அடுத்து ருயம்மா எதுவும் நினையும் முன்னும், அவன் எதுவும் பகரும் முன்னும் சற்றாய் அமர்ந்த காற்றின் மௌனத்தில் செவியில் விழுகிறது அச் சிறுகுரல்…. ஒரு இளம் பெண்ணின் விசும்பலும் அழுகையுமாய் அது…
“நாளை மறுதினம் எனக்கு வில்லு மாமனுடன் பரிசம் மட்டும் நடக்கட்டும் அன்று இரவே என் பிணம் இந்த வாய்காலில் மிதக்கும்….”
சப்தம் காதில் விழவும் எழுந்து கொண்டாள் காகதீய இளவரசி….. மானகவசனும் அவளும் குரல் வந்த திக்கை நோக்கிப் பார்த்தனர்….
“ஏய் சின்னவளே அப்படியெல்லாம் உன்னை விடுவேனா நான்….? அதோடு வில்லவனுக்கு என் மீதுதானே சினம்…. உன் மீது பாசம்தானே…… அப்படியிருக்க உன்னை ஏன் வதைக்க போகிறானாம்…? நீ என்னை விரும்பும் விஷயம் அவனுக்கும் தெரியுமே…. ” என இப்போது ஆறுதல் படுத்த முயன்றது ஒரு ஆண் குரல்…
குரல் வரும் திசையை நோக்கி ருயம்மாவும் பராக்கிரமனும் நடக்க துவங்கினர்….
“ புரியாமல் பேசாதீர்கள் மாமா…. உங்களைப் பழிவாங்கத்தான் வில்லு மாமன் என்னை மணக்க நினைப்பதே……அவன் அனுபவித்த வலி அவமானத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டுமாம்….. எல்லாம் அந்த அருளையால் வந்த வினை….. அவளுக்கு இந்த வில்லு மாமன் பரிசம் போட முறை இருக்க….அவள் இப்படி அடுத்த ஜாதி சுந்தரனுடன் கரிவலம் சென்றுவிட்டால் வில்லு மாமன்…..”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
அந்த அழுத பெண்குரலில் சினமும் சேர்ந்தே இலங்க அவள் இன்னும் என்ன சொல்ல நினைந்தாளோ…. ஆனால் மேற்கொண்டு பேசவிடாமல் அவசரகதியில் இடையிட்டது அந்த ஆண் குரல்…
“ஐயோ அவள் சென்ற ஊர் பெயரையெல்லாம் சொல்லாதே கனி.….யார் செவியிலாவது விழுந்து வைக்கப் போகிறது….“
இப்பொழுது அந்த பெண்குரல் இன்னுமே இறங்கிவிட்டது….
“அதெல்லாம் சரி மாமா….நம்மைப் போலத்தான் அவளும்…..காதலிக்கும் நமக்கே அவள் காதல் புரியவில்லை என்றால் எப்படி? நம்மோடு வளர்ந்தவள்தானே அவளும்…. ரத்த பாசம்….என என்னவெல்லாமோ சொல்லி அவள் காதலுக்கு உதவினீர்களே……இப்போது அது உங்களுக்கும் எனக்குமே வினையை கொண்டு வந்துவிட்டதே…” புலம்பினாள் அவள்…
“இப்போது அதைகுறித்தெல்லாம் எண்ணாதே கனி……இனி அடுத்து என்ன செய்யலாம் என்பதை மட்டும் பார்ப்போம்….” இது அந்த ஆண்…
“என்ன செய்யலாமா?.....நாளை விடியலில் என் வீட்டிற்கு வந்து பரிசம் போடுகிறீர்கள்….. அல்லது நாளை இரவு என்னை கயத்தாறோ இல்லை விருதையோ அழைத்துப் போய்விடுங்கள்…. அதுவும் இல்லை என்றால் நாளை மறுதினம் இரவு இங்கு மிதக்கும் என் பிண….” அப்பெண்ணை தொடர்ந்து பேச விடாமல் அவள் வாயை அந்த ஆண் மூடி இருக்க வேண்டுமாயிருக்கும்….
வெறும் விம்மல்களே ருயம்மாவின் காதில் விழுகிறது…… சற்று நேரம் என்ன நடக்கிறது எனவே புரியவில்லை….. வீசும் காற்றின் ஒலியை தவிர வேறேதும் சப்தமில்லை….. இன்னுமாய் பராக்கிரமனும் ருயம்மாதேவியும் அக் காதலர்களிருப்பதாய் தோன்றிய திசை நோக்கி செல்ல…
மீண்டுமாய் அந்த ஆண் குரல்…..
