Inspire Me - தடைகளை வெற்றிப் படிகளாக மாற்றிய செரீனா வில்லியம்ஸ்
செரீனா விலியம்ஸ் யார் என்று நம் பலருக்கும் தெரியும்.
இந்த ஆண்டின் போர்ப்ஸ் பத்திரிக்கையின் “உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்”, “சக்தி வாய்ந்த பெண்கள்”, “தானாக முன்னேறிய பெண்கள்” என பல பட்டியல்களில் இடம் பெற்றிருக்கும் செரீனா வில்லியம்சிற்கு வெற்றி என்பது எளிதாக வந்து விட வில்லை.
23 கிராண்ட் ஸ்லாம்களை வென்ற மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக நமக்கு தெரிந்த செரீனா இந்த நிலையை அடைய மற்ற டென்னிஸ் வீரர்களுக்கு இல்லாத பல கூடுதல் தடைகளை கடக்க வேண்டியிருந்தது.
பணக்காரர்களின் விளையாட்டாக பார்க்கப்பட்ட டென்னிஸ் பயிற்சி என்பது செரீனாவிற்கு எளிதாக கிடைக்கவில்லை.
செரீனா வளர்ந்த இடம் அந்த நாட்களில் அமெரிக்காவில் மோசமான இடமாக இருந்த ஒரு பகுதி. வேலையின்மை, போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி வன்முறை என அனைத்தும் எங்கே ஒன்றாக தாண்டவமாடியது.
செரீனாவையும் அவரின் சகோதரியையும் அவரின் தந்தை கவர்ன்மென்ட் டென்னிஸ் கோர்ட்டில் பயிற்சி பெற அழைத்துச் செல்வது வழக்கம். அந்த இடத்தை சுற்றி துப்பாக்கி சூடு, வன்முறை என நடப்பது வாடிக்கை. அந்த சூழலிலும் மனதை கட்டுப்படுத்தி திடமாக டென்னிஸில் கவனம் செலுத்தி பயிற்சி பெற்றார் செரீனா.
செரீனா ப்ரோபஷ்னல் டென்னிஸ் விளையாட தொடங்கியப் போது, அவர் கருப்பு இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் பற்றி, நிறம் பற்றி என பல ரகமான கேலி கிண்டல்களுக்கும் ஆளானார்.
ஆனாலும் மனம் தளராமல் மற்றவர்களின் கேலி, கிண்டல்களைப் பற்றி எல்லாம் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்காமல் தன் முழு கவனத்தையும் விளையாட்டிலேயே வைத்திருந்தார். அதில் சிறப்பான வெற்றியும் பெற்றார்.