காமாட்சி அம்மாள் கமலாவைத் தோளில் சார்த்தியபடி ஒரு மூலையில் பயந்து நடுங்கியவாறு நின்றாள். கமலா விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். விசு, "அப்பா! எனக்குப் பயமாக இருக்கு, அப்பா!" என்று திரும்பத் திரும்பக் கூறியபடி மாசிலாமணியின் கால்களைக் கட்டிக் கொண்டு நின்றான். அவரோ ஏதொன்றும் புரியாமல் பிரமித்துப் போயிருந்தார்.
கல்யாணம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திட்டம் சரி வர நிறைவேறியதைத் தெரிந்து கொண்டு மூலையில் இருந்த கமலாவையும் அவள் தாயாரையும் நெருங்கினான்.
"கமலா! நான் இப்போது இங்கே தாமதிப்பதற்கில்லை. உடனே ராமப்பட்டணம் திரும்ப வேண்டும். இன்னும் சற்று நேரத்தில் என் அப்பா இங்கே வருவார். உங்களையெல்லாம் பத்திரமாக ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார். நீ கவலைப் படாதே! உனக்கு இனி அந்தக் கிழக் கோட் டான் ரங்கநாதன் ஒரு தொந்தரவும் தராது. நன்றாக அவருக்குப் பாடம் கற்பித்து விட்டோம்!"
விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த கமலாவுக்குத் திடீரென்று எங்கிருந்துதான் அத்தனை துணிச்சலும் ஆவேசமும் வந்ததோ தெரியாது. கண்ணீர் வடிந்து கரை படிந் திருந்த முகத்தை விருட்டென்று நிமிர்த்தினாள். கோபமும் தாபமும், ஏக்கமும் ஏமாற்றமும் பிரதிபலிக்கக் கல்யாணத்தை நேருக்கு நேர் பார்த்தாள். பிறகு, "சீ! நீயும் ஓர் ஆண்பிள்ளையா?" என்றாள்.
கல்யாணத்துக்குத் தன் தலையில் இடியே விழுந்துவிட்டது போல் இருந்தது. அவன் என்ன பதில் சொல்வது. எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் திகைத்தான்.
இதற்குள் வாசலில் பஸ் ஹாரன் ஒலி கேட்டது. பஸ்ஸில் ஏறாமல் அவனுடன் நின்ற வாலிப நண்பர்கள் ஓரிருவர், "கல்யாணம்! சீக்கிரம் வாப்பா! விளக்க உரையெல்லாம் அப்புறம் நடக்கலாம்" என்று துரிதப் படுத்தினார்கள். அங்கே காலதாமதம் செய்வது ஆபத்து என்று நினைவூட்டினார்கள்.
கல்யாணம், கமலாவை, 'என்னை மன்னித்துவிடு' என்பது போல் ஒரு முறை பார்த்தான். "எல்லாம் உன்னுடைய நன்மைக்குத்தான் செய்தேன், கமலா! இப்போதில்லை யானாலும் என்றாவது ஒருநாள் இதை நீ புரிந்து கொள்வாய்" என்றான். பிறகு 'விருட்டென்று திரும்பிச்