"வாடகைப் பணம் ...?" என்று இழுத்துப் பறித்துக் கொண்டு ஆரம்பித்தார் மாசிலாமணி.
"அதை அவரிடமே கொடுங்கள். இல்லாத போனால் இந்த விஷயத்தைத்தான் நானே கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே. நீ ஏன் கை நீட்டினே'ன்னு எங்கிட்ட பின்னால் பாய்வார். நான் போய் ஐயாவிடம் நீங்கள் வந்தாச்சுன்னு சொல்லிவிட்டு வரேன்."
கணக்குப் பிள்ளை அப்பால் சென்றதும், மாசிலாமணி மனைவியைப் பார்த்து, "இப்படியே நழுவிடுவோமே! திரும்பத் திரும்ப வாடகை வாடகைன்னு நினைவு படுத்திக் கொல்கிறானே!" என்றார்.
"அழகுதான்" என்றாள் காமாட்சி. கணக்குப் பிள்ளைக்கு என்ன தெரியும்? அவருக்குக் கணக்குத்தான் முக்கியம். மனிதர்களா பிரதானம்? அவர் அப்படித்தான் பேசுவார்: அவருக்கு அதுதான் நியாயம். நாம் அவரையா பார்க்க வந்தோம்? ரங்கநாத முதலியார் ரொம்ப நல்ல மாதிரி. நீங்க வேணுமானால் பாருங்கள். அவர் நம்மிடம் வாடகையைப் பற்றி வாய் திறக்கமாட்டார். அப்படியே பேசினாலும் சமாதானம் சொல்லிச் சமாளிக்களாம்" என்று தைரியம் கொடுத்தாள்.
இத்தருணத்தில் கண்ணாடி மணித்திரைகள் அகன்று, கலகலவென்று சப்தப்படுத்த, "வாங்க, வாங்க!" என்று வரவேற்றபடியே கூடத்துக்குள் நுழைந்தார் ரங்கநாத முதலியார். மரியாதைக்காக எழுந்தவர்களைப் பார்த்து, "உட்காருங்க, உட்காருங்க! நமக்குள்ளே என்ன உபசாரம்? அட, உட்காருங்கோ சொல்றேன்!" என்று வற்புறுத்தி அவர்களை அமரச் செய்துவிட்டுப் பிறகுதான் தாம் உட்கார்ந்தார்.
"கணக்குப் பிள்ளை! கணக்குப் பிள்ளை" என்று அவர் அழைத்ததும் "இதோ, வரேன்!" என்று குரல் கொடுத்தபடியே ஓட்டமும் நடையுமாக வந்து துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு நின்றார் அவர்.
"எங்கேய்யா, பலகாரம்? இவர்களைச் சும்மா உட்கார வைச்சிருக்கியே?"