“இந்த போன்ல இருந்து பேசும் போது,நாம இருக்கற இடம்,இந்த போனோட நம்பர்,நெட்வொர்க் எதையுமே ட்ரேஸ் செய்ய முடியாது.நாம இப்போ இருக்க இடம் கொல்கத்தா.என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா,கொல்க்கத்தால தான் இருக்கோம்னு சொல்லிடு”என்ற பிறகு அவள் எதற்கு இருப்பிடத்தைப் பற்றி சொல்லப் போகிறாள்.
பாண்டியனுக்கு போன் செய்தவள்,அவர் எடுக்கவும் குரலில் கொஞ்சமும் சோகத்தை காண்பிக்காமல்,மிகவும் உற்சாகத்துடன்,”அப்பா”என்று அழைத்தாள்.
குரலை கேட்டவுடன்,”குட்டிமா”என்று பதட்டத்துடன் பாண்டியன் அழைக்க,
அவருக்கு பேச வாய்ப்பு கொடுக்காமலையே,”நான் ரொம்ப சேஃபா இருக்கேன்ப்பா.சரியா இன்னும் பத்து நாள்ல வீட்டுக்கு வந்துடுவேன்.அந்த சிஐடிக்காரன மட்டும் வீட்டுக்குள்ள நுழைய விட்டுடாதீங்க.அவன் அப்படியே போய் தொலையட்டும்.நீங்க நேர நேரத்துக்கு சாப்டனும் சரியா.பூக்கட்டுற வேலையை அத்தைக்கிட்ட கொடுத்துடுங்க.ஷோரூம் சரண் மரமண்டை கவனிச்சுக்குவான்.நீங்க எதுக்கும் அலையக் கூடாது”என்றவள்,
“சரண்கிட்ட போனைக் கொடுங்கப்பா”என்றதும் அதற்காகவே தவிப்புடன் காத்திருந்த சரண் உடனே வாங்கிக் கொண்டான்.
“டேய் மாமா,நான் வர்ற வரைக்கும் அப்பாவை பத்திரமா பார்த்துக்கற.உன் ஆள பார்க்கறேன்னு இடையில எங்கேயும் போன,உடனே சாரயக்கடைக்காரருக்கு போன் பண்ணி உனக்கு ஆப்பு வைச்சிடுவேன்.புரிஞ்சுதா”என்று யாருக்கும் பேச வாய்ப்புக் கொடுக்காமல் பேசிக்கொண்டே போக,
எதிர்புறத்தில் அமர்ந்து போனில் தனது கவனத்தைப் பதித்திருந்த யஸ்வந்த்தின் முகம் கன்றிப்போனது.
‘வேண்டுமென்றே தான் போனாளா’சிந்தனைகள் பறந்தாலும்,அவள் போனை வைக்கும் முன்னே,அவளது காலை ட்ரேஸ் செய்ய உத்தரவிட்டிருந்தான்.
ஆனால் அவர்களால் எங்கே இருந்து போன் வந்தது என்று கண்டறிய முடியவில்லை.
ஒருவேளை ட்ரேஸ் செய்ய முடிந்திருந்தால்,தான் நினைத்த அளவுக்கு இல்லை என்று நினைத்து,கேசை விரைவில் முடித்திருப்பான்.
இப்போது இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை எனும்போது,அவனது சந்தேகம் வலுப்பெற தொடங்கியது.
“பேசிட்டேன் மாஸ்டர்”என்று அவந்திகா போனை கொடுக்கவும்,
“உனக்கு தயிர் சாதம் எடுத்துட்டு வர்றேன்”என்றவன் கிச்சனுக்குள் சென்று,அவளுக்கு பிடித்த பழவகைகளை,அவளுக்கு பிடித்தவாறு தயிர் சாதத்தில் கலந்து கொண்டு வந்து கொடுத்தான்.
“சூப்பர் மாஸ்டர்”என்றவள்,அதை விரும்பி உண்ணத்துவங்க,
அவளையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவலை அடக்கியவனாய்,அறையை விட்டு வெளியேறி,ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டான்.
‘ஒரு முறை கூட ஏன் கடத்தினாய் என்று கேட்க தோன்றவில்லையா..என் மேல் அவ்வளவு நம்பிக்கையா’
‘இந்த அளவுக்கு ஏன் நம்பிக்கை வைக்கிறாய் பெண்ணே,என்னை விட்டு விலகி செல்வதற்கா..’என்று நினைத்தவனின் கண்ணில் நீர் வழிந்தது.
துடைக்க மனமின்றி,தனது கண்ணீரை அவளுக்கு காட்ட மனமின்றி அமர்ந்திருந்தான்.
ஒருவேளை அவனது கண்ணீரை அவளுக்கு காட்டியிருந்தால்,அவள் மனம் அவனுக்காக மாறியிருக்கக் கூடும்.
அவளைக் காயப்படுத்தக் கூடாது என்று எண்ணி,தன்னையே காயப்படுத்திக்கொண்டான்.
இப்போதும் வலுக்கட்டாயமாய் தங்களது கடைசி சந்திப்பை நினைவு கூர்ந்தான்.
“அவங்க சொல்றத நம்பரையா அவந்தி”உருக்கமாக கேட்டவனிடம்,
“அப்படி இல்ல மாஸ்டர்.நான் உங்கள முழுசா நம்பறேன்.அதனால தான் நமக்குள்ள இந்த காதல் உறவு எல்லாம் வேண்டாம்னு சொல்றேன்”என்றவுடன்,
வேதனையுடன்,”இதுக்கு நீ என்னை நம்பலைன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்”என்றான்.
“நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்கேன் மாஸ்டர்,எந்த அளவுக்குன்னா,நீங்க உண்மையிலையே தப்பு பண்ணியிருந்தாலும்,என்கிட்டே பொய்யா,நான் அப்படி ஒரு தப்பு செய்யவே இல்லைன்னு சொன்னா,உடனே நம்பற அளவுக்கு குருட்டுத்தனமா உங்க மேல நம்பிக்கை வைச்சிருக்கேன்.அதனால தான் நமக்குள்ள உறவுமுறை எல்லாம் வேண்டாம்னு சொல்றேன் மாஸ்டர்”,
“என்னோட வாழ்க்கையில,எந்த முடிவா இருந்தாலும் நான் தான் எடுப்பேன் மாஸ்டர்.யார் தலையிடறதையும் நான் விரும்ப மாட்டேன்.எனக்கு வரப் போற கணவன்,என்னோட முடிவுகளுக்கு துணையா இருக்கணும்.என்னோட முடிவுகளை என்னோட கணவனே எடுக்கற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாறதை என்னால ஜீரனிச்சுக்கவே முடியாது”என்றாள்.