"நான் ஒன்றும் அப்படி நன்றி கெட்டவள் இல்லை, அம்மா! நாளைக்கு நீங்களே தெரிந்து கொள்வீர்கள்."
"நாளைக்கு எங்களுக்கு நீ சாதிக்கப் போவது கிடக்கட்டும்; இன்றைக்கு எங்கள் மானத்தைக் காப்பாற்று. ஏதாவது ஏறுமாறாக நீ செய்து விட்டால் உன் அப்பாவும் நானும் கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழ வேண்டியதுதான். அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளாதே! மாலை மாற்றும் போதிலிருந்தே சிரித்த முகமாகச் சந்தோஷமாக இருக்க வேண்டும். புரிந்ததா?"
"சரியம்மா" என்றாள் கமலா.
கல்யாணப் பந்தலில் ரங்கநாதனும் கமலாவும் பட்டுப் பாயில் உட்கார்ந்திருந்தார்கள். மேளம் முழங்கிற்று. புரோகிதர் உரக்க மந்திரம் சொன்னார்.
"என்னய்யா, கல்யாணப் பெண்ணுக்குமேல் நீர் வெட்கப்படுகிறீரே! நிமிர்ந்து ஜம் மென்று உட்காருமேன்" என்றார் ரங்கநாதனின் நெருங்கிய உறவினர் ஒருவர், உரிமையோடு. "விரைப்பாக உட்காருகிற ஜோரிலேயே ஒரு பத்து வயசைக் குறைச்சுடலாங்கிறேன்!"
ரங்கநாதன் முகத்தில் வாட்டம் படர்ந்தது. 'வயது விஷயத்தை இத்தருணத்தில் அந்த உறவினர் வேண்டும் என்றே நினை வூட்டினாரா அல்லது மனப்பூர்வமான நல் லெண்ணத்தில் பேசினாரா? இந்தச் சொல்லம்பு கமலாவை எப்படிப் பாதித்திருக்குமோ? அவர் கவலையோடு கமலாவை ஒரு முறை திரும்பிப் பார்த்தார். அவள் தலை குனிந்திருந்ததால் முகத்தைப் பார்க்க முடியவில்லை. என்றாலும் அவள் அமர்ந்திருந்த நிலையிலும் அழகை ரசிக்க முடிந்தது. தலைகொள்ளாத ஆபரணங்கள். புஷ்பம்; புதுப் பட்டு ரவிக்கையின் 'பஃப்' மடிப்புக்குக் கீழிருந்து புறப்பட்டு முழங்காலைச் சுற்றி வளைத்த வாழைத் தண்டுக் கரங்கள். புடவைக் கொசுவங்களுக்கு இடையிலிருந்து நீண்ட செம் பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்கள். அவற்றின் ஐந்து விரல்களையும் தனித் தனியே தொட்டுப் பார்த்து அவற்றின் மென்மையை ரசிக்க வேண்டும் என்று எண்ணினார் ரங்கநாதன். 'விரல்களை மட்டும்தானா?' என்று எண்ணியபோது அவருக்கு மேனி சிலிர்த்தது. கமலா தன்னிடம் மனப்பூர்வமாகத் திருமணத்துக் குச்சம்மதம் தெரிவித்த தினத்தை எண்ணிப் பார்த்தார் அவர்.