42. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்
அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவனுக்கு, முதன் முதலில் அவளைப் பார்த்த நினைவும், அதைத் தொடர்ந்த சில நினைவுகளும் உண்டாக அவன் அதை நினைவு கூர்ந்தான்…
அன்று…
சதிக்கு தண்டனை கொடுத்த இரண்டு மூன்று தினங்களில் ஒரு நாள், தான் இயற்றிய தட்ச சுயசரிதத்தை அவையோர் முன்னிலையில் தெரியப்படுத்தினார் தட்சப் பிரஜாபதி…
“எனது இந்த சரிதத்தில், பிரம்ம குமாரனாகிய நான், முக்கியமானவற்றை எடுத்து உரைத்துள்ளேன்… அதில் ஒன்று… இந்த பிரம்மாபுரம்… இன்னொன்று… இந்த சிருஷ்டியில் வணங்கக்கூடிய தெய்வங்கள் இருவர் மட்டுமே… ஒருவர் இந்த சிருஷ்டியையே படைத்திட்ட எம் தந்தை பிரம்மா… மற்றொருவர் அனைவரையும் காத்தருளும் என் பரந்தாமன்…”
என கூற அவையோர் அனைவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர்…
“இந்த சரிதம் மூலம் தெரிந்து கொள்வார்கள் அனைவரும், மகாதேவன் என்பவன் பூஜைக்குரியவோ, ஆராதைக்குரியவனோ அன்று என்று….”
மகரிஷி பிருகுவிற்கோ தட்சனின் வார்த்தைகள் உவகையாக இருக்கவில்லை….
அந்நேரம், பணியாள் வந்து “நாரத மகரிஷி அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார் தட்ச மகாராஜா….” எனக்கூற,
“எனக்கு அறிமுகமும், வரவேற்பும் தேவையில்லை….” என்றபடி அவனுக்கு பின் நின்று கொண்டிருந்தார் நாரத மகரிஷி…
தலையில் குடுமியிட்டு அதை சுற்றி பூவும் வைத்து, காவி உடை அணிந்து, கைகளில் வாத்தியத்துடனும்,
நாவில், “நாராயணா…. நாராயணா…..” என்றார் அவர்….
“வணக்கம் நாரத மகரிஷி… தாங்கள் இங்கு வந்திருப்பது நிச்சயம் கலகத்திற்கு தானே….”
பிரஜாபதி வணக்கத்துடன் கூற,
நாரத மகரிஷியோ சிரித்தார்….
“வணங்குகிறேன் பிரஜாபதி தட்சரே…. நாரதனின் கலகம் என்றும் நன்மையில் தானே முடியும்… அது தங்களுக்கு தெரிந்திடாதா என்ன?...”
“வந்த நோக்கத்தை கூறும்…”
“அது சரி… ஆயிரம் இருந்தாலும், தாம் என் சகோதரன்… ஏனெனில் நம் தந்தை ஒருவர் தானே… ஆம்… அந்த பிரம்மதேவன் தானே நம் தந்தையும்….”
“அந்த ஒரு காரணத்தினால் தான் தாம் நின்று என் முன் பேசிக்கொண்டிருக்கிறீர்…”
“பிரஜாபதி…. நான் கேள்வியுற்றது அனைத்தும் உண்மைதானா?...”
“நீர் வந்திருப்பதே கலகத்திற்கான காரணத்தை தேடித்தானே… அதை நான் அறிவேன்…”
“இங்கே என்ன கலகத்திற்காக நான் வரப்போகிறேன்… கூறுங்கள்…”
“அனைத்தும் நான் அறிவேன்… தாம் இப்போது இங்கிருந்து நேரே அந்த மகாதேவனைத் தானே சந்திக்க செல்வீர்கள்… போய் கூறுங்கள் அவனிடம்… ஏதேதோ சூழ்ச்சி செய்து என்னை வீழ்த்திட எண்ணம் கொண்டிருந்தான் எனில், அவன் என்னிடம் தோல்வி பெறுவது உறுதி… அவன் இனி ஒருநாளும் கடவுளாக போற்றப்பட மாட்டான் என்றும் போய் தெரிவியுங்கள்… அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூடிய சீக்கிரம் நிகழவிருக்கிறது என்பதனையும் மறக்காமல் தெரிவித்துவிடுங்கள்…”
அவர் கோபத்துடன் சொல்லிவிட்டு, நாரதரைப் பார்க்க,
“இதற்கும் மேல் இங்கிருந்தால், நிச்சயம் நமக்கு ஆபத்து தான்…” என்றெண்ணியவர், விரைந்து அங்கிருந்து வெளியேறி வர, அங்கே சதி வந்து கொண்டிருந்தாள்…
அவளைப் பார்த்தவர்,
“மகாராணியாக வாழ்ந்தவருக்கு, இன்று இந்த நிலை அளித்துவிட்டீர்களே மகாதேவா… வெறும் காலோடு இப்படி முகம் வாட வருகிறாரே சதி தேவி… தாம் நினைத்தால் இதனை ஒருநொடியில் மாற்றி விடலாமே…” என்றெண்ணிக்கொண்டிருந்தவரை, சதியின் வணக்கம் நனவுலகுக்கு இழுத்து வந்தது…
“தாங்கள் எங்கு சென்று வருகிறீர்கள் தேவி?..”
“பிராயசித்தத்தை நிறைவேற்றுவதற்காக…”
“என்ன கூறுகிறீர்கள் தேவி?..”
“பெரும் அனர்த்தம் நிகழ்த்திவிட்டேன்… அதற்கான பிராயசித்தத்தை இப்போழுது நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் நாரத மகரிஷி…”
“என்னமோ எனக்கொன்றும் புரியவில்லை போங்கள்… அது போகட்டும்… தாங்கள் பெரும் அற்புதம் நிகழ்த்தினீர்களாமே…. தமது தந்தை ஸ்தாபித்த விஷ்ணு சிலையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அரும்பெரும் காரியத்தை நிகழ்த்திவிட்டீர்களாமே…”
“அது பெரும் அனர்த்தம் ஆகும் நாரத மகரிஷி… அதற்கான பிராயசித்தத்தினையே யாம் தற்போது ஏற்றுக்கொண்டிருக்கிறோம்… எம் தந்தைக்கு வாக்கும் அளித்திருக்கிறோம்… மகாதேவனையோ, அந்த நாளையோ நான் நினைவு கூற மாட்டேன் என…”
“ஏன் தேவி?... அவரை தங்களுக்குப் பிடிக்கவில்லையோ?... அவர் வெளிப்புற தோற்றத்தில் சற்றே கரடு முரடாக தெரிந்தாலும், அவரின் அழகு வர்ணித்திட முடியாதது… அவரை சந்தித்த எவருமே அவரால் ஆகர்ஷிக்கப்படுவது உறுதி… தேவியும் அப்படித்தானே?...”
நாரதர் அவளது முகத்தினை உன்னிப்பாக கவனித்து கேட்டிட,
“எனக்கு நேரம் குறைவாக உள்ளது மகரிஷி அவர்களே… நான் உள்ளே சென்று என் பணிகளை துவங்க வேண்டும்…”
என அவள் தன் வணகத்தினை தெரிவித்துவிட்டு உள்ளே செல்ல, நாரதரோ ஒரு புன்சிரிப்புடன் மகாதேவரை தேடிச் சென்றார்…
தொடரும்...!
{kunena_discuss:1001}