கொண்டிருந்தான். அந்தப் பெண்களைப் பார்த்ததும் மல்லிகா விம்மினாள். இதற்குள் செல்லம்மாவும், சந்திராவும் பதறிக் கொண்டே வந்தார்கள். ‘ஹார்பார்’ கந்தசாமியும், கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்தான். ஓடப்போன ரமணனை, ஒருத்தி பிடித்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்காரி இறங்கிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா... என்ன பண்ணினான்...”
மல்லிகாவால், முதலில் பேச முடியவில்லை. முயன்றாலும் முடியவில்லை. திக்கித் திணறிவிட்டு துள்ளும் வெட்டுக் கிளிபோல், விட்டு விட்டுப் பேசினாள். பிறகு வேகமாகப் பேசினாள்.
“இவன்... இந்த முட்டாள்... என்... கையைப் பிடித்துக் கொண்டு ‘பதில் லட்டர் எழுதிட்டியா’ன்னு கேக்குறான். இரண்டு நாளைக்கு முன்னால... ஒரு லட்டர் கொடுத்தான்... நான் படிக்காமலே கிழிச்சிட்டேன். அநாவசியமான ரகளை வேண்டாமுன்னு சும்மா இருந்துட்டேன். இன்றைக்கு காலையில் கூட, இவனைப் பார்த்து காறித் துப்பினேன். (அவள் காறித் துப்பியதை ரமனன், அவள் தனக்கு முத்தம் கொடுக்கப் போவதாக சமிக்ஞை செய்வதாய் நினைத்திருந்தான்...) அப்படியாவது இந்த தடிமாடு திருந்திடுவான்னு நினைத்தேன். கடைசியில, என் கையைப் பிடித்து... அப்பா... அம்மா... என்னை எதுக்காகப்பா இங்கே இருக்க வைக்கிறீங்க...? என்னை வந்து கூட்டிட்டுப் போங்கப்பா. என்னை கையை பிடிக்கலாமுன்னு ஒரு காலிப் பயல் நினைக்கிற அளவுக்கு ஆயிட்டேனே... ஆயிட்டேனே... அய்யோ... யாராவது என்னை... தியாகராய நகர்ல கொண்டு விட்டுடுங்களேன்... அப்பா... அம்மா என்னால இங்கே இருக்க முடியாதுப்பா... முடியாதும்மா... அம்மா... அம்மா...”
சுற்றி நின்ற பெண்களால், கோபத்தை அடக்க முடியவில்லை. ஒருத்தி ரமணனின் சட்டைக் காலரையும், இன்னொருத்தி, அவன் கழுத்தையும் பிடித்துக் கொண்டு, “ஏழைப் பொண்ணுன்னால் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற நெனப்பாடா கஸ்மாலம். காண்டா மிருகம், கோயக் கண்ணா. இருக்க முடியாட்டி உன்னோட அக்காளை இழுக்க வேண்டியது தானடா...” என்று சொல்லிக் கொண்டே, பெண்கள், அவனை ஆளுக்கொரு பக்கமாக இழுத்த போது, ‘ஹார்பார்’ கந்தசாமி, “ஒத்திக் கங்கமே...” என்று சொல்லிக் கொண்டே, ரமணன் மீது பாய்ந்தான். பல பளுவான மூட்டைகளைத் தூக்கும் அவன், அவனை ஒரே தூக்காகத் தூக்கி, உள்ளே கொண்டு வந்து, வீட்டுக்கார அம்மாவின் முன்னால் போட்டான். போடப்பட்டவனை மீண்டும் தூக்கி நிறுத்தி, கன்னத்திலும், காதுகளிலும் கும்மாங்குத்துக்களை விட்டுவிட்டு, பிறகு “ஒயுங்கா இரு... இல்லன்னா... உயிர எடுத்துடுவேன்...” என்று சொல்லிவிட்டு, ஒரு தூணில் போய் சாய்ந்து கொண்டான்.