05. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்
“ஆட்டோ கிடைச்சதாடா சரயூ? வீட்டுக்கு வர லேட்டாயிடுச்சா?” என்று அப்போதுதான் வீட்டை அடைந்த ராகுல் அக்கறையுடன் தங்கையை விசாரித்தான்.
“இல்லை ராகுல்! சஞ்சு என்னை டிராப் பண்ணினான். சோ சீக்கிரமே வந்துட்டேன். இவ்வளவு நேரம் டிராஃபிக்ல மாட்டியிருந்ததால நீதான் டையர்டாயிருப்ப. டூ மினிட்ஸ் கொடு அம்மாவோட ஸ்பெஷல் காஃபியோட வரேன்” என்றவள் சமையலறையை நோக்கி ஓடினாள்.
“அம்மா! ராகுல் வந்துட்டான். அவனுக்கு காஃபி வேணுமாம். அப்படியே எனக்கும் ஒரு காஃபி”
“நீ போ! நான் எடுத்துட்டு வரேன்”
ஒரு கப் காஃபியை எடுத்து வந்த சாரதா, “ரொம்ப டையர்டா இருக்கா ராகுல்? இந்தா காஃபி… இதை குடிச்சனா கொஞ்சம் மேலாயிருக்கும்”
“எனக்கு எங்கம்மா காஃபி?”
“எத்தனை முறை குடிப்ப? இப்போ தானே சஞ்சய் வந்தப்போ குடிச்ச?”
“அது அப்போ! இது இப்போ!” என்று பன்ச் பேசினாள் சரயூ.
சாரதாவும் ராகுலும் இவளின் பன்ச் கேட்டு சிரிக்க… “நீ சிரிச்சிட்டே இரு! எனக்கு இதை கொடு” என்று ராகுலிடமிருந்து காஃபியை பிடுங்கிப் பருக ஆரம்பித்தாள் சரயூ.
“சொல்றதை கேட்கவே மாட்டியா சரயூ… காஃபி அதிகமா குடிச்சா உடம்புக்கு ஒத்துக்காது.. அதை எங்கிட்ட கொடு” என்று அந்த கப்பை பிடுங்க முயன்றார் சாரதா.
“உனக்கு காஃபி வேணும்னா நீயே போய் போட்டுக்கம்மா! என்னோட காஃபியை கேட்காதே”
சரயூவிற்கு காஃபி மிகவும் பிடிக்கும். தினந்தோறும் காஃபியோடு தான் தன்னுடைய நாளைத் துவங்குவாள். ஒரு நாளுக்கு குறைந்தது ஐந்து முறையாவது காஃபி குடிக்காமல் அவளால் இருக்க முடியாது. சரயூக்கு காஃபியின் மேல் அப்படியொரு லவ். என்ன தான் மகளுக்கு காஃபி பிடிக்குமென்று நல்ல காஃபி தயாரித்து கொடுத்தாலும் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று முன்னோர் வாக்கினை நம்பும் சாரதாவிற்கோ இவளின் இந்தப் பழக்கத்தை எப்படி குறைப்பது என்ற கவலை. இன்றோ ஏழாவது கப் காஃபியைப் பருகும் மகளை தடுக்க முயன்றார்.
“அது உன்னோட காஃபியா? இன்னைக்கு ஏழு கப் குடிச்சிருக்க.. அதனால் இன்னும் ரெண்டு நாளைக்கு உனக்கு காஃபி கிடையாது” என்றபடி சமையலறையிலிருந்து இன்னொரு காஃபியை கொண்டு வந்து ராகுலுக்கு கொடுத்தார்.
“விடுங்கம்மா! காஃபிதானே குடிக்கிறா”
“அப்படி சொல்லுடா என் செல்ல அண்ணா. நான் என்னவோ ஆல்கோஹால் கேட்ட மாதிரி பேசிக்கிட்டு”
“ஓ… அந்த நெனப்பு வேற இருக்காடி உனக்கு? உங்கப்பா வரட்டும் இன்னைக்கு. அளவுக்கு மீறி செல்லங்குடுத்து உன்னை இப்படி பண்ணி வச்சிருக்காரு. அவரோட சப்போர்ட் இருக்கற தைரியத்துல தான் நீ இப்படியெல்லாம் பேசிட்டிருக்க” கோபத்தில் முகம் சிவக்க மகளை கண்டித்தார் சாரதா.
“எதுக்கு அப்படி சொன்ன சரயூ? இப்போ பாரு அம்மா எவ்வளவு வருத்த படறாங்க. சாரி சொல்லு”
உன்னை போயி செல்ல அண்ணன்னு சொன்னேனே என்னை நானே எதுலயாவது அடிச்சுக்கனும். “நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவா தெரியும். அப்புறம் ஏன் இப்படி பண்றீங்கம்மா?”
“நாங்க உன்னை அப்படி வளர்க்கலைன்னு நல்லாவே தெரியும். நீ பேசறது தான் சரியில்லை, சரயூ”
“அம்மா…கொஞ்சம் பொறுமையா இருங்கம்மா!” என்ற ராகுல் சரயூவிடம் திரும்பி, “சாரி சொல்லுன்னு சொன்னேன்” என்றவனின் குரலில் கோபமேறியிருந்தது.
“சாரிமா! சும்மா அப்படி சொன்னேன். எனக்கு ஆல்கோஹால் வாடையே தெரியாது” சாரதாவின் முகத்தைப் பார்த்து கெஞ்சினாள் சரயூ.
சாரதாவோ முகத்தைத் திருப்பிக்கொள்ள, “என் செல்ல அம்மா இல்லை; புஜ்ஜி அம்மா நீ; பட்டு அம்மா நீ” என்றபடி அவர் கழுத்தைக் கட்டிகொண்டு கன்னத்தில் முத்தமிட சாரதாவின் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது. ஆனாலும் அதை வெளிகாட்டாமல் “என் முகத்தை எச்சில் பண்ணாத” அவள் கைகளை தன்னுடைய கழுத்திலிருந்து விலக்கினார்.
தன் கைகளை இறுக்கிய சரயூ, “என் அம்மா! நான் எத்தனை முத்தம் வேணுமானாலும் கொடுப்பேன்” சாரதாவின் இரு கன்னங்களிலும் முத்த மழைப் பொழியவும்..
“அம்மாவை விடு சரயூ. அவங்க எனக்கும் அம்மாங்கிறத மறந்திடாத. சான்ஸ் கிடைச்சா அம்மாவை உனக்கு மட்டும் தான் சொந்தம்னு சொல்லுவ போல” ராகுல் தன் தாயிவின் கைகளை பிடித்தபடி அருகில் வந்தமர்ந்தான்.
தன் பிள்ளைகளின் செயலில் மகிழ்ந்தவராக சாரதா புன்னகைத்து இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டு, “நீங்க ரெண்டு பேரும் எப்போதும் ஒன்னா சந்தோஷமாயிருக்கனும்… இதுதான் என்னோட ஆசை”