Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 41 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 41 -- கல்யாணத்தில் கலாட்டா!
கமலாவைப் பாயில் அமரச் செய்து தலைவாரத் தொடங்கினாள் காமாட்சி அம்மாள்.
"அநாவசியமா உனக்குச் சிரமம். தலை சாமானெல்லாம் வைத்துப் பின்ன வேண்டி யிருக்கு. இல்லாத போனால் நானே பின்னிக் கொண்டுவிடுவேன்" என்றாள் கமலா.
"சரி, சரி! ரொம்பத்தான் பிகு பண்ணிக் கொள்ளாதே! நாளைக்குத் தலைவாரிப் பின்ன ஒருத்தி, புடவை கட்டிவிட ஒருத்தின்னு வேலைக்காரிகளை நியமித்துக் கொள்வாய். நான் பின்னுவது இதுதானே கடைசித் தடவை?" என்றாள் காமாட்சி.
'முதல் தடவையும் இதுதானே' என்று கூற நினைத்தாள் கமலா. ஆனால் சொல்ல வில்லை. அவளுக்கு நினைவு தெரிந்து காமாட்சி அம்மாள் அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டதோ தலைவாரிப் பின்னியதோ எதுவும் கிடையாது. எனவே இன்றைய திடீர்க் கரிசனம் அவளுக்குப் புரியவும் இல்லை; பிடிக்கவும் இல்லை.
"இந்தா, இப்படிக் குனிஞ்சுண்டா எப்படிப் பின்னுகிறது? தலையை நிமிர்த்து. மணையில் உட்கார்ந்த பிறகு வெட்கப்பட்டுக் கொள்ளலாம்" என்ற காமாட்சி, கமலாவின் முதுகிலே உள்ளங்கையை வைத்து ஓர் அழுத்து அழுத்தினாள். விடுபட்ட ஸ்பிரிங் சுருள் போல் 'விண்'ணென்று நிமிர்ந்தாள் கமலா. எதிரே யிருந்த கண்ணாடியில் அவள் முகம் காமாட்சிக்குத் தெரிந்தது.
"அடி பாவி! நல்ல நாளும் அதுவுமா எதுக்குடி இப்படி அழறே? கண்ணீரை மறைக்கத்தான் அப்படிக் குனிந்த தலை நிமிராமல் இருந்தாயா? அங்கே போய் மணையில் உட்கார்ந்த பிறகு இப்படிக் கண்ணீர் விட்டுக் கலங்கினாயோ தெரியும் சேதி! எதற்கு இப்படி எதையோ பறி கொடுத்து விட்டது போல் முகத்தை வைத்துக் கொள்கிறாய்? உனக்கு என்ன கேடு வந்துவிட்டது? கோடீசுவரன் வந்து குப்பையிலே கிடந்த உன்னை அரண்மனையிலே வைக்கிறேன் என்கிறான். அதற்குக் கசக்கிறதோ? நாளைக்கு அந்த மாளிகையின் எசமானியாக இருக்கும்போது என்னைத் திரும்பிகூடப் பார்க்க மாட்டாய்!"