25. புத்தம் புது காலை - மீரா ராம்
“ஜானு… உன் போன் ரொம்ப நேரமா ரிங்க் ஆகிட்டிருக்குடி… எடுத்து பேசு….”
ஜானுவின் பேக்கை சுட்டிக்காட்டியபடி கூறினாள் ஜனனி…
“எடுத்து பேசவேண்டியது தானடி….” என ஜனனியைத் திட்டியபடி வந்து தனது ஹேண்ட்பேக்கினை திறந்து அதில் இருந்த தனது அலைபேசியை அவள் எடுத்துப்பார்க்க, அதில் அவளது உள்ளங்கவர்ந்தவனின் பெயர் மின்னியது…
பார்த்த மாத்திரத்திலேயே புன்னகை முகத்தில் உதிக்க, சட்டென்று அதை எடுத்து காதுக்கு கொடுத்தாள் அவள்…
“கார்த்தி…. சொல்லுங்க கார்த்தி….”
“வேலையா இருக்கியா?...”
“இல்ல அதெல்லாம் இல்ல… ஒரு சைன் வாங்க போயிருந்தேன்… நான் வந்ததும் ஜனனி சொன்னா…” சொல்லிமுடித்துவிட்டு சற்று நேரம் மௌனம் காத்தவள்,
“சாரி… நான் பார்க்கலை… ரொம்ப நேரமா போன் அடிச்சிட்டிருக்குன்னு சொன்னா…. சொல்லுங்க கார்த்தி… அக்கா எப்படி இருக்காங்க?... அக்கா எதுவும் சொன்னாங்களா?...”
“ஹ்ம்ம்… ஆமா…” என்றவன் சரயூ, ஜானவியிடத்தில் தெரிவிக்க சொன்னதை கூற, அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது…
“என்ன அமைதியா ஆகிட்ட?....”
“இல்ல கார்த்தி எதுவுமில்லை…”
“ஹ்ம்ம்… நீ சொன்ன மாதிரி அவர் தன்னோட தவறை உணர்ந்துக்க ஆரம்பிச்சிட்டார் போல… வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டார் எல்லார்கிட்டயும்…”
“தனிமை ஒரு மனுஷனுக்கு நிஜமாவே நிறைய பாடங்கள் சொல்லி கொடுக்கும்… அத தான் நானும் சொன்னேன் உங்ககிட்ட… மத்தபடி இல்லாத எதையும் நான் சொல்லலையே….”
“ஹ்ம்ம்… உண்மைதான்… இனியாவது அவர் நல்லபடியா நடந்துகிட்டா சந்தோஷம்…”
“நடந்துப்பார்ன்னு நம்புவோம் கார்த்தி….”
“ஹ்ம்ம்… தேங்க்ஸ்...”
“எதுக்கு நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லுறீங்க?...”
“இல்ல சொல்லணும்னு தோணுச்சு… அதான்….”
“லூசு…..” என அவனை செல்லமாக அவள் திட்ட, அவன் சிரித்தான்…
அவனின் சிரிப்பொலி அவள் செவிகளை தீண்ட, அவள் தன்னை மறந்தாள்…
பின்னே எத்தனை நாட்களாயிற்று… இந்த சிரிப்பை தன்னவனிடமிருந்து கேட்டு…. எனில் உள்ளம் பூரிக்கத்தானே செய்யும்….
“டைம் ஆச்சே… வீட்டுக்கு கிளம்பணும்ல….”
“ஹ்ம்ம்… கார்த்தி… கிளம்பணும்…”
“சரி பார்த்து வா… சரியா?...”
“சரி கார்த்தி… அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…”
“என்ன?... சொல்லு….”
“இல்ல வந்து…..”
“எதுன்னாலும் இழுக்காம சொல்லு….”
அவன் வார்த்தை சற்றே தைரியத்தை கொடுக்க,
“சிவில் டிபார்ட்மெண்ட்ல வேலை போட்டிருக்காங்க… எழுதுறீங்களா எக்ஸாம்?...”
தயங்கி தயங்கி அவள் கேட்க,
“வேண்டாம்…..” என்றான் அவன்…
“ஏன்?... கார்த்தி?...”
“இஷ்டம் இல்ல… ப்ளீஸ்டா… கம்பெல் பண்ணாத….”
அவனிடம் வாதிட போனவள், அவனின் “டா….” என்ற அழைப்பில் ஊமையாகி போனாள்…
அவனின் அழைப்பு அவளை சந்தோஷப்பட வைத்தது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அவனின் மறுப்பு அவளை கவலைப்படவும் வைத்தது…
அவளிடம் இருந்து எந்த பதிலும் வராது போக,
“சரி… நீ பார்த்து வீட்டுக்கு வா… நான் அப்புறம் பேசுறேன்….”
அவளின் நிலையை அவன் உணர்ந்தது போல் அவன் கூற, அவளும் சரி என்றபடி போனை வைத்துவிட்டு நிமிர, அங்கே அவளையே பார்த்தபடி நின்றாள் ஜனனி…