குழந்தைகள் சிறப்பு சிறுகதை - அப்பம் தின்ற முயல் - நாரா நாச்சியப்பன்
அது ஒரு மலைக்காடு. ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டிப் போய்க் கிடந்தது. அந்த மலைக் காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது.
ஒரு நாள் அந்தக் குட்டி முயல் காட்டுக்குள்ளே அங்கும் இங்குமாகத் துள்ளிப் பாய்ந்து குதித்துக் கும்மாளம் போட்டது. பாய்ந்து, பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த அந்தக் குட்டி முயலுக்குத் திடீரென்று ஓர் ஆசை தோன்றியது.
மலை உச்சி வரை போய்ப்பார்த்து விடவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. உடனே அது உச்சி நோக்கிப் பாய்ந்து செல்லத் தொடங்கியது. மரங்களுக் கிடையே புல்வெளிகளிலே குறுக்கும், நெடுக்குமாக வளர்ந்திருந்த செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் தாண்டிக் குதித்து மேலே, மேலே சென்று கொண்டிருந்தது. போகப் போக மலை உச்சி நெருங்கி வருவதாகத் தெரியவில்லை . மலை அவ்வளவு உயர்மாக இருந்தது.
குட்டி முயல் நினைத்த செயலை முடிக்காமல் தூங்காது போல் இருந்தது. சிறிதுகூட அயராது அது துள்ளிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அது உச்சி சென்று சேர்ந்த நேரம் இருட்டி விட்டது.
உச்சியில் நின்று அந்தக் குட்டி முயல் சுற்று முற்றும் பார்த்தது. மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களெல்லாம் சின்னச் சின்ன செடிகள் போல் காட்சியளித்தன. ஏரி, குளங்களெல்லாம் சிறிய, சிறிய பள்ளங்கள் போல் தோன்றின. கிழக்குப் பக்கத்தில் இருந்த கடல் ஓர் ஏரியைப் போல் காட்சியளித்தது. அப்பொழுது கடலின் அடி மட்டத்திலிருந்து வெள்ளை நிறமான ஓர் அப்பம் வெளிவந்தது.
அந்த அப்பத்தைப் பார்க்க பார்க்கக் குட்டி முயலுக்கு அதைக் கடித்து தின்ன வேண்டும் போல் இருந்தது. உடனே கீழ் நோக்கிப் பாய்ந்தது. சிறிது