11. தவமின்றி கிடைத்த வரமே - லேகா
“Can you all just give me a break for sometime?” எனக் கேட்க நினைத்து திரும்பிய ப்ரனிஷ், அங்கே நின்றிருந்தவரைப் பார்த்து அவ்வாறு சொல்ல முடியாமல் இருந்தான் “திரு. பார்த்தவியிடம் அனைத்தையும் சொல்லியாச்சா?” எனக் கேட்டபடி வந்தவரைப் பார்த்து.
மாடிப்படிகளின் அருகில் ப்ரனிஷைப் பார்த்து முறைத்தவாறு நின்றிருந்தான் அவன், அருள்.
‘போச்சுடா… இவன் கேட்டுட்டான் போலவே… இனி இவனுக்கும் அதே படத்தை ஓட்டனுமா? இவன் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ தெரியலையே! எதுக்கும் அடி வாங்க தயாராவே இரு ப்ரனிஷ். ப்ரியாகிட்டயும் ரிபீட் டெலிகாஸ்ட் இருக்கு.. அவ சும்மாவே அடிப்பா… இப்போ என்ன செய்வாளோ!!” என நினைத்து, முகத்தில் புன்னகையை வரவழைத்து அருளிடம் வந்தான் ப்ரனிஷ்.
“ஓஓஓ… தெரிஞ்சிருச்சா… அப்புறமும் ஏன் மச்சான் முறைக்குற? உன் முறைப் பொண்ணு கீழே இருக்கு…” என்று அருள் அதனை ரசிக்கும் நிலையில் இல்லையென்பதை அறிந்தும் வம்புக்கிழுத்தான் ப்ரனிஷ்.
அது சரிதான் என்பது “பேச்ச மாத்தாத… உன் அம்மாவாலே இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்துது தெரியுமா?” என கோபம் சிறிதும் குறையாமல் கேட்டாதிலேயே தெரிந்தது.
பார்த்தவி, ப்ரனிஷின் அம்மா தண்டாயுதபாணி-வள்ளியம்மாளின் கடைசிப் பெண். ஆஸ்திக்கு ஒன்றிற்கு இரு மகன்கள் இருந்தாலும், ஆசைக்கு ஒரு பெண் வேண்டுமென்று ஏங்கிய இருவரின் ஏக்கம் போக்க வரமாய் வந்தவள். இந்த பூலோகத்தில் இருக்கும் அத்தனை பாசத்தையும் கொட்டி வளர்த்தனர் மகளை. தந்தை-தாய்க்கு மட்டுமல்லாது, தமையன்களுக்கும் செல்லச் சிட்டாய் சிறகடித்துக்கொண்டிருந்த பார்த்தவியின் பதினெட்டாவது வயதில் தான் நடந்தது அது… எத்தனை அவமானங்கள் நேர்ந்தது அப்போது? அவை நடந்தபோது அவன் பிறக்கவில்லையென்றாலும், அதனைப் பற்றி உரைக்கும்போது அவன் தந்தையின் கண்களில் தோன்றிய வலி? என்றேனும் மறக்க முடியுமா? அவை மீண்டும் தன் மனக்கண்ணில் வந்து நிற்க, கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அருளுக்கு.
இவை அனைத்திற்கும் மேலாக, எதுவுமே கூறாமல் ப்ரியாவை வேறு ஏமாற்றி மணந்து கொண்டானே என்ற காரணமும் அவன் கோபத்தீக்கு எண்ணெய் ஊற்றியது. அதனை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தத் தவறவில்லை அவன்.
“அது எல்லாம் தெரிஞ்சும்… எப்படிடா உன்னாலே திரும்பவும் இங்கே வர முடிஞ்சுது? நல்லா ஏமாத்திட்டியே… ப்ரியாவை நீ இதுக்காகத்தான் காதலிச்சியா?” இருந்த கோபத்தில் மரியாதை மலையேறிப் போனது அருளுக்கு. ஆத்திரத்தோடு ப்ரனிஷின் அருகில் நெருங்கினான் அருள்.
“ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு…” என தன்னை புரிய வைத்துவிடும் நோக்கில் அருளிடம் தன்மையாகப் பேசினான் ப்ரனிஷ். ஆனால், அது மருந்துக்கும் அருளிடம் இல்லை.
“என்ன சொல்லப்போற… உங்க அம்மா தப்பே செய்யலைன்னா? எவ்வளவு பாசத்தைக் கொட்டி வளத்தாங்க எல்லாரும்… அதற்கு துரோகம் பண்ண எப்படிடா மனசு வந்துச்சு அவங்களுக்கு?” என ப்ரனிஷை உறுத்து விழித்து கேட்டுக்கொண்டிருந்தான் அருள்.
“அருள்… நான்…” என மீண்டும் ஏதோ சொல்லவந்தான் ப்ரனிஷ். அவன் கூறுவது தன் செவிகளில் விழாததுபோல இரைந்துகொண்டிருந்தான் அருள்.
“இன்னும் என்ன இருக்கு? அன்னைக்கு உன் அம்மா, அதான், இந்த வீட்டின் இளவரசி, தன் அண்ணன்களின் செல்லத் தங்கை, அவங்க அப்பாவையும் அண்ணன்களையும் மதிக்காம போனாங்க… இன்னைக்கு அவங்க பையன் நீ…” என ப்ரனிஷின் முன் கைநீட்டியவன், அவன் கண்களைப் பார்த்தவாறு மேலும் தொடர்ந்தான், “அதையே மறுபடியும் அவங்களுக்கு செய்துட்டே… தேங்க்ஸ்… ரொம்ப தேங்க்ஸ்…” என்றவன், “ஆனால், நான் அவர்களை மாதிரி இல்லை… இப்போவே உன்னைப் பற்றிய உண்மையை எல்லாரிடமும் சொல்லி உன்னை என்ன செய்கிறேன் என்று பார்…” என்று ப்ரனிஷிடம் கோபமாக உரைத்து, கீழே செல்ல, அவனை சடன் பிரேக் போட்டு நிற்க வைத்தது ப்ரனிஷின் “பெரிய மாமாவுக்கு எல்லாமே தெரியும்… கலியாணத்திற்கு முன்னாடியே…” என்ற குரல்.
திடுக்கிட்டு சட்டென திரும்பி நின்றான் அருள். அவன் முகத்தில் கேள்வி இருந்தது. “அவருகிட்ட என்ன கதை சொல்லிடா ஏமாத்தின?” என முகம் கடுக்கக் கேட்டான் அருள்.
“எது உண்மையோ அதைக் கூறினேன்” என்றான் ப்ரனிஷ்.
“பொல்லாத உண்மை… ஏதாவது கதை கட்டிருப்ப…. பாவம்… அது தெரியாதவரு நம்பியிருப்பாரு…” என கேலியாக நகைத்தான் அருள்.
அவனை சமாதானப் படுத்தி தன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைத்த ப்ரனிஷின் வார்த்தைகளிலும் நம்பகத்தன்மை தோன்றவில்லை அவனுக்கு. அந்த கேலிப்புன்னகை மாறாமலே நின்றிருந்தான் அவன்.
இறுதியாக ப்ரனிஷ் தான் கூறியதனை மேலும் தெளிவுப்படுத்த அருள் நம்பக்கூடியவரை அழைக்க வேண்டியதாயிற்று. அவர்களோடு பேசியபின் அருள் ப்ரனிஷின் கூற்றை ஏற்றான். ஆனால் அதன் பின் அருள் ப்ரனிஷிடம் கூறிய விஷயம், “இன்னொரு பிரச்சனையா…” என அவனை எண்ண வைத்தது.