சொல்லியவர்களை விடுத்து சொல்ல முடியாமல் தவித்து போய் வேண்டா வெறுப்பாக படிக்க வேண்டுமா ஏன் எங்கே போனது சுதந்திரம்?
19 வயது - கல்லூரி பருவம் அந்த வயதில் ஏற்படும் சில சில உற்சாகங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என சொல்லியே சில பெற்றவர்கள் ஆயிரமாயிரம் அறிவுரைகளை தந்து அவர்களது சுதந்திரங்களை அடக்கி அவர்கள் மீது நம்பிக்கை வைக்காமல் அவநம்பிக்கையோடே வளர்ப்பது ஏன்டா வளர்ந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு துக்கப்படும் அளவுக்கு மாற்றிவிடுவது ஏன் எங்கே போனது சுதந்திரம்?
20 வயது - ஆண் பிள்ளை பெண் பிள்ளையோடு பழக கூடாது, பெண் பிள்ளை ஆண் மகனை நிமிர்ந்து பார்த்திடக் கூடாது அனைத்திலும் கண்டிப்புடன் சில பெற்றவர்கள் பெண்களின் சுதந்திரத்திற்கு தடை போடுகிறார்கள். யாரிடம் பெண் பேசினாலும் சந்தேகப்பட்டு அவளது சுதந்திரத்தைப் பறிக்கிறார்கள். ஆண் பிள்ளைகளை பெற்ற சில பெற்றோர்களோ குடும்ப கவுரவம் அந்தஸ்து என தங்களுக்குண்டான பிரச்சனையில் அவர்களை இழுத்து விடுகிறார்கள். இதனால் அங்கு நட்பு அழிக்கப்படுகிறது. பெண்ணுக்கு அவளின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் ஆராயப்படுகின்றன. அனைத்திலும் அவள் வெற்றியடைந்தாலே அவளுக்கான வாழ்க்கை அமையும், ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய வேறுபாடு அல்ல இருவரும் ஒரே சமூகத்தில் பல பேர் கண்களுக்கு முன்பாக போராடி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சுதந்திரம்தான் பல இடங்களில் கனவாகி போகிறது. ஏன் எங்கே போனது சுதந்திரம்?
21 வயது முதல் 25 வயது வரை - பெற்றவர்கள் சொல்லும் படிப்பை படிக்க வேண்டும் காரணம் அவர்கள்தான் பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தவர்கள். பணம், செல்வாக்கு, மரியாதை அனைத்தும் பிள்ளைக்கு பெற்றோரிடமிருந்தே கிடைக்கிறது. இந்தப் படிப்பை படிக்க வேண்டும் என்பதில் தொடங்கி இந்த வேலையில் சேர வேண்டும் என்பதில் தொடங்கி இன்னாரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது வரை முழு பொறுப்பையும் பெற்றவர்கள் தங்களுக்குள் வைத்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசா பாசங்களை கூட தங்களது ஆசைகளுக்குள் கட்டுப்படுத்தி அவர்களுக்கான இயல்பான சுதந்திரத்தையும் பறித்து அவர்களது வாழ்க்கையை செம்மைபடுத்துவதாக நினைத்து தாங்கள் கண்ட கனவையும் தங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையையும் அவர்கள் மீது திணிப்பது ஏன் எங்கே போனது சுதந்திரம்?
26 வயது முதல் 30 வயது வரை- இதுவே ஒவ்வொரு பிள்ளைக்கும் அது ஆணாக இருந்தால் வேலை தேட வேண்டும், சமூகத்தில் முக்கியமான அந்தஸ்த்தில் இருக்கவேண்டும், பலரின் முன் நல்லவனாகவும் வீட்டில் தலைவனாகவும் இருக்க வேண்டும், இதுவே பெண்ணாக இருந்தால் படித்த படிப்பிற்கு வேலை தேடி பணம் சம்பாதிக்க வேண்டும், பெற்றவர்கள் பார்க்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொண்டு, அவனுக்கு சேவைகள் செய்ய வேண்டும். இதில் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும், 25 வயது வரை ஆணோ பெண்ணோ தங்கள் மனதில் பூட்டி வைத்திருந்த கனவுகள் நிலைமைதான் என்ன, சிலர் மட்டுமே தங்களின் கனவுகளை நிறைவேற்றி வானில் பறக்கிறார்கள் சிலரோ அந்த கனவுகளுக்கு சுதந்திரத்தை கூட அளிக்க முடியாமல் ஜெயிலில் தள்ளி தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோவென்று வாழ்கிறார்கள் ஏன் எங்கே போனது சுதந்திரம்?
31 வயது முதல் 40 வயது வரை- இந்த காலகட்டத்தில் ஆண் மகனோ பெண் மகளோ சமூகத்தின் பார்வையில் ஒரு அங்கமாகிறார்கள், அவர்களால் தன் விருப்பத்திற்கு ஏற்ப எந்த செயலும் செய்ய முடியாது. காரணம் யாராவது தன்னை கவனிப்பார்கள், அவர்கள் பார்வையில் தாம் செய்வது சரியென்றால் சரி, இல்லையென்றால் இந்த சமூகத்தில் வாழ தகுதியில்லாதவர்கள் போல சுதந்திரத்தை பறித்து தெருவில் இழுத்துவிடுவார்கள். அதனால் இந்த 10 வருடமும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மதில் மேல் பூனை போன்ற வாழ்க்கைதான் அமையும் ஏன் எங்கே போனது சுதந்திரம்?
41 வயது முதல் 50 வயது வரை - .இந்த காலகட்டத்தில் ஆணோ பெண்ணோ தனக்கு அடுத்து வந்த வாரிசுகளை சமூகத்தில் நிலை நிறுத்த போராடுவார்கள், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும், அவர்கள் உலகத்தின் முன்னால் எந்த சூழ்நிலையிலும் மதிப்பாகவும் நல்லபடியாகவும் இருக்க வேண்டுமென, வேலை செய்யும் ஆணோ பெண்ணோ தங்களின் ஆசைகளை கட்டுப்படுத்தி சுதந்திர உணர்வை விலக்கிவிட்டு ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்து தன் குடும்பத்தை பத்திரப்படுத்தி உயர்த்த வேண்டும், வேலை செய்யாத பெண்ணோ தன் கணவனின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் பொறுத்துக் கொண்டு சுதந்தர வாழ்வை அனுபவியாமல் தான் பெற்ற பிள்ளைகளை வழிநடத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து சில சமயம் அது தோற்று சில சமயம் அது வென்று என வாழ்க்கை போராட்டத்தில் நடந்து செல்லும் அவல நிலையை தாங்களே உருவாக்கி கொள்வார்கள் ஏன் எங்கே போனது சுதந்திரம்?
51 வயது முதல் 60 வயது வரை - ஆண் தான் செய்யும் வேலையானது நிரந்தரமானது என்றால் சாகும் வரை குடும்பத்திற்கு உழைக்க வேண்டும், பெண் தான் வேலைக்கு சென்றாலும் செல்லவில்லையென்றாலும் அவளுக்கான ஓய்வு என்றுமே கிடைக்கப் போவதில்லை.