“டேய் சிரிக்காத கொன்றுவேன்… நான் உன் மேல கொல காண்டுல இருக்கேன்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தவளை கழுத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“விடு டா என்னை விடு” என்று சிலுப்பியவளை தலையில் வலிக்காதவாறு இலேசாய் ஒரு முட்டு முட்டி
“விட முடியாது டி குட்டி சாத்தான்” என்றான்.
“இப்போ மட்டும் ஏன் டா பேசுர? இருபது நாளா நான் இந்த வீட்டுல தான் இருக்கேன் நினைவு இருக்கா? ஒரு வாட்டி வந்து பேசுனியா” என்று கலங்கிய கண்களோடு நந்தனை பார்க்க அவன் மனதிலோ வீட்டுல எல்லாரையும் ரொம்ப கஷ்டபடுத்திட்டோமோ என்ற எண்ணம் தலைதூக்கியது.
ப்ரியா அவனது மருத்துவமனையில் பணிபுரிய சேர்ந்த நாள் முதல் வீட்டில் முகம் கொடுத்து கூட பேசாத தன்னுடைய மடத்தனத்தை அறிந்து குற்ற உணர்ச்சி மேலோங்க
“சாரி டா யாழ் ஏதோ யோசனையிலே இருந்துட்டேன்” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினான்.
“எனக்கு உன்னோட சாரிலாம் வேண்டாம்… எப்பவும் ஒன்னு செய்வியே அதை செய்” என்று மிரட்டினாள்.
“யாழ் குட்டி அப்போலாம் நாம மட்டும் இருப்போம் இங்க எல்லாரும் இருக்காங்களே… நான் இன்னொரு நாள் செய்யவா?” என பாவமாய் நந்தன் கேட்க
“அதெல்லாம் முடியாது இப்போ சிட்டப்ஸ் போட போறியா இல்லையா?” என்று இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
“சரி தாயே போடுறேன் கவுண்ட் பண்ணிக்கோ” என்றபடியே யாழின் முன்பாக தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருந்தான் நந்தன்.