கருத்துக் கதைகள் – 08. குரங்கு சொன்ன நியாயம்... - தங்கமணி சுவாமினாதன்
இரண்டு பூனைகள் நட்பாய் இருந்தன. ஒன்றாகவே இரை தேடும். பகிர்ந்து உண்ணும்.
விளையாடும். மகிழிச்சியாய்ப் பொழுதைக் கழிக்கும். ஒன்று வெள்ளை நிறப் பூனை. மற்றொன்று கறுப்பு நிறம். ஒரு நாள் அவை இரண்டும் தினம் தினம் எலியையும் மீனையுமே சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றும் வித்தியாசமான உணவை உண்ணவேண்டுமென பேசிக்கொண்டன. இந்த கிராமத்தில் வித்தியாசமான் உணவு கிடக்காதென்றும் எனவே பக்கத்திலிருக்கும் டவுனுக்குச் செல்வதென்றும் தீர்மானித்தன.
அவ்வாறே பக்கத்துட் டவுனுக்கு வந்தன. இப்பிடீ நடந்து சென்றன. அப்படி நடந்து செல்லும் வழியில் ஹோட்டல் ஒன்று குறுக்கிட்டது. அது ஹோட்டலின் பின்புறம். அங்கிருந்து புது விதமான உணவுகளின் வாசனை கமகமவென்று காற்றில் மிதந்து வர பூனைகள் இரண்டும் ஹோட்டலின் பின்புறம் மெள்ள நுழைந்தன.
அது சமையலறை. விதவிதமான உணவுப் பொருட்கள் தட்டுகளில் வைக்கப் பட்டிருந்தன.
பூனைகளின் நாவில் எச்சில் ஊறியது. அப்போது ஊத்தப்பம் ஒன்று ஒரு தட்டில் வைக்கப்பட்டிருப்பதை வெள்ளை நிறப் பூனை பார்த்தது. உடனே கறுப்புப் பூனையிடம் அதைச் சுட்டிக் காட்டியது.
கறுப்புப் பூனை யாரும் தன்னைப் பார்த்து விடாதவாறு மிக ஜாக்கிரதையாக பூனைபோல்(?)னடந்து சென்று சட்டென அந்த ஊத்தப்பத்தைக் கவ்விக்கொண்டு வந்து விட்டது. இரண்டு பூனைகளும் அப்பத்தோடு அவ்விடம் விட்டு தப்பித்து ஓடின.
மனித நடமாட்டமில்லாத ஓரிடத்தில் வந்து அமர்ந்து கொண்டன.
அப்பத்தின் வாசனை அதைத் தாமே முழுவதுமாக உண்ண வேண்டுமென்ற ஆசையை இரு பூனைகளுக்கும் ஏற்படுத்தியது.
வெள்ளைப் பூனை சொன்னது நான்தான் முதலில் அப்பத்தைப் பார்த்தேன். எனவே எனக்குத்தான் முழுவதும் அது சொந்தம் என்றது. கறுப்புப் பூனைக்கு கோபம் வந்தது.
பார்த்தது நீ என்றாலும் தைரியமாய் அதைத் திருடி வந்தது நான். எனவே எனக்கே அது முழுதும் சொந்தம் என்றது. இரண்டும் மாறிமாறி சண்டை இட்டுக்கொண்டன.
இவற்றின் சண்டையை அங்கிருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. அதன் மனதில் திட்டம் ஒன்று உருவானது. மெள்ள மரத்திலிருந்து கீழே இறங்கி பூனைகளின் அருகில் வந்தது.
பூனைத் தம்பிகளா என்ன பிரர்ச்ச்னை உங்களிடையே என்று கேட்டது. ரொம்ப நல்லவன் போல் நடித்தது.
பூனைகளும் குரங்கின் எண்ணம் தெரியாமல் குரங்கண்ணே. . குரங்கண்ணே. . இதோ இந்த அப்பத்தை நாந்தான் முதலில் பார்த்தேன் எனவே இது எனக்குத் தானே சொந்தம் நீங்களே சொல்லுங்கள் என்றது வெள்ளைப் பூனை.
இல்லை இல்லை நாந்தான் கஷ்ட்டப்பட்டு திருடிவந்தேன் இதனை எனவே இது எனக்குதானே சொந்தம் சொல்லுங்கள் குரங்கண்ணே என்றது கறுப்புப் பூனை.
குரங்கு தனது எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பித்தது.
பூனைத் தம்பிகளா. . சண்டை வேண்டாம். நான் உங்களுக்கு இவ்வப்பத்தைச் சமமாகப் பங்கிட்டுத் தருகிறேன். இருவருக்குமே இதில் உரிமை உண்டு என்றது. பூனைகளும் குரங்கு சொல்வது சரி என்று நினைத்துச் சம்மதித்தன.
குரங்கு அப்பத்தைச் சமமாக இல்லாமல் ஒரு பகுதி பெரிதாகவும் மற்றொரு பகுதி சின்னதாகவும் வாயில் வைத்துக் கடித்து எடுத்தது. அவற்றை இரு பூனைகளுக்கும் ஒவ்வொன்றைக் கொடுத்தது. பூனைகள் சமமாக இல்லை என்று மறுத்தன. மீண்டும் குரங்கு அப்பத்தை சமமின்றி வேண்டுமென்றே செய்தது.
பூனைகள் சமமாய் இல்லை என மறுத்தன. இப்படியே மாறிமாறிக் கடித்து மிச்சமே இல்லாமல் முழு அப்பத்தையும் குரங்கே தின்று தீர்த்துவிட்டு லபக்கென்று மரத்தின் தாவி ஏறி ஓடி மறைந்து விட்டது.
பூனைகள் இரண்டும் ஏமாந்து போய் அமர்ந்திருந்தன. தங்களுக்குள் இருந்த நட்பை மறந்து விட்டு கேவலம் ஒரு அப்பத்துக்காக சண்டையிட்டு அதையும் தின்னாமல் ஒரு குரங்கைத் தின்னவிட்டு ஏமாந்ததை நினைத்து வருந்தின.
கதை சொல்லும் கருத்து:
தங்களுக்குள் இருக்கும் பிரர்ச்சனையை தாங்களே சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமேயின்றி தகுதி இல்லா மூன்றாம் நபரை நியாயம் சொல்ல அழைத்தால் இப்படித்தான் இழப்பைச் சந்திக்க வேண்டும்.