"அப்புறம் புது ஆஃபீஸ் ஸ்டார்ட் ஆனபின்னே போ சரியா அனிம்மா, உன் ஃபிரண்ட் வேற கூட இருக்கான்" எனச் சொல்லி ஜீவனை கைக் காட்டி மகளுக்கு மகிழ்ச்சிதானாவென அவள் முகத்தை ஆர்வமாகப் பார்த்தார் அவர். மகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு அதில் பெருமிதம் கொள்ளும் உணர்வை அவர் முகம் பிரதிபலித்தது.
அனிக்காவிற்கு அங்கே வேலைக்குச் செல்ல எவ்வித தயக்கமும் இல்லைதான். ரூபனின் சொற்களை மறக்கவில்லை ஆயினும், அவன் ஒரு போதும் இவளிடம் தேவைக்கு அதிகமாக வழிந்து பேசியதாகவோ, உடல் கூச உறுத்து விழித்ததாகவோ, கண்ணியமற்று காமுகப் பார்வைப் பார்த்ததாகவோ அவளுக்கு நியாபகமில்லை. ஒரு சில நேரம் அவன் அது குறித்து மறந்து விட்டிருப்பான் போலும் என்றுக் கூட இவள் எண்ணியிருக்கிறாள். அந்த சம்பவம் நிகழ்ந்தும் வருடம் நான்காகின்றதே.
தன்னுடைய மகிழ்ச்சியான பதிலைக் கேட்கக் காத்திருக்கும் அப்பாவை ஏமாற்றம் அடையும் படிச் செய்யக் கூடாதெனெ எண்ணியவளாய் உடனே
"சரிப்பா, நீங்க சொன்ன மாதிரி போறேன், "தாங்க்யூப்பா" என்றவளாய் மிக மகிழ்வாய் தலையசைத்தாள்.
"அதெல்லாம் நான் அவளைப் பார்த்துப்பேன் மாமா" என்றான் ஜீவனும், அப்படி என்னப் பார்க்கப் போறான் இவன் என்று தம்பியை ஒரு பார்வைப் பார்த்து வைத்தான் ரூபன்.
அத்தனையையும் தூர நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த சாரா மனதில் சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த உரையாடல் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.
இந்திரா அன்று வீட்டிற்கு வந்திருந்தார், கிறிஸ் தன் குடும்பத்தோடு விடுமுறைக் கொண்டாடப் போயிருந்தான். தாமஸ் அலுவலுக்கும், அனி கல்லூரிக்கும் புறப்பட்டுச் சென்றிருந்ததால் அந்த தனிமையில் இந்திராவைப் பார்த்து மகிழ்ச்சியாக வரவேற்றார் சாரா.
"வாங்க அண்ணி, நானே வேலையை முடிச்சிட்டு அங்கே வரலாமான்னு இருந்தேன்"என்று பொதுவாகப் பேசத் தொடங்கினர். அவர் தன்னிடம் ஏதோ பேச வருவதை , அதற்காக தயங்கி நிற்பதை உணர்ந்த சாரா, என்னாச்சுங்க அண்ணி? என்னவோ பேச வந்திருக்கீங்க? என்கிட்ட என்ன தயக்கம் என,
"ஆமா சாரா , ரொம்ப நாளா இதப் பத்திக் கேட்கணும்னே இருந்தேன் ...."
"என்ன அண்ணி....'
"அது வந்து நம்ம ரூபன்........"
............
நம்ம ரூபனுக்கு அனிக்குட்டியை ரொம்ப பிடிச்சிருக்கும் போல இருக்கு, நான் தீபன் கல்யாணத்தன்னிக்குத்தான் கவனிச்சேன். இதைப் பத்தி இன்னும் உன் அண்ணனுக்கு கூடச் சொல்லலைப் பார்த்துக்க..........
........................
உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் , ஆனா எப்படியும் தாமஸ் அண்ணன் அவளுக்கு நல்ல வசதியான வரனை எதிர்பார்ப்பாங்க.
...................................
இவன் வேலையும் இப்ப நல்லா போயிட்டு இருக்கு கூடிய சீக்கிரம் நல்லா வருவான் .
............................................................
அவனுக்கு கெட்டப் பழக்கம் எதுவும் கிடையாது, அந்த பிரச்சினை நடந்த அன்னிக்கு தான் முத தடவைக் குடிச்சேன்னு தீபன் கிட்டச் சொல்லியிருக்கான்.
................................................
அவன் என் மத்தப் பிள்ளைங்க மாதிரி கிடையாது. மனசு விட்டுச் சொல்ல மாட்டான். அதான் நான் முதல்லயே உன் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டு வைக்கணும்னு நினைச்சேன். நீ கொஞ்சம் அண்ணன் கிட்ட சொல்லி வச்சேன்னா.... நான் உன் அண்ணாகிட்டச் சொல்லி அவர் அடுத்த லீவில வர்றப்போ, பொண்ணுக் கேட்க வரலான்னு நினைச்சேன்.
எனக்கு இந்த விஷயம் முன்னமே தெரியும் அண்ணி எனச் சொல்லி சாரா இந்திராவை அதிர வைத்தார்.
ஆமா, நீங்க சொன்ன மாதிரி நானும் நம்ம தீபன் மேரேஜ் அன்னிக்கு தான் நானும் ரூபனைக் கவனிச்சேன். நீங்க ரூபனைப் பத்தி எனக்குச் சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா, அவன் தான் தங்கமான பிள்ளையாச்சே..............ஆனா.....
.......... அந்த ஆனால் வார்த்தையின் அர்த்ததை அறிந்துக் கொள்ள என்னென்று பார்த்த இந்திராவிடம்
எங்க வீட்டுக்காரருக்கும், கிறிஸ்ஸுக்கும் அவன்னா உயிரு, ஏற்கெனவே, நிறைய இடத்தில இருந்து சம்பந்தம் வந்திட்டு இருக்கு.ஆனால், அது இவங்க ரெண்டு பேரைத் தாண்டி இது வரை வரவே இல்லை. ரெண்டு பேருமே அதை அத்தனை அலசி ஆராயிறதில ஒருத்தருக்கொருத்தர் மோதிக்குவாங்க. ஒரு சம்பந்தம் இவருக்கு பிடிச்சிருக்குன்னா அவன் அதெல்லாம் என் தங்கச்சி அழகுக்கு காணதுன்னு ரிஜெக்ட் பண்னிடுவான். இல்ல அவனுக்கு பிடிச்சதுன்னா இவன் வசதி காணாதுடான்னு அவரு ரிஜெக்ட் பண்ணிடுவாரு.