குட்டிக் கதைகள் – 79. பறவைக் கூடு
ஒரு வானம்பாடி சோளம் நிறைந்திருந்த வயலில் தன் கூட்டை கட்டி முட்டை இட்டது. சில நாட்களில் முட்டைகளில் இருந்து சிறு குஞ்சுகள் வெளி வந்தன.
ஒரு நாள் தாய் வானம்பாடி உணவு சேகரிக்க சென்றிருந்த போது, "சோளம் நன்றாக் வளர்ந்து விட்டது. பக்கத்து வீட்டுக்காரங்களை கூப்பிட்டு இந்த வயலை அறுவடை செய்யப் போறேன்” என விவசாயி சொல்வதை குழந்தை வானம்பாடிகள் கேட்டன.
இதனால் அதிர்ச்சியடைந்த குஞ்சுகள் தங்கள் தாயிடம் இது பற்றி கூறினார்கள்.
"கவலைப்படாதீர்கள்! விவசாயி மற்றவர்களை அழைத்து வர நாள் ஆகும்!" என்று அம்மா அவர்களை தேற்றினாள்.
சில நாட்களுக்குப் பிறகு, விவசாயி மீண்டும் வந்து, “சீக்கிரமே அறுவடை செய்ய வேண்டும். வேலைக்கு உதவ என் உறவினர்களை அழைக்கப் போகிறேன்.” என்று மகனிடம் சொல்வதை குஞ்சுகள் கேட்டன.
இப்போதும் தாய் பறவை, "பயப்படாதீர்கள்" என்று அவர்களிடம் கூறியது.
ஆனால் அடுத்த நாள் விவசாயி தனது சிறிய மகனுடன் மீண்டும் அங்கு வந்து, "நானே நாளை இந்த வயலை அறுவடை செய்யப் போகிறேன்." என்றார்.
இதை குஞ்சுகள் வழியாக கேட்ட உடன், "நாம் இங்கே இருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒரு மனிதன் யாரையும் நம்பி இருக்காமல் அவனே வேலையைச் செய்வேன் என்று சொன்னால், அவன் நிச்சயமாக அதைச் செய்வான்" என்று தாய் வானம்பாடி சொல்லி, குஞ்சுகளுடன் வேறு இடத்திற்கு பறந்துச் சென்றது.
கருத்து:
தன் கையே தனக்கு உதவி!