அன்று இரவு 'எனக்கு அருணை பார்க்கணும்!!! மனதில் வந்ததை பட்டென கேட்டே விட்டாள். அபர்ணா. பரத்தின் சலனமே இல்லாத இமைக்காத பார்வை அவளிடமே இருந்தது சில நொடிகள்.
கேட்டிருக்க கூடாதோ??? அதுவும் இந்த நேரத்தில்??? கேட்ட பிறகுதான் சுருக்கென்றது அவளுக்கு. அடுத்து என்ன பேசுவது என்ன புரியாமல் அவள் அவனையே பார்த்தபடி அவள் நிற்க
'சரி போயிட்டு வா கண்ணம்மா' சொல்லியே விட்டான் அவன்.
சற்று முன் அவன் பேசிய தொனிக்கும் இப்போது பேசும் தொனிக்கும் துளியிலும் துளி கூட மாற்றமே தென்படவில்லை.
'இப்போதும் கண்ணம்மாதானா???' வியப்பின் எல்லையை தொட்டு மீண்டாள் அவள். 'கொஞ்சம் கூட எரிச்சல் வரவில்லையா என் மீது???
அவன் தாலி கட்டும் போது அவள் இதழ்களில் ஓடிய புன்னகை மட்டுமே இப்போது அவன் நினைவில். 'அவள் என் கண்ணம்மா!!! அதில் எந்த மாற்றமும் இல்லை. போய்விட்டுத்தான் வரட்டுமே!!!'
'என்ன கண்ணம்மா அப்படி பார்க்கிறே??? அவள் மனம் படித்தபடியே அவன் கேட்க
'இல்ல மனசு ரொம்ப அழுத்தமா இருக்கு. ஒரு தடவை அருணை பார்க்கணும்'. சின்ன படபடப்புடன் சொன்னபடி அவன் அருகில் வந்து அமர்ந்தாள் அபர்ணா.
'இப்போது பேசும் போது என்னதான் சொன்னான் அவன்??? அப்படி என்ன பேசப்போகிறாய் அவனிடத்தில் ??? அது எப்படி அவனிடம் பேசிவிட்டால் அழுத்தம் எல்லாம் கரைந்து போகுமா என்ன??? இப்படி ஏதாவது ஒரு கேள்வி வருமென அவள் எதிர்ப்பார்த்திருக்க....
எதுவுமே வரவில்லை அங்கே!!!! அவன் இதழ்களில் சின்ன புன்னகை மட்டுமே.
'சரி. ஒண்ணும் பிரச்சனை இல்லடா. போயிட்டு வா...' மறுபடியும் சொன்னான் அவன்.
'அதென்ன போயிட்டு வா??? நீங்களும் வரணும்..' தாங்கிக்கொள்ளவே முடியாதது போல் அவள் பட்டென சொல்லிவிட இப்போது சின்னதாய் மாற்றம் அவன் முகத்தில்.
'கண்ணம்மா.... அவனை பார்த்தாலே எனக்கு கோபம் வரும் .தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். நான் வந்துதான் ஆகணுமா. நீ போயிட்டு வாயேன்..' மிக நிதானமாக சொன்னான் பரத்.
'எனக்காக வரமாட்டீங்களா ப்ளீஸ்..'. கெஞ்சலாய் வந்தன வார்த்தைகள்.
அவளுடைய 'ப்ளீஸ்' அவனை வீழ்த்திப்போடும் பிரம்மாஸ்திரம் ஆயிற்றே!!! என்ன செய்வதாம்??? அவன் கண்கள் அவள் விழிகளை ஊடுருவ ஒரு ஆழமான சுவாசம் அவனிடத்தில் 'சரி வரேன்..'
'வீட்டுக்கெல்லாம் போக வேண்டாம். ஹாஸ்பிடல்லேதான் இருக்கார். அங்கேயே பார்த்திடலாம்..'
'சரி..' என்றான் அவன்.
அருண் தற்போது இருக்கும் மனநிலையும் ஓரளவுக்கு புரியத்தான் செய்தது பரத்துக்கு. இப்போது அவளை தனியே அங்கே அனுப்பினால் மறுபடியும் தனது முரட்டுத்தனத்தை அவன் காட்டக்கூடும் என்றும் தோன்றியது அவனுக்கு.
'தேங்க்ஸ்..' சொல்லிவிட்டு சட்டென அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள் அபர்ணா.
அவனிடம் அதற்கு மேல் எதுவும் பேசத்தோன்றவில்லை அவளுக்கு. விளக்கை அணைத்து விட்டு அவனும் படுத்துவிட இரவு விளக்கின் ஒளி மட்டும் அறை முழுவதும் பரவிக்கிடக்க அலைமோதிக்கிடந்தது அவள் உள்ளம். சற்று முன் அருண் பேசிய வார்த்தைகளின் எதிரொலி அவளுக்குள்ளே.
ஆத்திரம் அருணுக்கு.. அது எப்படி அபர்ணா தன்னை தூக்கி எரிந்து விட்டு அவனை திருமணம் செய்யலாம் என்ற ஆத்திரம்.
'மங்கையர் குல திலகமே!!! நேத்திக்கு நான் இன்னைக்கு பரத்தா??? ரொம்ப நல்லா இருக்கு. நான் இங்கே ஆக்சிடென்ட் ஆகி கிடக்குறேன். தெரியுமா உனக்கு..'' அவன் குரலில் தேங்கிக்கிடந்த காரம் கொஞ்ச நஞ்சமில்லை.
'ஆக்சிடென்டா...'
'ஆமாம். உன்னை பார்க்கத்தான் ஓடி வந்தேன். உனக்கும் அந்த பரத்துக்கும் கல்யாணம்ன்னு கேட்டதும் துடிச்சு போய் ஓடி வந்தேன். அவன் நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திட்டான் தெரியுமா??? உனக்கு குழந்தையே பிறக்காதுன்னு அஸ்வினியை விட்டு பொய் சொல்ல வெச்சு என்னை நல்லா ஏமாத்திட்டான். உன்கிட்டே எல்லா உண்மையும் சொல்லி உன்னை கூட்டிட்டு போயிடணும்னு ஓடி வந்தேன். அதுக்குள்ளே கீழே விழுந்து தலையிலேயும் காலிலேயும் நல்ல அடி. ஹாஸ்பிடல்லே கிடக்குறேன்..'
...........................................................
'அது எப்படிடி என்னை ஒரே நாளிலே தூக்கி போட்டுட்டு அவனை கல்யாணம் பண்ணிகிட்டே??? துரோகி!!! என்னை மறந்திட்டு உன்னாலே அவன் கூட வாழ்ந்திட முடியுமா??? நீ எப்படியோ தெரியாது நான் உன்னை நிஜமா லவ் பண்ணேன்டி. எப்படி இருந்தாலும் நான்தான் உன்னுடைய ஃபர்ஸ்ட் லவ். நீ என்னை எவ்வளவு மறக்க முயற்சி பண்ணாலும் தினமும், என் ஞாபகம் உனக்கு வந்திட்டேதான் இருக்கும். '
பதில் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.