தவன், அவளின் கைப்பிடித்து “இந்த நேரத்துல எ…ப்…ப….டி…. சிஸ்?....” என திக்கித் திணறி கேட்க, அவள் அதுநேரம் வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது…
தம்பியின் தோள் சாய்ந்து அழுது தீர்த்தாள் சரயூ… அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவன், அவளது முகம் நிமிர்த்தி,
“ப்ளீஸ்… சிஸ்… அழாதீங்க…” என்றபடி அவளை சோபாவில் அமரவைத்துவிட்டு, குடிக்க சூடாக ஒரு காபி போட்டு வந்து கொடுக்க, அவள் வாங்க மறுத்தாள்…
“குடிங்கன்னு சொல்லுறேன்ல… குடிங்க…” என அழுத்தி சொல்லி கொடுக்க, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் கண்ணீருடன்…
“என்ன பார்க்குறீங்க?... அழறதுக்கும் தெம்பு வேணும்ல… அதனால தான் சொல்லுறேன் சிஸ்… குடிங்க…” என அவன் மீண்டும் கட்டாயப்படுத்த, இம்முறை மறுக்காமல் அவனிடமிருந்து காபியை வாங்கி குடித்துவிட்டு, தனதறைக்குச் சென்றவளிடம்,
“நீங்க போய் தூங்குங்க… பட் ஒரே ஒரு கண்டிஷன்… ரூமை பூட்டக்கூடாது…” என அவன் சொல்ல,
அவனை விரக்தி புன்னகையுடன் திரும்பி பார்த்தாள் சரயூ…
“பிணம் சாக முயற்சி செய்யாது கார்த்தி...” என சொல்லிவிட்டு கட்டிலில் தொப்பென்று விழுந்தாள் அவள்… அழுகையில் அவள் உடல் குலுங்க, இங்கே மனமெங்கும் வலியுடன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான் அர்னவ்…
தொடரும்
{kunena_discuss:995}