“கிருஷ்ணா ட்ரஸ்ட்” எச் ஐ வி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம், ப்ரியாவின் பலநாள் ஆசை அவளது பிறந்தநாளில் நனவாகியது. அதுவும் அவளுக்கே தெரியாத அவளது பிறந்தநாளில். ஆம், இருபது வருடங்களுக்கு முன் ஆசிரம வாசிகள் அவளை கண்டெடுத்த நாள் அதுவே அவளது பிறந்தநாளும் ஆகியது. இதுவரை கோப்புகளில் மட்டுமே எழுதப்பட்ட நாள் முதன்முறையாக ப்ரியாவின் தோழிகளின் துணையோடு கொண்டாட செய்கிறான் நந்தன்.
இரவு நேரத்திலும் மின்விளக்குகள் ஒளிர அந்த கட்டிடத்தையும், அங்கு கூடியிருந்தவர்களையும் கண்டு மூச்சு விடவும் மறந்து நின்ற ப்ரியா “ரிப்பன் கட் பண்ணு” என காவியா பிடித்து உலுக்கவும் தான் சுயநினைவு பெற்றாள். கண்களில் நீர் திரண்டிருக்க வாய் திறந்து பேச அவளிடம் வார்த்தைகள் தான் பஞ்சமாய் போயிற்று.
ரிப்பன் வெட்டி உள்ளே செல்ல காவியாவின் குடும்பத்தினரும், சந்தியாவின் குடும்பத்தினரும், அவள் வளர்ந்த ஆசிரமத்தின் நிர்வாகிகள் சிலரும் ஒவ்வொருவராய் அவளுக்கு வாழ்த்து கூற புன்னகையோடு ஏற்றுக்கொண்டாள். தன் தோழிகள் இருவரையும் தேட அவர்களோ அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர். ப்ரியா தங்களை நோக்கி வருவது தெரிந்ததும் “டாடா அண்ணா அப்பறம் பேசுறோம்” என அழைப்பை துண்டித்தனர்.
ப்ரியவோ இருவரையும் கழுத்தோடு அணைத்துக்கொண்டு “நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். உங்களை என்னோட வாழ்க்கைல சந்திச்சது தான் நான் செய்த பெரும் பாக்கியம். நீங்க எப்பவும் என்கூடவே இருப்பீங்க தான” என கேட்டபடியே அவளது அழுகை ஆரம்பமாக சந்தியாவோ “உனக்கு எப்பவும் நாங்க இருக்கோம்” என்று ப்ரியாவின் முதுகை வருடியபடியே பேசினாள்.
“ச்சு ச்சு யாராவது அந்த குடத்தை கொண்டு வாங்கப்பா ஏற்கனவே எங்க வீட்டுல தண்ணி பிரச்சனை வேற. இங்க ரெண்டு பேரு டேமை திறந்து விட்டு இருக்காங்க ரெண்டு குடம் தண்ணியாவது நான் பிடிச்சுட்டு போவேன். எங்க அம்மாவும் என்னை பெருமையா பேசும்” என சகஜமாக்க காவியா பேச சந்தியாவும், ப்ரியாவும் அவளின் தலையிலே இரண்டு கொட்டு வைக்க காவியாவோ தன் தலையை தேய்த்தபடியே “ஏய் பிசாசுகளா வலிக்குது போங்க நான் போறேன் என அவ்விடம் விட்டு நகர பார்த்தாள்.
ப்ரியாவோ “உன்னை அவ்வளோ சீக்கிரம்லாம் விட முடியாது டி.. இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு” என சொல்லி சிரிக்க பல நாள் கழித்து தங்களது தோழியின் முகத்தில் கண்ட சிரிப்பில் சந்தியாவும், காவியாவும் சற்றே நிம்மதியடைந்தனர். பின் ஓரிடத்தில் மூவரும் அமர ப்ரியவோ “மொத்தம் எவ்வளவு செலவு ஆச்சு?” என கேட்டாள்.
“இது உன்னோட சொத்து தான இதுக்கு நாங்க என்ன செலவு செஞ்சோம்” என்று காவியா வாயைவிட சந்தியாவோ அவளின் கையை கிள்ளினாள். அப்பொழுது தான் காவியா தான் உலறி கொட்டியதை உணர்ந்து தன் நாக்கை கடித்தாள்.