(Reading time: 12 - 23 minutes)

31. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

ரூபன் கொஞ்சம் கொஞ்சமாய் சிடுசிடுப்பிற்க்கு மாறிக் கொண்டிருந்தான். எவ்வளவோ திட்டங்களோடு தன்னுடைய திருமண நிகழ்வுகளை அமைக்க எண்ணியிருக்க, தற்போது எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளால் அவசர அவசரமாக தன் நிச்சயதார்த்த விழாவை நடத்த வேண்டியிருக்கின்றது. ஆளாளுக்கு அவனை அட்வைஸ் செய்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தார்கள் என்றால் அன்று காலைதான் அப்பாவும் போன் செய்து அன்பாகத்தான் என்றாலும் அறிவுரை மழையை பொழிவித்து இருந்தார். எல்லா திருமணங்களிலும் மாப்பிள்ளை வீட்டார்தான் கெத்து காட்டுவார்கள் இவனோ தன் திருமண பேச்சிற்காக அடிக்கடி மாமனார், மற்றும், கிறிஸ்ஸையும் பார்க்கப் போக , அவர்கள் காட்டும் வேண்டாவெறுப்பான வித விதமான பாவனையில் நொந்து நூலாகி இருந்தான்.

வீட்டிற்கு நிச்சயத்தின் இரண்டொரு நாட்கள் முன்பே வந்திருந்த ஒரு சில பெரிசுகள் எதற்கு பெண்ணை இங்கே வைத்திருக்கிறீர்கள் என்று வேறு குடைந்தெடுத்து விட்டனர். வீட்டில் இது போன்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்க அதற்கு இணையாக எக்ஸ்போர்ட் செய்ய வேண்டிய பல ஆர்டர்களும் அதே வாரத்தில் இருந்தன. கடந்த நாட்களில் அனிக்கா அவனைத் தேடி வருவதற்கு முன்பாக அவளைக் குறித்து எழுந்த கவலைகள், தனக்கு பெண் தர மாட்டேனென்றுச் சொல்லி அவனைச் சோர்வுக்குள்ளாக்கியிருந்த போது கவனம் செலுத்தாமல் இருந்த பலவேலைகள் இப்போது அவனிடம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது என்று டிமாண்ட் செய்துக் கொண்டிருந்தன.

அத்தனை குழப்படியிலும் தான் அணிவித்த தாலிச் செயினால் இன்னுமொரு குழப்பம் வேண்டாமே என்று வந்து அவனுடைய அழகான ராட்சசியிடம் வந்துப் பேசினால், அந்த வாயாடி வழக்கத்திற்கு மாறாக பேச்சுக்கு பேச்சு மடக்கி பேசினாலென்றாலும் அவள் பேசிய பேச்சில் அவனது உள்ளம் குளிர்ந்தே போனது. நான் கட்டியது என்பதால் அவளுடைய நியாய தர்மங்களுக்கு புறம்பானதாக இருந்தாலும் தன் கழுத்திலிருந்த தாலியை கழட்ட விரும்பவில்லையே? அதுவும் எனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவாம்.

தன் உயிரையே அவனுக்காக பொருட்படுத்தாதவள் தான். அவளது அந்த அவசர தற்கொலை முடிவினால் அவள் வீட்டினர் மட்டுமல்லாது அவனும் பெருமளவு பாதிக்கப் பட்டு இருந்தான். எங்களிடம் மனம் திறந்து பேசியிருக்க கூடாதா? அவளுடைய உயிரை விடவா எங்களது பிடிவாதம் பெரியது என்கிற பொருமல் அவளது வீட்டினருக்கு என்றால், என்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா என்றுக் கேட்டேனே? என்னை திருமணம் செய்வதை விட அவளுக்கு தன் உயிரை மாய்த்துக் கொள்வது தானே பிடித்திருந்தது என்கிற பொருமல் ரூபனுடையது. ஹாஸ்பிடலில் காவலர் முன்பாக தன்னைக் காப்பாற்றவே தங்களிருவருக்கும் திருமணம் ஆனதாக அனிக்கா சொன்னாள் என்பது அவனுக்கு மட்டுமல்ல அவளுடைய குடும்பத்தினருக்கும் மிக தெளிவாக தெரிந்த ஒன்று. இத்தனை இருந்தும் தான் அணிவித்ததற்காக அவள் அந்த தாலிச் செயினுக்கு கொடுத்த முக்கியத்துவம் அறிந்த பின்னர் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.யாருக்குத்தான் தன் காதலி தன்னை அதிகம் நேசிப்பது, தனக்கு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்காது போகும்?

