"ஒட்டும் தையலுமாக இருந்த அந்தப் பழம் புடவையிலேயே அவள் எத்தனை அழகாகக் காட்சி அளித்தாள்! இனி அவளை எப்படியெல்லாம் அலங்கரித்து ஆசை தீரப் பார்க்கலாம்!"
"திருமாங்கல்யதாரணம் ஆகலாமா?" என்று மாப்பிள்ளையையும் அருகிலிருந்த வேறு இரு பெரியவர்களையும் கேட்டு அனுமதி பெற் றுக் கெண்டார் புரோகிதர். அச்சமயத்தில் சத்திரத்தின் வாசலில் பஸ் வந்து நின்றது. கல்யாணமும் அவர் நண்பர்களும் இறங்கித் திபுதிபுவென்று ஓடி வந்தார்கள். சிலர் நேரே மேளகாரரிடம் போய் நாயனத்தையும் தவிலையும் பிடுங்கிக் கொண்டு தெருப்பக்கம் சென்றார்கள். ஒருவன் சர்க்கரைத் தட்டை எடுத்துத் தரையில் சிதறினான். இன்னொருவன் சந்தனக் கிண்ணத்தைக் கவிழ்த்தான். வேறு ஒரு திடகாத்திர தேகம் உள்ளவன் புரோகிதரைத் தூக்கி நிறுத்தி மண்டபத்துக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனான். ஒருவன் ரங்கநாதன் கரத்திலிருந்த தாலியை வெடுக் கென்று பிடுங்கிக்கொண்டான். மற்றொருவன் விரித்திருந்த ஜமக்காளம் ஒன்றை இழுத்து ரங்கநாதனின் மீது போட்டான்.
பந்தலில் இருந்தவர்கள் எழுந்து இரைச்சலும் கூச்சலும் இட்டுக் கொண்டு அங்குமிங் கும் ஓடினார்கள். பந்தல் ஒரு மூலையில் சரிந்து விழுந்தது. ஒருவன் "நெருப்பு! நெருப்பு!" என்று கத்தினான். "ஜப்பான்காரன் வந்து விட்டான்" என்றுகூட ஒரு கேலிக் குரல் எழுந்தது! ஜப்பான்காரன் வந்து விட்டதாக நம்பினார்களோ இல்லையோ, வாலிபர்கள் சிலர் 'ரௌடி' களாக மாறிக் கல்யாணத்தைக் கலைப்பதை எல்லாரும் புரிந்து கொண்டார்கள். ரங்கநாத முதலியாரின் அழைப்பை ஏற்று வந்திருந்த சொற்ப விருந்தினரும் பரபரப்படைந்து கிளம்பினார்கள். அந்த வாலிபக் கூட்டத்தை எதிர்க்கவும் அச்சம்; அங்கே இருக்கவும் பயம். தப்பினால் போதும் என்று சத்திரத்தைவிட்டு, வாசல் பந்தலைவிட்டு தெருவைவிட்டு, ஊரைவிட்டேகூட ஓடினார்கள். ஊர் எல்லை தாண்டிய பிறகுதான் நின்று திரும்பிப் பார்த்தார்கள்.
அமர்ந்த நிலையில் இருந்த, ரங்கநாத முதலியார் மீது விழுந்த ஜமக்காளம் அவரை நாலா புறமும் நன்றாக மூடியது. நாலு பேராகச் சேர்ந்து அவரைக் குண்டுக் கட்டாக மூட்டை தூக்குவதுபோல் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போனார்கள். பஸ்ஸின் உள்ளே உருட்டி விட்டார்கள். பின்னோடு தாங்களும் ஏறிக்கொண்டு ஜமக்காளத்தின் முடிச்சை இறுக்கினார்கள்.