“உன் வீட்டிற்கு பெண் கேட்டு இப்போது கூட வந்துவிடுவேன் கனி….எனக்கு முறையில்லையா இல்லை காதலில்லையா..….ஆனால் பார்! உன் ஐயன் இதற்கு சம்மதிப்பாரா…..? என் ஐயன் நிலத்தை நம்பி இருந்தேன்…. நிலமுடையவனாய் வந்து பெண் கேட்டால் உன் ஐயன் அனேக மகிழ்சியோடே மணம் முடித்து கொடுத்திருப்பார் நமக்கு…… இப்படி எனக்கே தெரியாமல் என் ஐயன் அந்த செங்கையனுக்கு விளை நிலத்தை விற்றிருப்பார் என எதிர்பார்க்கவில்லை நான்….”
என்ன செய்யலாம் எவ்வாறு சமாளிக்கலாம் என பலவாறு சிந்தனையும் தவிப்பும் அவனுக்குள் ஓடுவது அந்த அலைப்புற்ற ஆண் குரலில் தெரிகின்றது…
“இப்போது என்னதான் செய்யப் போகிறீர்கள் மாமா…?” இது அவன் காதலியின் அடுத்த கேள்வி…
“ இன்னும் ஓரிரு திங்கள் அவகாசம் கிடைத்தால் இப்போது நான் துவங்கி இருக்கும் சாத்து வணிகத்தில் ஓரளவு கையில் பணப்புழக்கம் உண்டாகிவிடும்…. அடுத்து பரிசம் போட எண்ணி இருந்தேன்….இப்படி நாளையே என்றால்…… சரி உன் ஐயனிடம் வந்து பேசிப் பார்க்கிறேன்…” இது சரிவராது என்ற நம்பிக்கையின்மை அவன் குரலில் அப்பட்டமாய் தெரிய….
அப் பெண் இப்போது மீண்டுமாய் விம்மினாள்…
“அழாதே சின்னவளே….இது சரி வரவில்லை எனில் நீ சொன்னபடி விருதை கிளம்ப வேண்டியதுதான்…. ஆனால் உன்னை வில்லவனுக்கு மட்டுமல்ல யாருக்கேனும் விட்டுவிடுவேன் என மட்டும் நினையாதே…. எப்படியெல்லாமோ நடக்க வேண்டும் நம் திருமணம் என எண்ணி இருந்தேன்…. இப்படித்தான் நடக்க வேண்டும் என இருந்தால் இப்படியே நடக்கட்டும்…….” என இப்போது இறுதி முடிவை அறிவித்த அந்த ஆண் குரல்…
“ சரி காலமாகிறது…..நீ வீட்டிற்குப் போ…. உன் ஐயன் என் பரிசத்தை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் நளையும் இந் நேரம் வந்துவிடு…..” என தன் காதலியை வழி அனுப்பவும் செய்தது..
“ செல்லக்கிளியுடன்தானே வந்தாய்…...” அவன் மீண்டுமாய் கேட்டுக் கொள்ள…
“ஆமாம்…அவளும் காத்துக் கொண்டிருப்பாள்….. நாளை பரிச தட்டோடு உன் மாமனை பார்க்க வந்துவிடு மாமா….ஆவியை கண்களில் வைத்து காத்திருப்பேன்…. ” பெண்ணும் விடை பெறுகிறாள் போலும்….
இந்நேரம் ருயம்மாவும் பராக்கிரமனும் நின்றிருந்த ஸ்தலத்திற்கு நேர் எதிரிலிருந்த அகன்ற மரத்தின் பின்னிருந்து வெளிப்படுகிறது ஒரு குட்டை உருவம்….. நிலவொளியில் அது ஒரு பெண் என புரியுமளவு இருக்கிறது…. அந்த காதலி போலும்…
எதிரில் நின்றிருந்த பராக்கிரமரையும் ஆண்வேடத்திலிருந்த ருயமாவையும் கண்டவுடன் பலமாய் திடுக்கிட்ட அந்த பெண்…. அவசரமாய் “மாமா” என்றபடி மீண்டுமாய் அம் மரத்தின் பின் புறம் நோக்கி ஓடினாள்….
அதே நேரம் அம் மர மறைவிலிருந்து வெளி வந்திருந்த அந்த ஆடவனும் தன்னவளை ஒரு கையால் பற்றி தனக்கு பின்பாக நிறுத்திக் கொண்டவன்…
“யார் நீங்கள் ?” என்றான் கன கம்பீரமாகவே…..
தவறு செய்து பிடிபட்டுக்கொள்ளும் குற்ற உணர்வு கிஞ்சித்தும் அவனிடம் இல்லை என்பது ருயம்மாவின் கருத்தில்பட்டது….