கருத்துக் கதைகள் – 21. வாழ்க்கை பயணம் - Chillzee Team
கூடியிருந்த அந்த மக்களிடம் ஒரு அறிவாளி பேச தொடங்கினார்.
“நான் உங்களிடம் ஒரு சிரிப்பு துணுக்கு சொல்ல விரும்புகிறேன்.
ஒரு சிறுவன் அம்மாவிடம் ‘கேரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது நல்லதுன்னு சொல்றீங்களே அது நல்லதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்றுக் கேட்டான்.
அதற்கு அந்த புத்திசாலி அம்மா, ‘எங்கேயாவது கேரட் மட்டும் சாப்பிடுற முயல் கண்ணாடி போட்டு பார்த்திருக்கீயான்னு’ பளிச்சுன்னு பதில் சொன்னாங்க..”
கூடி இருந்த மக்கள் கை தட்டி ஆர்பரித்தார்கள்... சிலர் வெகு பலமாக சிரித்தார்கள்...
அந்த ஆரவாரம் அடங்கிய பின் தொடர்ந்து பேசிய அந்த அறிவாளி,
“ஒரு சிறுவன் அம்மாவிடம் ‘கேரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது நல்லதுன்னு சொல்றீங்களே அது நல்லதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்றுக் கேட்டான்.
அதற்கு அந்த புத்திசாலி அம்மா, ‘எங்கேயாவது கேரட் மட்டும் சாப்பிடுற முயல் கண்ணாடி போட்டு பார்த்திருக்கீயான்னு’ பதில் சொன்னாங்க..”
என்று மீண்டும் சொன்னார்.
இந்தமுறை வெகு சிலர் மட்டுமே சிரித்தார்கள்...
அவர்கள் சிரித்து முடித்த உடன், அந்த அறிவாளி,
“ஒரு சிறுவன் அம்மாவிடம் ‘கேரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது நல்லதுன்னு சொல்றீங்களே அது நல்லதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்றுக் கேட்டான்.
அதற்கு அந்த புத்திசாலி அம்மா, ‘எங்கேயாவது கேரட் மட்டும் சாப்பிடுற முயல் கண்ணாடி போட்டு பார்த்திருக்கீயான்னு’ பதில் சொன்னாங்க..”
என்று மூன்றாவது முறையாக அதே துணுக்கை சொன்னார்.
இந்த முறை சிரிக்காமல் மக்கள் கடுப்புடன் அவரை பார்த்தார்கள்.
அறிவாளியின் முகத்தில் புன்னகை தோன்றியது.
“ஒரே சிரிப்பு துணுக்கை மீண்டும் மீண்டும் கேட்டால் உங்களால் சிரிக்க முடியாது.... ஆனால் வாழ்க்கையில் நடந்த சோகமான அல்லது நீங்கள் அவமானமடைந்த அல்லது சங்கட பட நேர்ந்த ஒரே நிகழ்வை மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்?
வாழ்க்கை போய் கொண்டே இருக்கிறது.... நாமும் நடந்ததை பின்னே தள்ளி விட்டு விட்டு நம் பயணத்தை தொடர்ந்துக் கொண்டே இருக்க வேண்டிய தான்...” என்றார்.
மக்களின் கரகோஷம் அடங்க வெகு நேரமாயிற்று!