துணிமணிக்கு அடியில் மறைவாக வைத்தாள். கீழே இறங்கி வந்தாள்.
"வாருங்கள், வாருங்கள்!" என்று ரங்கநாத முதலியாரை வரவேற்று ஃபானை இயக்கி விட்டுவிட்டு அவர் எதிரே அமர்ந்தாள் பவானி. அவர் எப்படி ஆரம்பிப்பது, என்ன பேசுவது என்று தயங்குவார் என எதிர்பார்த்தவளாகத்தானே வழிவகுத்துத் தந்தாள். "ரங்கநாதன் ஸார்! திருநீர்மலையில் ஏதேதோ அனுசிதமான காரியங்கள் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாஸ்தவம்தானா? என்னை உங்கள் மகள் போல் பாவித்துக் கொண்டு சொல்லுங்கள். பாரம் குறையும்" என்றாள்.
இதற்காகவே காத்திருந்தவர் போல் ரங்கநாத முதலியார் மடை திறந்தவெள்ளமாக அங்கு நடந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்தார். முறையீடுகளுக்கிடையில் கல்யாணத்தையும் அவன் தோழர்களையும் ஐந்தாறு முறை வைது வைத்தார். "அந்த விடலைகள் உங்களைக்கூடப் பின்னோடு வருமாறு அழைத்தார்களாமே? கேள்விப்பட்டேன். ஆனால் இது தகாத செயல் என்று கூறி அவர்களுடன் போக மறுத்து விட்டீர்களாம். அதற்காக உங்களைப் பாராட்டிவிட்டு அப்படியே எனக்காக நீங்கள் கேஸ் நடத்தி என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் வந்தேன்" என்று முடித்தார் ரங்கநாதன்.
"அது எப்படி சாத்தியம், மிஸ்டர் ரங்கநாதன்? நேற்று வரை ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் தாமே உங்களுக்கு வக்கீல்! அவரையே கேஸ் நடத்தச் சொல்லலாமே? அவர் மகன்தான் இந்தக் கலாட்டாவில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்றாலும் கோபாலகிருஷ்ணன் நேர்மையானவர். சொந்த விருப்பு வெறுப்புக்கள், பாசங்கள் தமது தொழிலைப் பாதிக்க விடமாட்டார்."
"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று பவானியின் கருத்தை மறுத்தார் ரங்கநாதன். "அவரே இவர்களைக் கிளப்பி விட்டுவிட்டுப் பின்னணியில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறார். பஸ்ஸில் அவரும் கூடவே ஏறி வந்தாராம். ஆனால் திருநீர்மலையை நெருங்கியதும், 'நான் வந்தால் நன்றாயிராது. ரங்கநாதன் என் நெருங்கிய நண்பன். அதனால் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்ல். நீங்கள் போய்க் காரியத்தை முடியுங்கள்' என்றாராம்.
"அப்புறம் இவர் வேறு பஸ் பிடித்துப் போயிருக்கிறார். அதற்குள் இந்தக் கலாட்டா வெல்லாம்