குடும்பம் - குழந்தைகளிடம் 👶 சொல்லக் கூடாத சில விஷயங்கள்! 🔇🔇🔇
பெற்றோராக இருப்பதன் கூடவே பல பொறுப்புகளும் உண்டு. குழந்தைகளை நல்ல விதத்தில் வளர்ப்பது என்பது சுலபமான விஷயமில்லை.
நல்ல பெற்றோராக இருப்பவர்கள் கூட, தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் ஒரு சில வாக்கியங்கள் குழந்தைகளின் மனதை பாதிக்கலாம்.
அப்படி குழந்தைகளிடம் சொல்ல கூடாத சில வாக்கியங்களை பார்ப்போம்.
நீ சின்ன குழந்தை இதெல்லாம் கேட்க கூடாது
குழந்தைகளுக்கு உலகில் காணும் அனைத்துமே புதிதாக தான் இருக்கும்.
இது என்ன, இது ஏன் இப்படி இருக்கிறது என பல, பல கேள்விகளை கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.
இவற்றில் சில நம்மை சங்கடப்படுத்தும் கேள்விகளாகவும் கூட இருக்கலாம். ஒரு சில நமக்கே சரியாக பதில் தெரியாத கேள்விகளாக இருக்கலாம்.
ஆனால் அதற்காக இதெல்லாம் கேட்க கூடாது, இதை பற்றி எல்லாம் பேசக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லக் கூடாது.
அப்படி சொன்னால் குழந்தைகளின் அறிந்துக் கொள்ளும் ஆர்வத்திற்கு முட்டுக் கட்டை போடுவதுடன், அவர்கள் அதை பற்றி தாங்களே தெரிந்துக் கொள்ள முயற்சிப்பதற்கும் வழி வகுக்கும்.
எனவே அப்படி சொல்லாமல், இதை பத்தி மெதுவா பேசுவோம் என அப்போதைக்கு டைம்-அவுட் பெற்றுக் கொண்டு, என்ன சொல்வது என்று யோசித்து பின்பு பொறுமையாக விளக்கலாம்.
தெரிந்த விஷயம் என்றால் குழந்தைகளுக்கு புரியும் அளவிற்கு எடுத்து சொல்லலாம்.
அழுறதை நிறுத்து!
குழந்தைகள் அழுவதற்கு பல் வேறு காரணங்கள் இருக்கலாம்.
பிடிக்காத ஏதோ ஒன்று நடந்திருக்கலாம், பெற்றோரின் கவனத்திற்கு ஏங்குவதால் இருக்கலாம், அடி பட்டிருக்கலாம், உடல் நலம் சரி இல்லாமல் இருக்கலாம்! இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
அழும் குழந்தையிடம் ‘அழுவதை நிறுத்து’ என்று சொன்னால், அழுவது தவறு, நம் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ள கூடாது என்ற எண்ணம் அந்த குழந்தை மனதில் பதிந்து விட வாய்ப்பு இருக்கிறது.
இது அவர்கள் எப்போதும் தனக்கு பிடித்தது, பிடிக்காததை வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளே மறைத்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடலாம்.
எனவே, அழுவதை நிறுத்து என்று சொல்லாமல்,
ஏன் அழுற?
என்ன ஆச்சு? எதுக்கு அழுற?
என்று கேட்டு குழந்தை அழுவதற்கான காரணத்தை புரிந்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
வீட்டுக்கு வா உனக்கு இருக்கு!
கடைகள், சுப்பர் மார்க்கெட்டுகள், திரை அரங்குகள், மால்கள் என பல இடங்களில் காதில் விழும் வார்த்தைகள் இவை.
வீடு என்பது குழந்தைகளின் அன்பு குடிலாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சொல்வது போல ‘There is no place like home’ எனும் எண்ணம் குழந்தைகளிடம் இருக்க வேண்டும்.
‘வீட்டுக்கு வா உனக்கு இருக்கு!’ என்பது போன்ற பேச்சுக்கள் குழந்தைகள் வீடு என்பதை பயப்படும் இடமாக நினைத்து விட வாய்ப்பு கொடுத்து விடும்.
அப்படி நினைக்கும் குழந்தைகள் வீட்டிற்கு வரவே பயப்படுவார்கள்.
எனவே இப்படி சொல்லாமல், சிறு குழந்தைகள் என்றால், அப்போதைக்கு சமாதானப் படுத்தி விட்டு, வீட்டிற்கு வந்த பின்பு புரியுமாறு எடுத்து சொல்லலாம்.
சற்றே பெரிய குழந்தைகள் என்றால், அவர்களிடம், ‘எனக்கு நீ நடந்துக் கொண்ட விதம் பிடிக்கலை’ என பேசி அவர்களுக்கு புரிய வைக்கலாம்.