கருத்துக் கதைகள் – 07. மூன்று வேலையாட்களின் கதை - அன்னா ஸ்வீட்டி
முன்பொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் தனது வாணிபம் காரணமாக தூர தேசத்திற்கு பயணம் போக வேண்டியதாய் இருந்தது. அப்படி கிளம்பி செல்லும் முன் தன் சேமிப்பிலிருந்து 5 தாலந்து அளவு தங்கத்தை எடுத்து ஒரு வேலைக்காரனிடமும், 2 தாலந்து தங்கத்தை இன்னொரு வேலைக்காரனிடமும், ஒரு தாலந்து தங்கத்தை மற்றொரு வேலையாளிடமும் கொடுத்து அதை ஏற்றவிதமாக முதலீடு செய்து பெருக்கும் படி சொல்லிவிட்டுப் போனான்.
(தாலந்து எனப்து பழைய ரோம, கிரேக்க, பாபிலோனிய அளவை….ஒரு தாலந்து என்பது ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து 26 கிலோவிலிருந்து 60 கிலோவரைக்கும் பொருள்படும்.)
தங்கம் கிடைக்கவும் முதலாமவனும் இரண்டாமவனும் அதை முதலீடாக வைத்து தொழில் செய்ய தொடங்கினர். மூன்றாமவனோ அந்த தங்கத்தை ஆழ குழி தோண்டி புதைத்து வைத்தான்.
நெடுநாள் பின்பு அந்த தங்கத்தின் சொந்தகாரனான செல்வந்தன் திரும்பி வந்தான். அப்போது முதலாமானவன்…..”ஐயா உங்கள் பணத்தை வைத்து நான் தொழில் செய்து அதை இரட்டிப்பாய் பெருக்கி வைத்திருக்கிறேன்….இதோ 10 தாலந்து தங்கம்” என கொண்டு வந்து கொடுத்தான்.
உடனே அந்த செல்வந்தனும் “ நீ உண்மையுள்ள வேலைக்காரன்…கடின உழைப்பாளியும் கூட……இன்றிலிருந்து எனது தொழிலின் பெரும் பகுதியை உன் பொறுப்பில் விடுகிறேன்…..” என சொல்லி பதவி உயர்வு கொடுத்தான்.
2 தாலந்தை வாங்கியிருந்த அடுத்தவனும் அதே போல் சொல்லி 4 தாலந்தை கொண்டு வந்திருந்தான். அவனுக்கும் மகிழ்ச்சியோடு பதவி உயர்வு தந்தான் அந்த செல்வந்தன்.
மூன்றாமவனோ “ஐயா நீ பணவிஷயத்தில் கடுமையானவர் என தெரியும்…அதனால் உங்கள் தங்கத்தை தொலைத்து விடக்கூடாது என அதை குழியில் வைத்து மூடி இருந்தேன்…. இதோ உங்கள் ஒரு தாலந்து தங்கம் “ என கொண்டு வந்து கொடுத்தான்.
உடனே அந்த செல்வந்தனோ…… மூன்றாமவனிடமிருந்த ஒரு தாலந்தையும் வாங்கி இதையும் சேர்த்து முதலீடு செய்து எனக்கு தங்கத்தை இன்னுமாய் பெருக்கித்தா என முதலாமவனிடம் கொடுத்துவிட்டான்….
மூன்றாமவனையோ “ஏய் சோம்பேறியான வேலைக்காரனே…..நான் பணவிஷயத்தில் கடுமையானவன் என தெரிந்தும்…என் தங்கத்தை நீ பெருக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லையே…..அதை நீ மற்றவரிடம் கடனாக கொடுத்து வாங்கி இருந்தால் கூட இந்நேரம் வட்டி வந்திருக்குமே…. நீ என்னை நஷ்டபடுத்திவிட்டாய்….அதலால் இனி உனக்கு இங்கு வேலை இல்லை” என சொல்லி வெளியே அனுப்பிவிட்டான்.
கதை சொல்லும் கருத்து:
சின்ன விஷயத்தில் உண்மையாய் இருப்பவர்களுக்குத்தான் பெரிய விஷயங்கள் கொடுக்கப் படும். சோம்பேறியின் கையோ வறுமையை உண்டு பண்ணும்.
நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் திறைமைகளை (talents) பயன்படுத்தினால்தான் நாம் விருத்தி அடைவோம்.