சரி தாலியை கழட்ட வேண்டாம், அவனிடம் இருந்த சற்றே அகலமான அந்த தாலியின் நீளத்தில் அமைந்திருந்த செயினைக் கொண்டு மறைக்கலாம் என்கின்ற யோசனை சட்டென்றுத் தோன்ற அந்த செயினை தன் கப்போர்டிலிருந்து எடுக்கச் சென்றால் அவனை நெருங்கி வந்து, ஏறத்தாழ கிட்டே வந்து உரசிக் கொண்டு அவனை அவன் பொறுமையை சோதிக்கின்றவளை என்னச் சொல்வது? தற்போது அவள் அவன் அறையில் தங்க ஆரம்பித்ததிலிருந்தே அவன் தன்னுடைய அறைக்குள் வரும் போதெல்லாம் அவளுடைய வாசனை உணர்ந்து அவஸ்தைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தான், அப்படியிருக்க நெருங்கி நின்று நெருக்கடி கொடுத்தால்?....... வேறு வழியில்லாமல் தான் அவளை திட்டி நகர்ந்து நிற்கச் செய்தான். அதன் பின்னர் அவள் செயினை அணிந்து அளவைச் சரிப் பார்த்தவுடன் நாளைக்கு இந்நேரம் தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுவாள்.... அவள் தன்னுடைய அறையில் இருக்க மாட்டாள் என்றேண்ணியவாறு ஏக்கத்துடன் சற்று நேரம் அவளறியாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கிருந்து பிரயத்தனப்பட்டு நகரும் போது வம்படியாய் முத்தம் கேட்பவளை என்னவென்றுச் சொல்வது?.

"ஒரே ஒரு கிஸ் தான் அத்தான்", என்று தள்ளுபடி விலையில் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளுகிற பாவனையில் நின்றவளை முறைத்தான். 

இவளை முத்தம் கொடுத்து கொஞ்சுகின்ற நிலையில் தானே இருக்கிறேன் என்றெண்ணியவனாக தன் பற்களைக் கடித்தான். அமுல் பேபி பாவனையில் கன்னத்தில் கை வைத்து நின்றவளைப் பார்த்தவனுக்கு இரண்டு மூணு வயசு வாண்டுகளோடு விளையாடுபவள் இப்படி கேட்காவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும் என்று தோன்றவே அவளுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அனிக்காவிற்கோ இவ்வளவு நாளாக தன்னிடம் சரியாக பேசாத ரூபன் இன்று வலிய வந்து பேசவும் தலை கால் புரியவில்லை. அதனால் தான் தன்னுடைய வழக்கமான இயலபு மறந்து, அவனை வம்பிழுக்கும் நோக்கத்தோடு எல்லாவற்றிற்கும் எடக்கு மடக்காக பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் முத்தம் கேட்டதுவும் கூட அவளறியாமல் வெளிப்பட்ட குறும்பின் வெளிப்பாடுதான். இப்போது ரூபன் தான் கேட்டதற்கு பதில் பேசாமல் திரும்பச் செல்லவும் தன்னுடைய திட்டம் நிறைவேறாத கடுப்பில் அவனை மறித்தவாறு எதிரில் வந்து நின்றவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.