கருத்துக் கதைகள் – 05. வல்லவனுக்கு வல்லவன்... - தங்கமணி சுவாமினாதன்
அவன் ஒரு பக்காத் திருடன். பலே பலே திருடன். ஒரு நாள் அவன் முடி வெட்டிக் கொள்ள சலூனுக்குச் சென்றான்.அங்கு நிறைய பேர் முடிவெட்டிக்கொள்ள காத்துக்கிடந்தனர். இவன் முடி திருத்தும் நபரிடம் மிக அதிகமாகப் பணம் தருவதாகவும் தனக்கு முதலில் முடி திருத்திவிட வேண்டும் என்றும் கேட்டான்.
அந்த முடி திருத்தும் நபரும் கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டு சரியென்று சம்மதித்தான்.
இந்தத் திருடனுக்கு முடி வெட்டி விடப்பட்டது. இவன் திருட்டு புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. ஐயா..என்னிடம் இருப்பவையெல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் உங்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை இருக்கிறதா? என்று மிக பவ்யமாக் கேட்டான்.
உண்மையில் அவனிடம் பணமே இல்லை. இவன் சொல்வது உண்மை என நம்பிய சலூன்காரன் சில்லறை இல்லை என்றான். திருடன் கொஞ்சம் யோசிப்பது போல் நடித்தான்.
அப்படியானால் என்னுடன் யாரையாவது அனுப்புங்கள். எனக்கு நிறைய பட்டுத் துணிகள் வாங்க வேண்டும். அதோ இருக்கும் துணிக்கடைக்குப் போகப்போகிறேன். அங்கே துணி வாங்கினால் சில்லறை கிடைக்கும். நீங்கள் என்னுடன் அனுப்பும் நபரிடம் உங்களுக்கான தொகையை கொடுத்தனுப்புகிறேன் என்றான்.
சலூன்காரனும் தன் பணிரெண்டு வயது மகனை அவனுடன் அனுப்பிவைத்தான். இருவரும் துணிக்கடைக்குப் போனார்கள். விதவிதமாய் விலையுயர்ந்த புடவைகளை எடுத்தான் திருடன்.
கடைக்காரனுக்கு ஏக குஷி. நல்ல விற்பனை என்று. திருடன் தன் வேலையை ஆரம்பித்தான். கடைகாரனிடம் ஐயா இந்த புடவைகளெல்லாம் மிக நன்றாக இருகின்றன. இவற்றை அதோ அந்த அறையில் இருக்கும் என் வீட்டுப் பெண்களிடம் காட்டி வருகிறேன். அவர்கள் இவ்விடம் பிற ஆண்கள் இருக்குமிடம் வரமாட்டார்கள் என்றான். கடைக்காரன் கொஞ்சம் தயங்கவே..இதோ இருக்கிறானே இவன் என் மகன் தான் இவனை உங்களிடன் பிணையாக வைத்துச் செல்கிறேன் என்றான்.
கடைக்காரன் கொஞ்சம் தயக்கத்துடனே சரி என்றான். புடவைகளை பெண்களிடம் காட்டி வருவதாகப் பொய் சொன்ன பலே திருடன் அந்த விலையுயர்ந்த புடவைகளுடன் கம்பி நீட்டிவிட்டான்.
திருட்டுப் புடவைகளுடன் வெகு தொலைவு சென்றுவிட்ட அந்த பக்காத் திருடன் வழியில் ஒரு சிறுவன் ஒரு கிணற்றின் அருகில் நின்று கிணற்றை எட்டிப் பார்த்தபடி அழுது கொண்டுடிருந்தான். திருடன் அச் சிறுவனை என்னவென்று கேட்டான்.
அப்பையன் ஐயா என் பத்து பவுன் செயின் இக்கிணற்றில் விழுது விட்டது. என் தந்தைக்கு தெரிந்தால் என்னைக் கொன்றே விடுவார் என்று சொல்லி மேலும் சத்தமாக அழுதான்.
திருடனின் கிரிமினல் மூளை வேலை செய்தது. கிணற்றில் இறங்கி பவுன் சங்கிலியை தேடி எடுத்து நாமே வைத்துக் கொள்ளலாம். இந்தச் சிறுவனை ஏமாற்றி விடலாம் என நினைத்துக் கையிலிருந்த பட்டுப் புடவைகள் மூட்டையை அந்தச் சிறுவனைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு கிணற்றில் இறங்கி பவுன் சங்கிலியைத் தேடோ தேடென்று தேடினான். எதுவும் கிடைக்கவில்லை. சிறுவன் இவனை ஏமாற்ற சொன்ன பொய் அது.. ஏமாற்றத்துடன் மேலே ஏறிவந்தவன் அந்தச் சிறுவனையும் தான் திருடி வந்த பட்டுப் புடவை மூட்டையையும் காணாது திகைத்தான். அப்போ அவனுக்குப் புரிந்தது அச் சிறுவனால் தான் ஏமாற்றப்பட்டது.... நாமே ஒரு பக்காத் திருடன். நமக்கும் மேலே ஒரு பலே திருடன் இருக்கிறானே என்று நினைத்தான் அவன்.
கதை சொல்லும் கருத்து:
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு...
Story # 06 - Otrumaiye uyarvu tharum
{kunena_discuss:875}