கருத்துக் கதைகள் – 06. ஒற்றுமையே என்றும் உயர்வு தரும்... - தங்கமணி சுவாமினாதன்
மிக வயதான தந்தை அவர். பெரும் பணக்காரர். மனைவி இல்லை. ரொம்பவும் நல்லவர்.
அவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அந்த மகன்களுக்குக்கிடையே சிறிதும் ஒற்றுமை கிடையாது. எப்பவும் சச்சரவு நடந்துகொண்டே இருக்கும். இது அந்த வயதான தந்தைக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அவர் பிள்ளைகளுக்கு ஒற்றுமையின் அவசியத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார். நீங்கள் இப்படி உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் பிறர் வந்து உங்களுக்கு நியாயம் சொல்வதாகச் சொல்லிக்கொண்டு மேலும் உங்களிடையே மனஸ்தாபத்தை அதிகமாக்கி அதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் தேட முயற்ச்சிப்பர். அதனால் நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வார். ஆனால் அந்த சகோதரர்கள் நால்வரும் வயதான தந்தையின் வார்த்தையைக் கேட்கவே மாட்டார்கள். அந்த தந்தை சொன்னது போலவே கெட்ட எண்ணம் கொண்ட பலபேர் நால்வருக்கிடையேயும் இவனைப்பற்றி அவனிடமும் அவனைப் பற்றி இவனிடமும் கோள் சொல்லி நால்வரிடையேயும் பகைமையை அதிகப்படுத்தினர். வீடு திமிலோகப்பட்டது. இது அந்த வயதான தந்தைக்கு மனத் துன்பத்தைக் கொடுத்தது. நான்கு மகன்களும் சொத்தை பிரித்துத் தருமாறு தந்தையை வற்புறுத்தினர். எல்லாம் கெட்ட எண்ணம் கொண்ட நபர்களளாலேயே நால்வருக்கும் சொல்லித் தரப் பட்டது.
தந்தை வருத்தத்தின் உச்சிக்கே சென்றார். மறுபடி மறுபடி அவர்களுக்கு புத்தி சொன்னார். அவர்கள் சொத்தை பிரிப்பதில் பிடிவாதமாக இருந்தனர். அப்போது அந்த வயதான தந்தைக்கு ஒரு யோசனை தோன்றியது.
பிள்ளைகள் நால்வரையும் அழைத்தார். அன்புப் பிள்ளைகளே . . நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அப்போட்டியில் நால்வரும் ஜெயித்தால் சொத்தைப் பிரித்துத் தருகிறேன் என்றார். அவர்களும் சம்மதித்தனர். ஆறடி நீளத்தில் எட்டு கம்புகளைக் கொண்டு வரச் சொன்னார். ஒவ்வொரு மகனிடமும் ஒன்றைக் கொடுத்து அதனை இரண்டாக உடைக்கச் சொன்னார். பூ. . இதுதானா போட்டி என்று நினைத்து ஒவ்வொரு மகனும் தனக்குக் கொடுக்கப்பட்ட கம்பினை அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தில் ஒரே முயற்சியில் மிக எளிதாக உடைத்தனர்.
மீதம் இருந்த நான்கு கம்புகளையும் ஒன்றாகக் கட்டி ஒரே கட்டாக்கி முதலில் ஒருவனிடம் கொடுத்து அந்தக் கட்டினை உடைக்கும்படி கூறினார். நான்கு கம்புகளோடு கூடிய அந்தக் கட்டினை என்ன முயன்றும்அவனால் உடைக்க முடியவில்லை. மற்ற மூன்று பேராலும் அக்கட்டை உடைக்க முடியவில்லை. அப்போது அந்த வயதான தந்தை நால்வரையும் பார்த்து மகன்களே ஒரு கம்பு மட்டும் இருந்தபோது அக்கம்பை உங்களால் எளிதாக உடைக்க முடிந்தது. ஆனால் நான்கு கம்புகளாக இருந்த போது உங்களால் அதை உடைக்க முடியவில்லை. அது போல்தான் நீங்கள் உங்களுக்குள் ஒற்றுமையின்றி சண்டையிட்டு தனித்தனியே இருந்தால் கெட்ட மதி படைத்தவர்கள் உங்களின் பகைமையை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு சொத்தை அபகரிப்பர். எனவே நீங்கள் ஒற்றுமையாக இருந்து நம் சொத்தை கட்டிக் காக்க வேண்டும் என்றார்.
இப்போது அந்த நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் உயர்வு நன்றாகப் புரிந்தது. தந்தையே ஒற்றுமை எவ்வளவு உயர்வானது எவ்வளவு அவசியமானது என்பதை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டோம். இனி ஒருபோதும் நாங்கள் எங்களுக்குள் சண்டையிடமாட்டோம். எங்களை யாராலும் இனி பிரிக்க முடியாது என்றனர். பிள்ளைகள் திருந்தியதைக் கண்டு அந்த வயதான தந்தை மகிழ்ந்து போனார்.
கதை சொல்லும் கருத்து:
ஒற்றுமையே என்றும் உயர்வு தரும். . ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே...
Story # 05 - Vallavanukku vallavan
Story # 07 - Moondru velaiyatkalin kathai
{kunena_discuss:875}