இருந்தால், நான் போலீஸ் கமிஷனர் கிட்ட போயிட்டு, அப்படியே முதலமைச்சர் கிட்டயோ, கவர்னர் கிட்டயோ போக வேண்டியதிருக்கும்.” மல்லிகா ஆங்கிலத்திலேயே பேசினாள். தாய்மொழியில் பேசுவதை அதிகாரிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற அவல நிலையை உணர்கிறவள் போல.
சப் - இன்ஸ்பெக்டர் சிறிது யோசித்துவிட்டு, “மிஸ்டர் ரமணன்... நீங்களும் ஸ்டேஷனுக்கு வாங்க. யோவ்! கந்தசாமியோட கையை விடுய்யா...” என்றார்.
ரமணன், அக்காளுக்குப் பின்னால் ஒளிந்தான். “அண்ணா போன் போட்டு சொன்ன பிறகும்... இவனையா கூப்பிடுறீங்க...” என்று வீட்டுக்காரி சொன்ன போது, மல்லிகா, பிடிக்க வேண்டிய இடத்தைப் பிடித்தாள்.
“பார்த்தீங்களா சார்... என் அண்ணா அவரை அடிச்சார்னு நீங்கள் வரவில்லை. யாரோ போன் பண்ணினாங்கன்னு, நீங்கள் வந்திருக்கீங்க...”
சப்-இன்ஸ்பெக்டருக்கு, வீட்டுக்காரி மீது கடுமையான கோபம். துப்புக்கெட்ட மூதேவி! அப்பன், குடிலுக்குள் இல்லைங்கிறது மாதிரி... போன் சமாச்சாரத்தை சொல்றாளே...”
பிறகு, சப்-இன்ஸ்பெக்டர், வந்தவேகம் எங்கேயோ போக, சிரித்துக் கொண்டே பேசினார்.
“நீங்கல்லாம் பெரியவங்க... ஒற்றுமையாய் இருக்கணும். ஒரு தாய் மக்கள் மாதிரி பழகணும். ரமணன் உங்களுக்கு சிஸ்டர் இருக்கிறது அல்லவா! அதே மாதிரி இந்த பாப்பாவையும் பார்க்கணும். மல்லிகா நீங்களும், அவர் தற்செயலாப் பார்க்கிறதையும் தப்பா நினைக்கப் படாது. கந்தசாமி இனிமேல் கைநீட்டுற வேலையை வச்சுக்காதே. நாங்கள் எதுக்காக இருக்கோம்? இனிமேல் இந்த மாதிரி ரகளை வந்தால், லாக்கப்பில் தள்ளிடுவேன்.”
“எல்லோரையுந்தானே சார்” என்றாள் மல்லிகா.
“ஆமாம்... எல்லோரையுந்தான்... யாராய் இருந்தாலும்... எங்களுக்கு ஒரே மாதிரிதான்.”
சப்-இன்ஸ்பெக்டர், கீழே விழுந்தாலும் மண்படாத லத்திக் கம்பை தட்டிக் கொண்டே, போலீஸ்காரர்களுடன் போய்விட்டார். எல்லோரும் மல்லிகாவைப் பெருமிதத்துடன் பார்த்தார்கள். என்னமாய்... இங்கிலீசுல விளாசுகிறாள்... அடேயப்பா.
வீட்டுக்காரி, அடைகாக்கும் கோழி மாதிரி, வீட்டுக்குள் அடைந்து கொண்டாள். வெளியே தலைகாட்டவில்லை.
அதே சமயம், ‘இட்லி’ ஆயா பேசுவது, காதுக்குள் விழுகிறது.
“நீ நிசமாவே... ராசாத்தி குயந்தே... ராசாத்தி... நீ காட்டியும் இல்லாட்டா நம்ம கந்தசாமியை... போலீஸ்காரங்க... கந்தலி கோலமா ஆக்கியிருப்பாங்க... நீ... தியாகராய நகர்ல... பெரிய வீட்ல இருந்து இங்கே வந்தப்போ... ஆயா அழுதேன் குயந்தே... அழுதேன்...