நடுவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாய் பதிலளித்த யாழ் மேடையிலே மயங்கி சரிய அவளையே பார்த்துக்கொண்டிருந்த கௌசல்யாவோ ஓடி வந்து அவளை தாங்கிப்பிடித்தாள். யாழ் மயங்கியதை பார்த்த இரு ஜோடி கண்கள் விஷமமாய் சிரித்துக்
கொண்டிருந்தது. முகத்தில் தண்ணீர் தெளித்தும் விழிக்காத யாழை நினைத்து கண்கலங்கினாள் கௌ. யாழிசையும் கௌசல்யாவும் சிறுவயது முதலே தோழிகள்.
மூன்று தலைமுறையாய் தொடர்ந்து வரும் நட்பு அது. சக்திவேல் தாத்தாவும், குமரகுரு தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் மூலம் சம்பந்தியாகலாம் என்று நினைத்தால் சொல்லிவைத்தாற்போல இருவருக்கும் மகன்களே பிறந்தனர். நந்தகோபாலனும், குருபிரசாத்தும் தத்தம் தந்தையினரை போலவே உயிர் தோழர்கள்.
நந்தகோபாலனுக்கு இரண்டு மகன், ஒரு மகள் என்று மூன்று மக்கட் செல்வங்கள் பிறக்க குருப்ரசாத்தின் மனைவிக்கோ நெடுநாளைய மருத்துவ உதவியுடன் கௌசல்யா மட்டுமே ஒற்றை வாரிசாய் மாறிப்போனாள். யாழும் கௌசல்யாவும் ஒரே வயதினர். கௌசல்யாவை தன் நண்பன் வீட்டிலே மணமுடித்து கொடுக்க நினைத்து மீராநந்தனிடம் அவனது விருப்பத்தை குருபிரசாத் கேட்க நந்தனோ “எனக்கு கௌசல்யாவும் யாழ் மாதிரி தான் அங்கிள் அவ என்னோட தங்கை” என்று மறுத்துவிட்டான். அவரும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
யாழும், கௌசல்யாவும் ஒரே பள்ளியில் படிக்க ஆரம்பித்து இதோ இன்று வரை ஒன்றாகவே படித்துக்கொண்டிருக்கின்றனர். யார் சொன்னது பெண்களிடம் நீண்ட வருட நட்பு இருக்காது என்று?? இதோ அதற்கு சான்றாய் யாழும், கௌசல்யாவும் இருக்கிறார்களே. இருவரும் என்ன தான் அடித்துக்கொண்டாலும் அடுத்த இரண்டாவது நிமிடம் பேசிவிடுவர். அவர்கள் பேசாமல் இருக்கிறார்கள் என்றால் அது அந்த இரண்டு நிமிடமாக மட்டுமே இருக்கும். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் யாரையும் வர விட்டதில்லை இருவரும்.
இருவரும் தனித்து அவரவர் வீட்டில் இருந்ததைவிட ஒன்றாய் ஒரே வீட்டில் தான் அதிகம் இருப்பர். இருவருக்கும் இரண்டு வீட்டிலும் தனித்தனி அறைகளும் உண்டு. அதில் அவர்களுக்கு தேவையானது அனைத்தும் இருக்கும். இருவருக்கும் இரண்டு அம்மா இரண்டு அப்பா. இவர்கள் இருவரையும் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் இரட்டை பிறவிகளோ என்று கூட சில நேரங்களில் எண்ணுவதுண்டு.
பனிரெண்டாவது முடிந்ததும் தானும் மருத்துவம் பயில்வதாய் தன தந்தையிடம் கூறிய யாழோ, கௌசல்யாவின் ஆசை வேறாக இருக்க அதையே தன்னுடைய ஆசையாகவும் மாற்றிக்கொண்டாள். அதன் வெளிப்பாடே இந்த பேஷன் டெக்னாலஜி படிப்பு. இந்த உண்மை கௌசல்யாவிற்கு தெரியாமல் இன்றுவரை காத்து வருகிறாள் யாழ். அவள் தன் தோழியிடம் ஒன்றை மறைத்திருக்கிறாள் என்றால் அது யாழின் இந்த ஒரு ஆசையை மட்டுமே!!!
இன்றோ தன் தோழியின் நிலை கண்டு பதறிய கௌசல்யா அவளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள். தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே நின்றிருந்த கௌசல்யாவோ, அனைத்து கடவுளிடமும் வேண்டுதல் விடுத்துக்கொண்டிருந்தாள். வெளியே வந்த ஒரு மருத்துவரிடம் “என்ன ஆச்சு டாக்டர்” என்று கௌசல்யா கேட்க “அவங்க தூக்க மாத்திரை ரொம்ப அதிகமா எடுத்து இருக்காங்க. அது தான் அவங்களை மயக்கத்துக்கு கொண்டு போய்டுச்சு. நாங்க டிரீட்மென்ட் குடுத்துட்டு இருக்கோம். பயப்பட தேவை இல்ல. ஒரு ஆறு மணிநேரத்துல முழிச்சுடுவாங்க” என்று அவர் கூற, அவர் சொன்ன எதுவும் காதில் விழாதவளாய் முதல் வாக்கியத்தையே யோசித்த படி நின்றிருந்தாள் கௌசல்யா.