அவரது திறனுக்கு மிகுதியான வேலைப் பளு கொடுத்து விட்டு, ச்சி ச்சீ இதை செய்வதற்கே உனக்கு திறமையில்லை இப்படி இருந்தால் உனக்கு எப்படி மற்ற வேலைகள் செய்ய இயலும்? உன்னால் எந்த வேலையுமே சரியாக செய்ய முடியாது. நீ திறமைகள் இல்லாத தத்தி என்று முத்திரைக் குத்தினால் எவ்வாறு இருக்கும்?
ஒரு வேளை அந்த நபருக்கு கனமான பொருட்களை தூக்க திறனில்லாமல் போனாலும், நல்ல குரல் வளம் இருக்கலாம். தன்னை சுற்றியுள்ள இடத்தை நன்கு அலங்கரிக்கும் ரசனையுள்ளம் இருக்கலாம் இன்னும் பல்வேறு தனித் திறமைகள் இருக்கலாம்.அதீதமான புறக்கணிப்பும், கடும் சொற்களும் அவருக்கு இருக்கும் மற்ற திறமைகள் குறித்த தன்னம்பிக்கையை மழுங்கி விடச் செய்து “ஒருவேளை நாம் எதற்க்கும் லாயக்கு இல்லாதவன்(ள்) போலும் என்கிற முடிவுக்கு அவர் வந்து விடக் கூடும் இல்லையா?
அது மட்டுமா? மனிதர்கள் அனைவருமே தங்கள் செயல்களுக்கு அங்கீகாரமும், பாராட்டும் எதிர்பார்க்கின்றவர்களாக இருக்கும் போது குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுடைய சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் சிதைக்கப்படுவதும், தினம் தோறும் பள்ளிச் சென்று திட்டு வாங்குவதற்கு, அவமானங்கள் படுவதற்க்கு, பிறர் கண்ணில் தாழ்மையாய் மதிக்கப் படுவதற்க்கு பேசாமல் அங்கு செல்லாமலே இருந்து விடலாமே என்கிற எண்ணம் அந்த மாணவனுக்கு வந்து விடாதா? அதில் தவறேதும் இருக்கின்றதா? சொல்லுங்கள் தோழமைகளே.
காலம் காலமாக மாணவர்களை புறக்கணிக்கும் விதமாக நிகழ்ந்து வரும் இவற்றின் பின்விளைவுகள் என்ன என்பதை யாரும் சிந்திப்பதில்லை. இப்படிப் பட்ட சூழலில் வளரும் குழந்தைகள் ஒன்று தன்னம்பிக்கை இழந்தவர்களாக , எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் சோபிக்க இயலாமல் தனக்குள்ளே ஒடுங்கிப் போகின்றார்கள்.
அல்லது தங்களுக்கு கிடைக்க வேண்டிய கவன ஈர்ப்பை பெறுவதற்காக தங்களுடைய அதிரடியான செய்கைகளால் ஆசிரியர்களை தொல்லை செய்வதுவும், க்ளாஸில் பற்பல சேட்டைகள் செய்வதுமாக திசை திரும்புகிறார்கள். ஒருவகையில் இது அவர்களுக்கு அளிக்கப் பட்ட புறக்கணிப்பிற்கான எதிரொலியேதான் அல்லவா?
தான் மாணவனை அவமானப் படுத்தினால் அதில் தவறில்லை ஆனால் அதே மாணவனிடமிருந்து அதற்கான எதிரொலி வரும் போது, அவன் தவறாக நடக்கும் போது பெற்றோரை அழைத்து குமுறுகின்றார்கள். இதில் இருபக்கமுமே தவறுகள் இருக்கின்றனவே.
இப்படி ஏற்கெனவே படிப்பில் சோபிக்காத மாணவன் பல்வேறு புறக்கணிப்பிற்கு ஆளாகுகையில் தன்னம்பிக்கை இழந்து பரீட்சையில் தோல்வி பெறும் போது, இன்னொரு வருடம் அதே வகுப்பில் தன்னை விட சிறு வயதினர் கூட கற்பதை இன்னுமொரு அவமானமாக கருதி படிப்பை முழுவதுமாக தொடராமல் விடுவதற்கான அதிக பட்ச வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் பள்ளி, கல்லூரியிலிருந்து வெளியேறி பிரைவேட்டாக கற்கும் போது அதே தரம் எல்லாவிடமும் கிடைக்க வாய்ப்புக்களும் இருப்பதில்லை. அவமானத்தை துச்சமெனக் கருதும் சிலர் போராடி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இதில் தோல்வியுற்றோரின் சதவிகிதமே மிக அதிகம்.
தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை வண்ணமயமாக்கி தருவார்கள் என்ற பூரிப்பில் பள்ளியில் சேர்க்கும் பல பெற்றோருக்கு பள்ளியிடமிருந்து கிடைப்பது இவ்வித ஏமாற்றமே.
நான் குறிப்பிடவிருந்த நான்காவது குழுவினர் கல்வித் துறையாளர்களே.
இவர்கள் பொதுவானதொரு பாடத்திட்டம் எடுத்து அனைத்து மக்களும் கற்க ஏற்பாடு செய்வது பாராட்ட தகுந்தது, ஆனால், அவர்களது பாடத் திட்டம் எல்லோருக்கும் ஏற்ற விதமாக இல்லாமல் ஒரு சிலருக்கு கடினமாக தோன்றினால் அதற்கு அவர்களிடம் ஏதாகிலும் மாற்றுத் திட்டம் உண்டா என்றால் இல்லையே?
தேர்ச்சி பெறாத மாணவனை பள்ளி, கல்லூரியினின்று வெளியேற்றுவதோடு கல்வித் துறையின் கடமை நிறைவடைந்து விடுகின்றதா?
படிப்பை முழுமையாக கற்க விரும்பியும் பொருளாதார சூழ் நிலைகளால் படிப்பை பாதியில் விடும் மாணாக்கருக்காக கல்வித்துறை இதுவரை என்ன செய்துள்ளது ?
பள்ளி அல்லது கல்லூரியினின்று பாதி அளவே கல்விக் கற்று வெளி வரும் மாணக்கரின் நிலை என்னவாகின்றது? என்று என்றாவது அவர்கள் ஆராய்ந்து இருக்கின்றார்களா?
அவர்களுக்காக இன்று வரை கல்வித் துறை என்னச் செய்து இருக்கின்றது?
இதனை மக்களாகிய நாம் எவ்வாறு சாதாரணமான ஒன்றாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்?, தன்னுடைய இந்த தோல்வியை கல்வித்துறை எப்போது உணரும்?. இன்றைய நிலையில் தேவையான மாற்றங்களை நான் இங்கு பட்டியலிட்டுள்ளேன். நீங்களும் இவற்றில் உங்கள் கருத்தைச் சேர்க்கலாம். சமூகமாக நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய கடமையையும் செய்யலாம்.